Friday, April 29, 2016

11.சித்தன்னவாசல் சிற்பங்கள்

டாக்டர்.சுபாஷிணி



தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கலாச்சார பின்னனியும் வரலாற்றுச் சிறப்பும் பெற்று தனித்துவத்துடன் விளங்குகின்றது.  இந்த மாவட்டத்தில் வளம் மிக்க வரலாற்றுச் சின்னங்கள் ஏராளம் இருக்கின்றன. கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், குடைவரைக் கோயில்கள் என்று தமிழகத்தின் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னங்கள் சூழ்ந்த பகுதியாக புதுக்கோட்டை விளங்குகின்றது. கட்டுமானச்சிறப்பு கொண்ட கோயில்கள், சிற்ப வேலைகள் மட்டுமன்றி, தொல்படிமங்களான விசிறிக்கற்கள், முதுமக்கள் தாழி, என தொல்லியல், மானுடவியல் ஆய்விற்கு பல தகவல்களை வழங்கும் களமாகவும் புதுக்கோட்டை விளங்குகின்றது.

பொதுவாகவே புதுக்கோட்டை தொடர்பான வரலாற்றை பேச ஆரம்பித்தால் நமக்கு முதலில் மனதில் தோன்றும் பெயர் சித்தன்னவாசல் தான்.  சித்தன்னவாசல் எனும் ஊர் புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கின்றது. புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசலுக்குச் செல்லும் இடத்தில் இந்த ஊர் அமைந்திருக்கின்றது. புதுக்கோட்டை பகுதியானது தமிழகத்தில்  சமணம் பரவி செழித்த ஊர்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் சமண சமயம் மிக விரிவாக வேரூன்றி இருந்த பகுதிகளில் முக்கியமானதொரு பகுதியாக இதனைக் கருதலாம்.  மதுரையைப் போலவே புதுக்கோட்டையும் மிகப்பிரபலமாக சமணம் செழித்த ஊர் எனத்தயங்காது குறிப்பிடலாம்.

சித்தன்னவாசல் குகைப்பகுதிக்குச் செல்லும் முன் சாலையோரத்திலேயே பண்டைய வழிபாட்டுச்சின்னங்களான விசிறிக்கற்கள் ஓரிரண்டு சாலையின் இரு பக்கங்களும் இருப்பதை நாம் காணலாம். அவை இருக்கும் இடங்களிலேயே ஈமக்கிரியைச் சடங்குகள் நிகழ்ந்தமைக்குச்  சான்றாக வட்டக்கற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதையும் காணலாம். இப்பகுதியைக் கடந்து செல்லும் போது முதலில் நமக்குத் தென்படுவது ஏழடிப்பட்டம் எனப்படும் பாறைப்பகுதி. இந்த ஏழடிப்பட்டம் எனப்படும் பகுதி பாறைகள் சூழ்ந்த ஒரு பகுதி. இங்கே இயற்கையாக உருவான குகைகள் இருக்கின்றன. இக்குகைப்பகுதிகளில் முன்னர் சமணத்துறவியர்கள் தங்கியிருந்து பள்ளிகளை நடத்தியமைக்குச் சான்றுகளாக இருக்கும் சமணப்படுக்கைகளையும் கல்வெட்டுக்களையும் இன்றும் காணலாம். பாறையின் மேற்பகுதியில் பதினேழு கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. கற்படுக்கைகள் உள்ள பகுதி மழைக்காலத்தில் சேதமடையாமல் இருப்பதற்கு ஏதுவாக மலையில் காடி (இது மழை நீர் வடியும் வகையில் பாறையில் நீர் வடிய செய்யப்பட்ட ஒரு அமைப்பு)  வெட்டப்பட்டுள்ளது. 

சித்தன்னவாசல் கல்வெட்டு என்பது தமிழக தொல்லியல் வரலாற்றிற்கு முக்கியத்துவத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுவது. கி.மு.3ம் நூற்றாண்டிலிருந்து கி.மு.1ம் நூற்றாண்டு எனக்குறிப்பிடப்பிடப்படும்   தமிழி (தமிழ் பிராமி) எழுத்துருக்களில் அமைந்த கல்வெட்டுக்களை இங்கே காணலாம். அவற்றில் சில, சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து மறைந்த சமண முனிவர்களைப் பற்றிய குறிப்புக்களைக் கொண்டதாக அமைந்திருக்கின்றன.  இங்கே அமைக்கப்பட்டுள்ள கற்படுக்கைகளின் மேல் உள்ள கல்வெட்டுக்களை வாசிப்பது மிக சிரமமானதொரு செயலாகவே இருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணம், இங்கு வருகின்ற சுற்றுப்பயணிகளில் சிலரும் பொழுது போக்கிற்காக வருகின்ற இளைஞர்களும் பார்க்கும் இடங்களிலெல்லாம் தங்கள் பெயர்களையும் தங்கள் காதலன் அல்லது காதலி பெயர்களையும்  கீறி வைத்தும், தொலைபேசி எண்களை எழுதி வைத்தும் இங்குள்ள கல்வெட்டுக்களை வாசிக்க இயலாத நிலைக்கு மாற்றியுள்ளமைதான்.

தங்கள் பெயரையோ அல்லது தாம் விரும்பும் நபர்களின் பெயர்களையோ இவ்வகையான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் எழுதி வைக்கும் போது தமது சொந்த இனத்தின் வரலாற்றையே நாம் சேதம் செய்கின்றோம் என்று யோசிக்க பலர் மறந்து விடுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்திற்கு நாம் சென்று வந்தோம் என்பது பிறருக்குத் தெரிய வேண்டும் என நினைத்து சிலர் இவ்வகைக் காரியங்களைச் செய்கின்றனர். ஒரு சிலர் அந்தச் சின்னங்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்பது போல தனது பெயரும் தாம் விரும்புபவர் பெயரும் நிலைத்து நிற்கவேண்டும் என்றும் நினைத்து செய்கின்றனர். அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகச் செய்கின்றனர். காரணம் எதுவாகினும், இப்படிச் செய்ய்வதனால்  இச்சின்னங்கள் இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும் பாறை ஓவியங்களையும் எழுத்துக் குறியீடுகளையும்  கண்டு அவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. இது மிகவும் வருத்தத்திற்குறிய ஒரு நிலை. பொதுவாகவே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்திற்கு நாம் செல்லும் போது அதன் சீரும் சிறப்பும் கெடாத வகையில் நாம் ஒவ்வொருவரும் அதனைப் பாதுகாக்கும் எண்ணத்தை  மனதில் ஏற்படுத்திக் கொண்டு செல்வது மிக அவசியம்.

தமிழர் வரலாறு, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் என்பனவற்றை முறையாக ஆராய முற்படும் போது வரலாற்றுச் சின்னங்கள் தாம் மிக முக்கிய ஆய்வுக்கான ஆவணங்களாக அமைகின்றன. அவை சேதப்படுத்தப்படும் போது முறையான ஆய்விற்கு இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அமைவதால் நம் வரலாற்றை நாமே சீர்குலைத்த நிலையை நாம் ஏற்படுத்தி விடுகின்றோம் என்பதை மறக்க இயலாது.

ஏழடிப்பட்டம் பாறை பகுதிக்கு வலது புறத்தில் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் (கி.பி580 - 630) தான் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறுவதற்கு முன்னர் கட்டிய குடைவரைக்கோயில் ஒன்றுள்ளது. அரிவர்கோயில் என இது அழைக்கப்படுகின்றது. ஆயினும் அதற்குப்பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களான, மாறன் சேந்தன் (கி.பி654 - 670), அரிகேசரி மாறவர்மன் (கி.பி 670 - 700) ஆகியோர் இதனைப் புதுப்பித்துக்கட்டிய செய்திகளை கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது. இந்தக் குடைவரைக்கோயிலின் உட்பகுதியில் இருக்கும் முதல் மண்டபத்தை அடுத்து இரண்டாம் மண்டபம் வருகின்றது. உள்ளே சமண தீர்த்தங்கரர் மூவரின்  புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இக்குடைவரை கோயிலின் சுவர் சித்திரங்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. தமிழகத்து சுவர்சித்திரங்களில் புகழ்மிக்க சுவர் சித்திரமாக இது இன்றளவும் புகழ்பெற்றிருப்பது   இதன் தனிச்சிறப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. 

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் சித்தன்னவாசல், தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் தற்சமயம் உள்ளது. நான் 2013ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளைக் களப்பணிக்காகச் சென்றிருந்த போது விரிவான ஒரு பதிவைச் செய்யக்கூடிய வாய்ப்பு  எனக்கு அமைந்தது. அப்பதிவு விளக்கமாகவும் ஒரு வீடியோ பதிவாகவும் வெளியிடப்பட்டது.  இந்த விழியப்பதிவை யூடியூப் வழி https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg என்ற முகவரியில் கண்டு மகிழலாம்.

சித்தன்னவாசல் கல்வெட்டுக்களையும், குடைவரைக்கோயில் சிற்பங்களையும், ஓவியங்களையும் பதிவு செய்துவிட்டு வரும்போது  கீழே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிலரை சந்தித்தேன். அவர்களிடம் உரையாடி சித்தன்னவாசலின் வரலாற்றுச் சிறப்பை பற்றி கொஞ்சம் விவரித்தேன். அவர்கள் அன்புடன் என்னை அமரவைத்து அவர்கள் கொண்டுவந்திருந்த உணவையும் பழங்களையும் எனக்குக் கொடுத்து சாப்பிடுமாறு அன்புக்கட்டளையிட்டனர். இது மறக்கமுடியாத ஒரு இனிமையான அனுபவம். 

சித்தன்னவாசல் சிற்பங்கள் கற்சிற்பங்கள்; அவை அசையாதவை! இந்தப் பெண்களோ அசையும் சித்தன்னவாசல் சிலைகள், என நினைத்துக் கொண்டே மகிழ்வுடன் மீண்டும் புதுக்கோட்டைக்கு புறப்பட்டேன்.

Thursday, April 21, 2016

10.பிரித்தானிய நூலகத்தில் தமிழ்க்கருவூலங்கள்



காலணித்துவ ஆட்சி என்பது தான் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டிலிருக்கும் வளங்களைச் சுரண்டிக் கொண்டுபோய் தன் நாட்டில் சேர்க்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டது.  

ஒரு நாட்டின் வளங்கள் எனும் போது,  அவை இயற்கை வளங்களாகட்டும், கலைப்படைப்புக்களாகட்டும், அறிவுச் சுரங்கங்களாகட்டும்.. அவை எத்தன்மையினதாயினும், காலணித்துவ ஆட்சி செய்த, அல்லது ஆட்சியை இன்றும் செய்யும் நாடுகள், அவற்றை சிரமம் பாராமல் கப்பலேற்றிக் கொண்டு போய் தங்கள் நாட்டில் வைத்துப் பாதுகாத்து தங்கள்  வளங்களாக அவற்றிற்கு முத்திரை குத்தி பெருமை பட்டுக் கொள்வதில் சளைத்தவர்களல்ல.

இயற்கை வளங்கள் நிறைந்த மலேசியா இந்தோனிசியா போன்ற நாடுகளிலிருந்து இயற்கை வளங்களை முந்தைய காலணித்துவ ஆட்சி செய்த போர்த்துக்கீசிய, டச்சு, இங்கிலாந்து போன்ற அரசுகள் தங்கள் நாடுகளின் பொருள் வளத்தைப் பெருக்குவதற்காக எடுத்துச் சென்றன.  ஆப்பிரிக்க கண்டத்தின் கானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட செம்பணை மரங்கள் மலேசிய காடுகளை அழித்து தோட்டங்கள் உருவாக்கி நடப்பட்டு அதனிலிருந்து வரும் வருமானம் அனைத்தும் இங்கிலாந்து அரசின் போர்க்காலத்தேவைக்கும் நாட்டின் வளத்தைப்பெருக்கவும் பயன்படுத்தப்பட்டன. இதே போல கடந்த இரு நூற்றாண்டுக்கு முன் காடுகளை அழித்து,  ரப்பர் மரத்தோட்டங்கள்  மலேசியாவில் உருவாக்கப்பட்டன என்பது  நாம் அறிந்த செய்தி தான் என்றாலும் அதிலிருந்து பெறப்பட்ட பொருளாதார வளம் என்பது முதலாம் உலகப்போரின் போதும் இரண்டாம் உலகப்போரின் போது பெருவாரியாக இங்கிலாந்து அரசினால் பயன்படுத்தப்பட்டது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.

இந்திய சூழலில் காணும் போது ஆங்கிலேய காலணித்துவ அரசும் சரி ப்ரென்சு காலணித்துவ அரசும் சரி,  அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலப்பகுதியின் வளங்களைச் சுரண்டித் தங்கள் நாட்டில் சேர்ப்பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டனர். ஆனாலும் கூட பெருவாரியான இந்திய நிலப்பகுதி ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அமைந்திருந்தமையால், ஆங்கிலேய அரசு இயற்கை வளங்களோடு அரும்பொருட்கள் பலவற்றையும் கூட தங்கள் நாட்டின் கலைப் பெருமையை விரிவாக்கவும் தங்கள் பேரரசின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிக் கொள்ளவும் எடுத்துக் கொண்டு போய் வைத்துள்ளன. 

ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது ஜெர்மானிய லூத்தரன் மத சபையினர் டென்மார்க அரசின் பொருளாதார உதவியுடன் தமிழகத்தின் சில ஊர்களில் கல்விமையங்களை அமைத்திருந்தனர். அதே போல அவர்களுக்கு முன்னர் தமிழகம் வந்து கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை தமிழக நிலப்பரப்பில் விரிவாக்கிய போர்த்துக்கீஸிய கத்தோலிக்க பாதிரிமார்களும்  கல்விக்கூடங்களை அமைத்தும் ஆய்வு நிறுவனங்களை அமைத்தும் கல்விச்சேவைகள் செய்து வந்தனர். ஆக கடந்த ஐநூறு ஆண்டுகள் என எடுத்துக் கொண்டால் ஐரோப்பிய நாடுகளான போர்த்துக்கல், ப்ரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் தங்கள் ஆளுமையை தமிழக நிலப்பரப்பில் செலுத்திய நிகழ்வுகள் என்பது நிகழ்ந்தது. இந்தச் சூழலில் அரும்பொருட்கள் மட்டுமன்றி அறிவுக்கருவூலங்களும் இந்த ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பது மறுக்கமுடியாத வரலாற்று உண்மை.

இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் காலணித்துவ அரசு திட்டமிட்டு எடுத்துச் சென்ற வளங்களென்பது ஒரு புறமிருக்க, இந்தியாவிற்குப் பணியாற்ற வந்த ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் சொந்தச் சேகரிப்புக்களாகச் சிலவற்றையும் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றனர். உதாரணமாக, இங்கிலாந்தின் விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தை எடுத்துக் கொண்டால், அதில் இருக்கும் பெருவாரியான அரும்பொருட்கள் தனியார் சேகரிப்பிலிருந்து வாங்கி சேகரிக்கப்பட்டமை பற்றிய செய்திகளை அறியலாம். இதே போலத்தான் ஏனைய பிற அருங்காட்சியகங்களில் உள்ள அரும்பொருட்களையும் கூறலாம்.

அரும்பொருட்கள் என்னும் வகையில் நூல்களையும் பனை ஓலைச் சுவடிகளையும் செப்பு ஆவணங்களையும், காகித ஆவணங்களையும் நாம் மறந்து விடமுடியாது. 

உலகின் மிகத் தரம் பாய்ந்த நூலகமான பிரித்தானிய நூலகத்தில் இருக்கும் ஆசிய ஆப்பிரிக்கத் துறையில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஆவணங்கள் மிகப்பல. இங்கே பனை ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், காகித ஆவணங்கள் பழம் நூல்கள், அறிக்கைகள், செய்தித்தாட்கள் என தமிழ்மொழியில் அமைந்த பல அரும்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை அனைத்துமே இங்கிலாந்தின் காலணித்துவ ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் தாம்.

காலின் மெக்கன்சி என்னும் ஆங்கிலேயர்தான்  இந்தியாவில் முதன் முதலாக 18ம் நூற்றாண்டில்  ஆவணப்பாதுகாப்பை செயல் படுத்தியவர். இவரை நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். காலின் மெக்கன்சி இலங்கை, இந்தோனிசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் தனது பணிக்காலத்தில் பல அரும்பொருட்களைச் சேகரித்தார். அவரது ஆவணப் பாதுகாப்பு முயற்சியின் அடிப்படையில் தான் அதற்கடுத்தார் போல நிகழ்ந்த ஆவணப்பாதுகாப்பு முயற்சிகள்,  தமிழ் அச்சுநூல் முயற்சிகள் ஆகியனவற்றை நாம் வரிசைப்படுத்த முடியும். காலின் மெக்கன்சியின் சேகரிப்புக்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டி, ஹிந்தி ,சிங்களம் ஆகிய மொழிகளில் அமைந்தவை. சென்னையில் இருக்கும் கீழ்த்திசை ஆவணப்பாதுகாப்பு மையத்தில் காலின் மெக்கன்சியின்  சேகரிப்பில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள்  பாதுகாக்கப்படுகின்றன. அதே போல வங்காளத்திலும் ஒரு நூலகத்தில் காலின் மெக்கன்சி சேகரிப்புக்கள் உள்ளன. இதற்கடுத்தார்போல,  ஆனால் மிகப்பெரிய எண்ணிக்கையிலான காலின் மெக்கன்ஸி ஆவணத் தொகுப்பு இருப்பது இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் தான்.

இந்த நூலகத்தில் உள்ள ஏழு மாடிகளுக்குச் செல்லும் பாதைக்கு இடையே நீள்சதுர வடிவில் அமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் காலின் மெக்கன்சி ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை மட்டுமன்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த பிரித்தானிய நூலகத்தின் ஆசிய ஆப்பிரிக்க துறையின் கீழ் இருக்கும் சேகரிப்பில், தமிழ் மொழி நூல்கள், ஆவணங்கள், வரைபடங்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்து ஆவணங்கள், செய்தித்தாட்கள், ஆகியனவும் ஏராளமானவை சேகரித்து பட்டியலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

2001ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட பின்னர் ஒரு முக்கியத்திட்டமாக நாம் பிரித்தானிய நூலகத்துடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டு ஆவணப்பாதுகாப்பு முயற்சியைத் தொடங்கினோம். அதன் வழி சில  பழமையான நூல்களை மின்னாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் சேகரத்தில் உலகத்தமிழர் பயன்பாட்டிற்காக இணைத்து வைத்துள்ளோம்.  இந்த நூல்கள் அடங்கிய பகுதியை http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html என்ற எமது வலைப்பக்கத்தில் காணலாம்.

இந்தத்திட்டத்தின் வழி மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களில் 1898ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஹாஸ்ய மஞ்சரி, 1893ம் ஆண்டில் வெளியிடப்பட்ட குதிரைப்பந்தைய லாவணி, , 1899ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மூலிகை மர்மம், 1905ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொடுகுறி சாஸ்திரம் போன்ற நூற்களைக் குறிப்பிடலாம்.

தமிழர் தம் அறிவுக் கருவூலங்கள் ஐரோப்பாவில் பல நூலகங்களிலும், ஆர்க்கைவ்களிலும், தனியார் சேகரிப்பாகவும் பாதுகாக்கப்படுகின்றன. இவை பாதுகாக்கப்படும் விதம் தமிழக சூழலைவிட பன்மடங்கு தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்ரது என்படஹி மறுக்க முடியாது. ஆயினும் கூட தமிழர் தம் அறிவுக் கருவூலங்களான இவை மின்னாக்கத்தின் வழி டிஜிட்டல் தொழில் நுட்பத்துணையோடு பதிவு செய்யப்பட்டு தமிழ் மக்கள் வாசிப்பிற்கு கிடைக்கும் வகையைச் செய்ய வேண்டிய பெரும் கடமை நம் முன்னே இருக்கின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை எம்மால் முடிந்த அள்வு இவ்வகை முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன்.

Wednesday, April 13, 2016

9. தூத்துக்குடி பனிமயமாதா



தூத்துக்குடி நகர் முத்துக்குளித்தல் தொழிலுக்கு மிகப் பிரசித்தி பெற்ற ஒரு நகரம். தமிழகத்தின் தென்பகுதியில் கடற்கரையோரத்து நகரமாக இது அமைந்திருக்கின்றது. 2011ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக தூத்துக்குடி தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைச் செய்து வர இங்கு சென்றிருந்தேன். 

முத்துக்குளித்தல் என்பது கடலுக்குள் நீந்திச் சென்று சிப்பிக்குள் இருந்து முத்தெடுக்கும் தொழில். இப்பகுதி மக்களின் முக்கியத்தொழில்களில் மீன்பிடித்தல், கப்பல் கட்டுதல் எனபனவற்றோடு முத்துக்குளித்தலும் பிரசித்தி பெற்ற தொழிலாக காலம் காலமாக இருந்து வருகின்றது. தூத்துக்குடி முத்துக்கள் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பிய கடல் வணிகர்களால் விரும்பி வாங்கிச் செல்லப்பட்ட பொருட்களில் ஒன்றாக அமைந்திருந்ததைப் பற்றிச் சொல்லும் செய்திகள் இந்தத் தொழில் இப்பகுதியில் நீண்டகாலம் தொடர்ந்து மக்கள் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்திருப்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

தமிழக நிலப்பரப்பில் காலம் காலமாக அன்னிய தேசத்தவர் வருகை என்பது தொடர்ந்து நடந்து வருவதுதான். ஆயினும் இன்றைக்கு ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க மதம் பரப்ப தென்னிந்தியா வந்த போர்த்துக்கீசிய கத்தோலிக்க  மத குருமார்கள் தென் தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் படிப்படியாக இங்கேயே தங்கி  தங்கள் மதம் பரப்பும் பணியை மேற்கொண்டனர். இந்த மத குருமார்கள் தமிழகம் வந்து தங்கள் மதப்பிரச்சாரத்தைத் தொடங்க முற்பட்டபோது தமிழ் மொழி அடிப்படை அறிவு இல்லாமல் தம்மால் இத்தமிழ் நிலத்து மக்களுக்கு தங்கள் இறை போதனைகளை அறிமுகப்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்து கொண்டமையால்  மிகத்தீவிரமாக தமிழ்மொழியைக் கற்றனர். அப்படித் தமிழ் கற்று தமிழில் நூற்களையும் படிப்படியாக இவர்கள் அச்சுப்பதிப்பாக வெளியிட்டமை தான் அச்சுக்கலை தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே அறிமுகப்படுத்த காரணமாக அமைந்தது என்பது வரலாற்று உண்மை.

தூத்துக்குடி பகுதியானது, பரத சமூகத்து மக்கள் நிறைந்த ஒரு பகுதி. கிறிஸ்துவ மதம் இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்கள் சமயத்தால் இந்துக்களாக  இருந்தவர்களே. இன்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரதவ மக்கள்  தூத்துக்குடி கடற்கரையோரத்து முத்துக்குளித்துறை பகுதியில் தங்கள் இயல்பான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் வியாபாரம் செய்ய,  அக்காலத்தில் அப்பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அரேபிய மூர் இன வியாபாரிகளும் இப்பகுதியில் முத்துக்குளித்தல் தொழிலைத் தொடங்கி இருந்தனர். மத்திய கிழக்காசியாவிலிருந்து வந்த அரேபியர்கள்  இவர்கள். இவர்களுக்கும் இங்கேயே காலம்காலமாக முத்துக்குளித்தல் தொழில் புரிந்து வரும் பரதவ இன மக்களுக்கும் அவ்வப்போது ஏதாவது சண்டை சாச்சரவு என்பது நடப்பது வழக்கமாக இருந்திருக்கின்றது.

ஒரு முக்கிய நிகழ்வு கி.பி.1535ம் ஆண்டு நிகழ்ந்தது. ஒரு நாள் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஒரு பரதவ சமூகத்துத் தமிழ்ப்பெண் மாவுப்பணியாரம் விற்றுக் கொண்டிருந்தார்.  அப்பெண்ணை மூர் அராபியன் ஒருவன் அவமானப்படுத்தி விட்டான். இதனை அறிந்த அவள் கணவன் கோபம் தாளாது, அவனோடு சண்டையிட்டான். இந்தச் சண்டை நடந்த போது மிக கொடூரமாக  அந்தக் கணவனின் காதில் அணிந்திருந்த தொங்கட்டான் என்று சொல்லப்படுகின்ற காதணியை அவனது காதோடு சேர்த்து மூர் அராபியன் வெட்டி எறிந்து விட்டான். இது அவ்வூர் பரதவ மக்களுக்கு பெரும் சினத்தை உண்டாக்கியது.  இந்தக் கொடுஞ்செயல் தங்கள் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரிய அவமானமாகக் கருதிய பரதவர்கள், அராபிய  மூர்களோடு சண்டயிட்டு, பலரைக் கொன்றனர். அரேபிய மூர்களும் சும்மா இருக்கவில்லை.   ஆத்திரமடைந்த மூர்கள் கீழக்கரையிலிருந்தும், காயல்பட்டினத்திலிருந்தும் ஏராளமான ஆயுதங்களுடன் திரண்டுவந்து, பரதர்களோடு போரிட்டு நிறைய தமிழ் பரதவ சமூகத்து மக்களையும் கொன்றனர். வெட்டி எடுத்துக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு பரதவ இனத்தவர் தலைக்கும் ஐந்து சிறிய பொற்காசுகள் தருவதாக மூர்கள் வாக்களித்தனர். அவ்வளவுதான்! ஏராளமான பரதவர்களின் தலைகள் வெட்டி எறியப்பட்டன. ஒரு தலைக்கு ஐந்து பொற்காசுகள் என்பது, ஒரு தலைக்கு ஒரு பொற்காசு என்று மலிவாகும் அளவிற்கு ஏராளமான கொலைகள் நடந்தேறின. இது மக்கள் மனதில் பெறும் அச்சத்தை உருவாக்கியது.

மூர் அராபியர்களுடன் ஏற்பட்ட இப்பிரச்சனையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவி நாட வேண்டிய அவசியம் பரதவ மக்களுக்கு ஏற்பட்டது. இது மதமாற்றத்திற்கு நல்லதோர் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.  அச்சமயத்தில் கேரளாவில் இருந்த டாம் ஜோகுருஸ் என்ற போர்த்துக்கீஸிய குதிரை வியாபாரி ஒருவர் பரதவக் குலத் தலைவர்களான பட்டங்கட்டிகள் என்பவர்களிடம் பேசி, அவர்களுக்குப் போர்த்துக்கீஸிய படைகளின் ஆதரவைப் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு பரதவர்கள், கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் என்று ஆலோசனை வழங்க கி.பி.1535ம் ஆண்டின் இறுதியில் பட்டங்கட்டிகள் கொச்சின் சென்று அங்கே முதன்மை கத்தோலிக்க குரு மிக்கேல் வாஸ் அடிகளாரிடம் திருமுழுக்கு பெற்று மதம் மாறினர். இந்த ஒப்பந்ததில்  வாக்களித்தபடி தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதிக்கு  ஒரு பெறும் கப்பற்படையை போர்த்துக்கீஸிய படைத் தளபதி அனுப்பிவைத்து மூர் அராபியர்களுடன் போரிட்டு அவர்களை அடக்கி படிப்படியாக அப்பகுதி முழுமையையும் தம் வசமாக்கிக் கொண்டார். அதன் வழி அப்பகுதி பரதவ மக்களுக்கு போர்த்துக்கீஸியர்களின் பாதுகாப்பு கிடைத்தது.    அதே ஆண்டிலும் பின்னர் 1536ம் ஆண்டிலும் தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதி இந்து சமய பரதவர்கள் 30,000 பேர் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 

அப்படி மதம் மாறிய பரதவ இன மக்கள் தாங்கள் புதிதாக மாறிய மதத்தில் வழிபாட்டினைச் செய்ய முற்பட்டபோது  தங்களுக்கு காலங்காலமாக பழக்கமான வகையிலேயே தங்கள் மத வழிபாட்டினைச் செய்வதை வழக்கமாகக் கொண்டனர்.

கத்தோலிக கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவில் வளர்ந்து விரிவைடந்த மதம். அங்கே ஏசு கிறிஸ்துவின் தாயாரான புனித மேரி அன்னையார் வெள்ளை நிற நீண்ட கவுன் போன்ற உடையில் தான் அனைத்து தேவாலயங்களிலும் காட்சி அளிப்பார். அந்த மேரி அன்னை தூத்துக்குடிக்கு அறிமுகம் செய்யப்பட்ட போது பனிமயமாதாவாக கோயில் கொண்டு அருளினார். அந்தச் சிலை மட்டுமன்றி தமிழகத்தில் அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட தேவாலயங்களில் புனித அன்னை மேரி, வண்ண சேலைகள் கட்டிய வகையில் இந்து கோயில் பெண் தெய்வங்கள் போல உடை அலங்காலாரம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

அது மட்டுமா? 

கத்தோலிக்க மதம் பிறந்த ஐரோப்பாவில்  மத விழாக்களில் தேர் திருவிழா என்பது வழக்கில் இல்லாத ஒன்று. ஆனால் தமிழ் நிலத்தில் இந்து மத பண்டிகை மற்றும் திருவிழாக்களில் தேர் இழுத்துச் செல்வது என்பது நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் ஒன்று.  கத்தோலிக்க மததிற்கு மாறிய தூத்துக்குடி பரதவர்கள் தங்கள் தெய்வ நம்பிக்கையின் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான பனிமய மாதா கோயில் புனித அன்னை மேரிக்கு தேர் இழுத்துச் செல்வதை தொடர்ந்து கடந்த 200 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 

இந்தத் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது தேவாலயத்தின் வலது புறத்தில் இருக்கும் அலுவலகப் பகுதிக்குச் சென்று தேவாலயத்தின் மத குருவைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றேன். தொடர்ச்சியாக அப்பகுதியில் வாழும் எளிய மக்களுக்குத் தேவையான பல உதவிகளை இவர்களது அமைப்பின் வழி தொடர்ந்து செய்து வருகின்றார் என்ற செய்தியை அவரிடம் உரையாடும் போது தெரிந்து கொண்டேன். 

பனிமயமாதா பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றினை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவிற்காக தேவாலத்தின் மத குரு வழங்கினார்கள். அந்தக் கட்டுரை தொகுப்பில் அடங்கியிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கியில் http://www.heritagewiki.org/ வலைப்பக்கத்தில், கிறிஸ்துவம் என்ற தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் கிறிஸ்துவ மதம் தொடர்பான ஆவணங்களைச் சேகரிப்பதில் தொடர்ந்து நாம் ஈடுபட்டு வருகின்றோம். போர்த்துக்கீசிய மத குருமார்களான ஹெண்ட்ரிக்ஸ் ஹெண்ட்ரிக்ஸ் அடிகளார், வீரமாமுனிவர் என்ற பெஸ்கி அவர்கள், மற்றும் லூத்தரேனியன் மத போதகர்களான சீகன்பால்க், க்ரூண்ட்லர் போன்றவர்கள், தமிழ் மொழி ஐரோப்பா வரை பரவ வழி செய்தவர்கள். தமிழ் கிறிஸ்துவம் என்பது மிக விரிவான ஒரு ஆய்வுத்துறை. தமிழகத்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் சில குறிப்பிடத்தக்க இடங்களில் இந்த தமிழகம் வந்து சென்ற கிறிஸ்துவ மத போதகர்களின் கையெழுத்து ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.  அவை மின்னாக்கம் செய்யப்பட்டு பரவலாக ஆய்வுலகில் இவை ஆராயப்படவேண்டும் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு. அதற்கான நடவடிக்கைகள் சிலவற்றிலும் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டு வருகின்றோம் என்னும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Saturday, April 9, 2016

8. பட்டினத்தார் நினைவாலயம்



“ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி 
உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து 
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று 
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் 
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து 
யோகமும்வாரமும் நாளும் அறிந்து

ஒரு கரு உருவாகி,  படிப்படியாக வளர்ந்து,  உலகில் பிறந்து, வளர்ந்து வாழ்க்கையில் லயித்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, பினி, மூப்பு என்ற இயற்கை அனுபவங்களையும் பெற்று, இறுதில் இந்த உலகிலிருந்து விடுபட்டு, மீண்டும் இல்லாது போகும் நிலையை இந்த செய்யுளானது வாசிப்போருக்கு படித்த மாத்திரத்தில் புரியவைத்துவிடும். ஆழமான உண்மையைக் கொண்டிருப்பதனாலேயே இச்செய்யுளின் ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு சொல்லிற்கும் கூட பலமும் தனிச்சிறப்பும் நிறைந்திருக்கின்றது. யாருடைய பாடலிது என்று யோசித்தீர்களேயானால், இப்பாடலுக்குச் சொந்தக்காரர், பட்டினத்தார் என தமிழ் மக்களால் குறிப்பிடப்படும் பட்டினத்து அடிகள் தாம்.

இந்தச் செய்யுளைக் கேட்கும் போது ஒவ்வொரு முறையும் என்  மனம் இந்த புவியில் இருப்பதை விட்டு அகன்று தனி இன்ப நிலையில் சஞ்சரிப்பதை நான் உணர்வதுண்டு. அது ஒரு விதமான வகையில் அமைந்த, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம். 

ஆன்மீகத் தேடலின் அடிப்படையில் பட்டினத்தார் சித்தர் என்ற வகையில் வைத்து வணங்கப்படுகின்றார்; சிறப்பு செய்யப்படுகின்றார். 

பொதுவாகவே சித்தர்கள் என்பவர்களைப் பற்றிய பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் மக்கள் மனதில் உலவுகின்றன. மிக எளிய வகையில் சித்தர்களைப் புரிந்து கொள்ள முயல்பவர்கள், அவர்களை மனிதர்களை விட்டு விலகி நிற்பவர்களாகவும், அலங்கோலமாகக் காட்சி தருபவர்களாகவும், வாழ்க்கையை வெறுத்தவர்களாகவும், பேய் பிசாசுகளோடு பேசக்கூடியவர்களாகவும், மந்திரங்கள் செய்து மாயாஜாலங்கள் செய்து வானில் பறத்தல், தண்ணீரில் மிதத்தல் போன்ற சாகசங்களைச் செய்பவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இப்படி தாம் நினைப்பதோடு நிற்காமல், சித்தர்கள் என்றால் இவர்கள் தாம் என்று அடித்துப் பேசி சிந்தர்கள் பற்றிய தவறான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்பவர்களாக்வும் இவர்களில் சிலர் அமைந்து விடுகின்றனர்.

இயற்கையாகவே நம் தமிழ் மக்கள் மாய மந்திரம் என்றால் ஆகா ஓகோவென்று வியப்பதிலும், பெரிய நன்மைகளை விரைவில் பெற இவ்வகை மாய மந்திரங்களின் துணை வேண்டும் என்பதால் சில குறுக்கு வழிகளில் செல்வதற்கு இவ்வகை சித்தர்களை குருக்களாக ஏற்றுக் கொண்டு விரைவாகப் பலனடைவோம் என்றும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு வருவதை நம் சூழலியே அதிகமாகக் காண்கின்றோம். இப்படி  அறிவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத மாய ஜாலங்களை நம்பி பொருட்செலவு, நேர விரயம் என்பதோடு மன உளைச்சலையும் மட்டுமே பெற்றவர்களாக இத்தகையோர் பின்னர் வருந்துவதையும் காண்கின்றோம். இப்படி ஏமாந்து வருந்துவதற்கு பதிலாக உண்மையில் சித்தர்கள் என்றால் யார்? அவர்களது குணாதிசியங்கள் யாவை? அவர்கள் மக்களுக்கு விட்டுச் சென்றவை யாவை? சித்தர்கள் எப்படிப்பட்டோர் என்று தீர ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சித்தர்கள் என்போர் ஒரு வகையில் விஞ்ஞானிகள் என்று குறிப்பிடலாம். இவர்களில் வெவ்வேறு வகைப்பட்டோர் உள்ளனர். பொதுவாகச் சொல்வதென்றால் இயல்பான இல்லற வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஆன்ம பலத்தைப் பெருக்கும் வழியில் ஈடுபடுபவர்களாக சிலர் இருப்பர். சிலர் தாம் கண்ட சிந்தனைகளை ஆன்மீகப் பாடல்களாக எழுதி வைத்து மக்கள் வாசித்து சிந்திக்க விட்டுச் சென்றோராக இருப்பர். வேறு சிலர் மூலிகைகளைக் கொண்டு புத்துப்புது மருந்துகளைக் கண்டு பிடித்து நோயாளிகளின் நோயை குணப்படுத்துவோராக இருப்பர். ஒரு சிலர் புதிய புதிய ஆராய்ச்சிகளைச் செய்து புதுமை வேட்டலை நாட்டமாகக் கொண்டோராக இருப்பர்.  

பட்டினத்தாரை பொறுத்தவரை அவர் நன்கு பொருளாதார வசதி மிகுந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, நல்வாழ்வு நடத்தி, பின்னர் இல்லறத்திலிருந்து விடுபட்டு, வீட்டினை விட்டு, பின் நகரத்தை விட்டு வெளியேறிச் சென்று, தன்னைத்தானே தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்.

இவர் தன் சிந்தனைகளையெல்லாம் அருமையான செய்யுட்களாக வடித்து வைத்தார்.  இவரது செய்யுட்கள் எளிய தமிழில் வாசிப்போர் புரிந்து கொள்ளும் வண்ணம் இருப்பவை. இச்செய்யுட்கள் ஒவ்வொன்றும் பொதுவாக வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொன்றிலும் இருக்கின்ற நிலையாமையை குறிவைத்தே எழுதப்பட்டவையாக இருப்பதுதான் இப்பாடல்களின் தனிச்சிறப்பு. 

நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் தினம் தினம் பல தோல்விகளை சந்தித்துத்துக் கொண்டேயிருக்கின்றோம். நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதுபோல நிலையாமையைக் காட்டும் பட்டினத்தார் பாடல்கள் அமைந்திருப்பதால் அவர் நமக்ககவே இப்பாடல்களை எழுதி விட்டுச் சென்றிருக்கின்றாரோ என நம்மை நினைக்க வைக்கின்றன இவரது பாடல்கள்.

இறப்பு சடங்குகளின் போது பட்டினத்தார் பாடல்களை ஓதுவார் ஓதுவது சில இடங்களில் வழக்கத்தில் நடைமுறையில் இருப்பதைக் காண்கின்றோம். இறப்பு என்பது மனித வாழ்க்கையில் இயல்பான ஒரு விசயம்தான் என்பதை உயிரோடு இருக்கும் எல்லோரும் உணரும் வகையில்  இழவு வீடுகளில் பட்டினத்தார் பாடகள் ஓதுவது சடங்குகளில் ஒன்றாக இருக்கின்றது. 

எது நடக்கின்றதோ இல்லையோ.. இறப்பு என்பது நிச்சயம் நடக்கும் என்ற வகையில் இவரது செய்யுட்கள் நமக்கு நம் நிலையாமையை ஆணி அடித்துச் சொல்பவையாக இருக்கின்றன. நேற்று இருந்தவர் இன்று இல்லை. நேற்று அலங்கரித்து அழகு செய்து புன்னகை பூத்த முகம் இன்று  உயிரற்று போன பின்னர் இடுகாட்டில் பிணம் என்று சொல்லப்பட்டு எரியூட்டப்பட்டு சாம்பலும் எலும்புகளுமாகத்தானே காட்சியளிக்கின்றன. எங்கே போயின அந்த வனப்பும், கவர்ச்சியும் என்று சில பாடல்களின் வழி நம்மை அதிர வைக்கின்றார் பட்டினத்தார். 

பட்டினத்தாரின் வாழ்க்கை சோகம் நிறைந்த பல நிகழ்வுகளைக் கொண்டது. இவர் வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக அலைந்து திரிந்து பிச்சை எடுத்து வாழ்கின்றார். இது தமக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக நினைக்கும் அவரது உடன்பிறந்த தமக்கையே அவருக்கு சோற்றில் நஞ்சு வைத்து கொல்லப்பார்க்கின்றார். இது தெரிந்து அவர் ‘தன்னப்பம் தன்னைச் சுடும்;  வீட்டப்பம்  ஓட்டைச்  சுடும்’  என்று கூறி அப்பத்தை வீட்டின் கூரை மீது வீச அந்த வீடே எறிந்ததாக ஒரு கதை உண்டு.

எவ்வளவு பற்றுக்களை துறந்தாலும் தன் தாயின் இறப்புக்கு வந்து அங்கே பிணமாகக் கிடக்கும் தன் தாயின் உடலுக்கு தீமூட்டும் போது கலங்கிப் போய் தவிக்கின்றார் பட்டினத்தார்.  அண்டஹ் உணர்வை விளக்கும் இரண்டு செய்யுட்களை காண்போம்.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு 
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை 
எப்பிறப்பிற் காண்பே னினி”
....

“முன்னை யிட்ட தீ முப்புரத்திலே 
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில் 
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே 
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே”


இப்படி வாழ்வின் நிலையாமையை தம் செய்யுட்களினாலேயே நமக்கு தம் பாடல்களின் வழி உயிர்கொடுத்துக் கொண்டிருப்பவர் பட்டினத்தார். 

பட்டினத்தாரின் வாழ்க்கைச்சரிதம் தமிழ்த்திரைப்படமாகவும் வெளிவந்தது. நாம் நன்கறிந்த பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் இப்படத்தில் பட்டினத்தார் வேடத்தில் நடித்தார். கே.சோமு தயாரித்த இந்தப்படம் 1936ம் ஆண்டில் வெளிவந்தது.

இத்தனைச் சிறப்புக்கள் வாய்ந்த பட்டினத்தாரின் நினைவாலயத்தைச் சென்று பார்த்து தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பதிவினைச் செய்து வைக்க 2008ம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்தபோது திருவெற்றியூர் சென்றிருந்தேன். தமிழகத்தின் திருவெற்றியூர் நகரில் கடற்கரைக்கு அருகே இருக்கின்றது இவரது நினைவாலயம்.

பட்டினத்தார் நினைவாலயம் மிகச் சிறியதொரு கோயில். உள்ளே சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதாவது பட்டினத்தார் இறந்த பின்னர் அவரது உடலைப்புதைத்து அதன் மேல் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து இக்கோயிலை அமைத்திருக்கின்றனர்.

இந்த ஆலயம் இருக்கும் இடம் ஒரு மீனவ குப்பம். நான் சாலையைக் கடந்து கோயிலைத் தேடி  உள்ளே செல்லும் போது ஒரு தண்ணீர் லோரி வந்திருக்க குப்பத்துப் பெண்கள் வண்ண வண்ண ப்ளாஸ்டிக் குடங்களைச் சுமந்து கொண்டு  தண்ணீர் எடுப்பதற்காக வந்து வரிசையில் நின்றிருந்தார்கள். கோயில் இருக்கும் இடம் பற்றி விசாரித்து மிக எளிதாகக் கோயிலைச்  சென்றடைந்தேன். கோயில் இருக்கும் இடத்தின் வெளிப்புறம் மிக அசுத்தமாகக் குப்பை கூளங்கள் நிறைந்து காட்சியளித்தது. குப்பைகளில் மொய்க்கும் ஈக்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு வித அச்சம் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. நான் சென்ற வேளை கோயில் பூட்டியிருந்ததால், நான்  தமிழ் மரபு அறக்கட்டளைக்காகப் பதிவு செய்ய வந்திருக்கின்றேன் என்று சொன்னவுடன், எனக்காக அங்கிருந்தோர் கோயில் சாவி வைத்திருப்பவரின் வீட்டிற்க்குச் சென்று  சாவி கொண்டு வந்து கோயிலைத்திறந்து காட்டினர். 

பட்டினத்தாரின் நினைவாலயமாகத் திகழும் இந்த சிறிய கோயிலை அந்த  குப்பத்து மக்களே தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் வழிகளைச் செய்யலாம். தூய்மையின் அவசியத்தை அம்மக்களுக்கு எடுத்துணர்த்து, அந்த நினைவாலயத்தைச் சுற்றி சிறிய பூங்கா உருவாக்கி எழிலைக் கூட்டி அந்த இடத்தைப் பாதுகாக்கலாம். 

ஒவ்வொரு கிராம மக்களும் மனம் வைத்தால் தங்கள் கிராமத்தில் அல்லது ஊரில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க முடியும். நான் இந்தப் பகுதிக்குச் சென்றிருந்த போது என்னை சுற்றிக் கொண்டு நின்ற பெண்மணிகளிடமும் பெரியோர்களிடமும் இதனைச் சொல்லி விட்டு வந்தேன். 

ஆண்டுகள் கடந்து விட்டன. மீண்டும் ஒரு முறை நான் தமிழகம் செல்லும் போது திருவெற்றியூர் நகர் சென்று, இக்கோயில் இன்று எவ்வாறு இருக்கின்றது என்று பார்க்க வேண்டும்.