Thursday, June 22, 2017

61. பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடிகள்



14 மில்லியன் ஆவணங்களைத் தன்னகத்தே கொண்ட மாபெரும் நூலகம் பிரான்சு தேசிய நூலகம். உலக மொழிகள் பலவற்றின் பழம் நூல்களும் ஆவணங்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இந்திய மொழிகளில் தமிழ் மொழிகளில் எண்ணிக்கையில் அதிகம் கொண்ட சேகரத்தைக் கொண்டுள்ளது இந்த நூலகம். இதன் அரிய ஆவணச் சேகரங்கள் பகுதியில் 578 தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த தமிழ்ச்சுவடிகளையும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து குறிப்பிட்ட சில ஓலைச்சுவடிகளையும் கையெழுத்து ஆவணங்களையும் மின்னாக்கம் செய்து வர, கடந்த வாரம் அதாவது ஜூன் மாதம் 15ம் தேதி பிரான்சின் தலைநகரமான பாரீசுக்கு நான்கு நாட்கள் சென்றிருந்தேன்.

பிரான்சு தேசிய நூலகம் Bibliothèque nationale de France என்று பிரஞ்சு மொழியில் அழைக்கப்படுகின்றது. இந்த நூலகத்தின் நான்கு தனிப்பகுதிகள் பாரீசின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன. நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக மின்னாக்கம் செய்யச் சென்றிருந்த பகுதி அரிய சுவடிகள் ஆவணப்பாதுகாப்பகம் அமைந்திருக்கும் ஐந்து மாடிக் கட்டிடம். இங்கு மூன்றாம் தளத்தில் தான் அரிய ஆவணங்களின் சேகரங்கள் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இங்குச் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஆவணங்கள் வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்தவை. சில நூல்களைப் பார்த்த போது இவ்வளவு பெரிய அளவில் நூல்களைச் செய்தனரா, என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

உலகின் பல நாடுகளில் பல கால கட்டங்களில் நூல்கள் உருவாக்கப்பட்டன. பழமையான இந்த நூல்கள் உலக வரலாற்றின் முக்கியச்சான்றுகளாக அமைந்திருப்பவை. இத்தகைய அரிய நூல்களையும் ஆவணங்களையும் பெறுவதில் உலகின் முன்னணி நூலகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். பிரித்தானிய நூலகம், ஹார்வர்ட் நூலகம், பெர்லின் நூலகம் போன்று இந்த பிரான்சு தேசிய நூலகமும், அத்தகைய பழம் நூல்களை ஏதாவது ஒரு வகையில் பெற்று பாதுகாத்து வருகின்றது. இந்த நூல்களைப் பார்த்து ஆய்வு செய்ய இவை அனுமதிக்கின்றன என்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெறும் பேறு எனக் கருதுகின்றேன்.

தமிழகத்திற்கு வெளியே பல்வேறு காரணங்களால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் நூல்கள் ஆங்காங்கே பாதுகாக்கப்படுகின்றன என்ற செய்திகளை சில ஆய்வறிக்கைகளில் காணமுடிகின்றது. இந்த பிரான்சு தேசிய நூலகத்தின் சேகரிப்புக்களை  இணையத் தேடலில் நான் அறிய வந்த பின்னர் இந்த நூல்களை வந்து பார்த்து ஆராய்ந்து அவற்றில் சிலவற்றை மின்னாக்கம் செய்ய வேண்டும் என அனுமதி கோரி நூலகப் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பினேன். எனது கோரிக்கையை ஏற்று, தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து இவற்றை வந்து பார்த்து ஆராய அனுமதி வழங்கிய நூலகப் பொறுப்பாளர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

நூலகப் பட்டியலில் 578 தமிழ் நூல்களின் பெயர்கள் இருந்தன. பெரும்பாலானவை ஓலைச்சுவடிகளாகவும் மற்றும் சில கையெழுத்து நூல்களாகவும் காணப்பட்டன. அவற்றில் திருவள்ளுவர் குறள், குறள், வீரமாமுனிவர் குறளுறை, பரிமேலழகர் உரை, அவ்வைப்பாடினகுறள், மூதுரை, நீதிசாரம், விவேகசாரம், உலகநீதி, சுகிர்தமனிமாலை, கொலைமறுத்தல், சந்தனக்கொறடு, சாமுத்திரிகாபலாபலன், வயித்தியம், தன்மாதிரி உடற்கூறு, மணிமேகலை மூலம், பரதம், மாரியம்மன் பாடல்கள், சாதி நூல், மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், எண் சுவடி, பிரசங்கம் எனப் பல நூல்கள் உள்ளன. இவற்றில் 15 சுவடி நூல்களை அங்கிருந்த வேலையில் நான் மின்னாக்கம் செய்து வந்துள்ளேன். அவை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் படிப்படியாக வலையேற்றப்படும் என்ற செய்தியை வாசகர்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் பார்வையிட வேண்டிய நூல்களின் பட்டியலை என் வருகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே நூலக அதிகாரிக்கு நான் அனுப்பி வைத்து விட்டேன். என் பெயரில் நான் பட்டியலிட்டிருந்த 15 நூல்களும் எனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மின்னாக்கப் பணியில் என்னுடன் இணைந்து கொண்டு உதவி செய்வதற்காக பிரான்சில் வசிக்கும் நண்பர் சாம் விஜய் அவர்களும் உடன் வந்து முதல் நாள் இணைந்து கொண்டார். எங்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு அரிய ஆவணங்கள் உள்ள மூன்றாம் தளத்திற்குச் சென்று அங்கு சில அடிப்படை சோதனைகளை முடித்த பின்னர் எங்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஓலைகளை அங்கிருந்த ஒரு ஊழியர் காட்டினார். அனைத்து ஓலைக்கட்டுக்களையும் எடுத்துப்பார்க்க அனுமதி வழங்கப்படுவதில்லை. மாறாக ஒரு நேரத்தில் ஒரு சுவடிக்கட்டு என்ற வகையில் தான் அனுமதி அளிக்கின்றனர். முதலில் நமக்கு வேண்டிய சுவடிக்கட்டை ஒரு ஊழியரிடமிருந்து பெற்ற பின்னர் இன்னொரு ஊழியர் நாம் எடுத்துச் செல்லும் அந்தச் சுவடிக்கட்டின் குறிப்பு எண்ணைக் கணினியில் பதிகின்றார். அவர் அனுமதி அளித்த பின்னரே சுவடிக் கட்டு நம் கைக்குக் கிடைக்கின்றது.

சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தூய்மையான பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்கும் அதன் குறிப்பு எண் வழங்கப்பட்டுள்ளது. சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு மென்மையான வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டிருக்கின்றன. சுவடிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் வெவேறு வகை பனை ஓலைகளால் வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை என்பதை ஒவ்வொன்றையும் தொட்டு ஆராயும் போதே அறிய முடிகின்றது. தமிழ் எழுத்தர்கள் எழுதி உருவாக்கிய பனை ஓலைச் சுவடி நூல்களோடு தமிழகத்துக்கு வந்து அங்கே தமிழ் கற்று வாழ்ந்த ஐரோப்பிய பாதிரிமார்களின் கையெழுத்தில் அமைந்த சுவடி நூல்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பு.

இங்குள்ள சேகரத்தில் குறிப்பிடத்தக்க மூன்று நூல்கள் உள்ளன. ஒன்று 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வழக்கில் இருந்த தொழில்கள், அத்தொழில்களைச் செய்த மக்களின் சமூகக் குறிப்புக்கள், ஆண் பெண் அவர்களின் உடையலங்காரத்துடன் கூடிய 200க்கும் மேற்பட்ட கையால் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று இங்கிருக்கின்றது. இன்றைக்குப் பதிவு செய்ய நாம் பயன்படுத்தும் கேமரா போன்ற கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிகத் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவற்றை 1830ம் ஆண்டில் வரைந்து உருவாக்கியவர் Mr. Philippe Etienne Ducler (1778-1840) என்பவர். இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களின் உடையலங்காரம் எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறிய உதவும் மிகச் சிறந்த ஆவணங்களுள் ஒன்று இது என நாம் தாராளமாகக் குறிப்பிடலாம்.

அதே போல, தமிழகத்தில் தாம் பார்த்த இறைவடிவங்களின் தோற்றத்தை ஓவியங்களாக வரைந்து அத்தெய்வங்களின் பெயர்களைத் தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வழங்கியிருக்கின்றனர். இது கோயில்களில் இருக்கின்ற சிற்பங்களின் பல்வேறு வடிவங்களைப் பதிந்து வைத்த சிறப்பானதொரு ஆவணம் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்துக்கு கிருத்துவ மதம் பரப்பும் நோக்கில் வந்த பாதிரிமார்களில் இத்தாலியிலிருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் என்ற கொண்ஸ்டான்சோ பெஸ்கி அவர்களைப் போல ரோபெர்ட்டொ டி நோபிலி அவர்களும் குறிப்பிடத்தக்கவர். இவர் இன்று கிருத்துவ மறை நூல்களில் மறை, வேதம், அருள் போன்ற சொற்கள் இடம்பெறக் காரணமாக இருந்தவர். அவர் கைப்பட தமிழில் எழுதிய நூலான "ஞானயுபதேசம்" என்ற தமிழ் நூல் இந்த நூலகத்தில் இருக்கின்றது. இதில் 16ம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழ் எழுத்து முறையை நன்கு காணலாம். இப்படிப் பல அரிய பொக்கிஷங்களைக் கொண்டிருக்கின்றது பிரான்சின் தேசிய நூலகம்.

இந்தச் சுவடி நூல்கள், அவை எழுதப்பட்ட நிலமான தமிழகத்தில் இன்று இல்லை என்றாலும்,  ஐரோப்பாவில் மிகப் பாதுகாப்பாக இவை வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியே. ஆர்வம் உள்ள ஆய்வாலர்களுக்கு இவை ஆய்வு நோக்கத்திற்காகப் பார்வையிட  வழங்கப்படுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை  இத்தகைய அரிய ஆவணங்களைத் தொடர்ந்து மின்னாக்கம் செய்வதோடு உலகளாவிய அளவில் இந்த அரிய தமிழ் பழம் ஓலைச் சுவடிகள் இணையத்தின் வழியாக பார்வையிட இலவசமாகவும் வழங்குகின்றது என்பதைத்   தெரிவிப்பதில் பெருமையும் மகிழ்வும் கொள்கின்றோம்.

Wednesday, June 14, 2017

60. தென்னாப்பிரிக்காவில் தமிழ்​



உலக நாடுகள் பலவற்றில் தமிழர் குடியேற்றம் என்பது பன்னெடுங்காலமாக நடந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. அப்போதைய தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.

தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உள்ளூர் சூலு இன மக்கள். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து உழைக்க வந்த இந்தியர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை உள்ளூரில் ஆரம்பக் காலம் முதல் நிகழ்ந்த பல சம்பவங்கள் சாட்சிகளாக நமக்குக் காட்டுகின்றன. தற்போதும் கூட டர்பன் நகரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இந்தியர்கள் வாழும் பகுதி என்று பீனிக்ஸ் பகுதியும் அதற்கு எதிர்புறமாக உள்ள பகுதி சூலு மக்கள் வாழும் பகுதி என்றும் அமைந்திருப்பதைக் காணமாம். ஆயினும் பெரிய அளவிலான பிரச்சனைகளோ, இனக்கலவரமோ என்பது இங்கு இல்லை என்பது ஒரு மிக நல்ல விசயம்.

தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மேல் அதிகப் பற்று கொண்டவர்கள். தமிழ் உணர்வாளர்கள். பலருக்குத் தமிழ் மொழி பேசத்தெரியாது ந்ராலும் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் ஓரளவு தமிழ் பேசவும், பிறர் பேசுவதை நன்கு புரிந்து கொள்ளவும் முடியும் வகையில் தங்கள் தமிழ் அறிவை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமிழர் விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர். இங்கு சில இந்து சமயக் கோயில்களும் இருக்கின்றன. தமிழர் பண்பாட்டு உடைகளை அணிவதையும், கலைகளைக் கற்பதையும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையும் மகிழ்வுடன் செய்கின்றனர்.
2015ம் ஆண்டு உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். அன்று பட்டமளிப்பு விழாவின் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒரு பெரியவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்தான் திரு.செல்வன். டர்பன் நகரில் இயங்கும் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் தலைவராகச் செயலாற்றுபவர். அவரோடு உரையாடியதில் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலை பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த எம்டிடிஎஸ் மண்டபத்தின் வலது புறத்தில் இந்தப் பாடசாலையைக் கட்டி அமைத்திருக்கின்றார்கள் . கட்டிடத்தின் இரண்டு மாடிகளில் தமிழ்ப்பாடசாலையின் வகுப்புக்கள் நடக்கின்றன.

பாடசாலையைச் சென்று பார்க்கலாமா, என நான் வினவிய உடன் சற்றும் தயங்காது என்னை அழைத்துக் கொண்டு சென்றார் திரு.செல்வன். இந்தப் பள்ளி வகுப்பறையைத் திரு.நடேசன் என்பவர் திறந்து வைத்தார் என்ற தகவலை முன்வாசல்பகுதியில் உள்ள அறிவிப்பில் காண முடிந்தது. மாடியில் ஏறிச்சென்று பள்ளியின் அறைகளைப் பார்வையிட்டோம். அடுத்தடுத்ததாக சில அறைகள் அந்த முதல் தளத்தில் இருந்தன. பிறகு மேல்மாடியில் இருக்கும் அலுவலக அறைக்கும் என்னை அழைத்துச் சென்று அங்குள்ள புகைப்படங்களைக் காட்டி இந்த மியர்பேங் பள்ளிக்கூடத்தின் ஆரம்பக் கால முயற்சிகள், பின்னர் படிப்படியான வளர்ச்சி, இன்றைய நிலையில் தமிழ் கற்க வருகின்ற தமிழ் மக்களின் ஆர்வம் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்.

1936ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையும் அதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழ்ச்சங்கமும். தொடர்ந்து பல தமிழார்வளர்களின் முயற்சியால் தமக்கென்று ஒரு கட்டிடம், மண்டபம் என மிகச் சிறப்பாக இன்று வளர்ந்திருக்கின்றது இந்த மியர்பேங்க் தமிழ்ச்சங்கமும் தமிழ்ப்பாடசாலையும். இது இப்பாடசாலைக்கு மட்டுமன்றி உலகத்தமிழர்களும் பெருமை சேர்க்கும் ஒரு விசயமல்லவா?

அன்றைய விருந்து நிகழ்வில் தமிழிசைப் பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் திரைப்பட பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது. தமிழைப் பிழையின்றி பேச முடியாவிட்டாலும் கூட தமிழ்ப்பாடல்களும் தமிழிசையும் இந்த இளைஞர்களை ஈர்த்திருப்பதைக் காணமுடிகின்றது.

பட்டமளிப்பு விழாவும் ஏனைய அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் முடிந்த பின்னர் டர்பன் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் எனத் திட்டமிட்டோம்.. என்னோடு மலேசிய நண்பர்கள் திரு.ப.கு.சண்முகம் தலைமையிலான குழுவினர், இந்து, சாம் விஜய், கனடா நண்பர் திரு,ராஜரட்ணம் ஆகியோரும் இருந்தமையால் அனைவரும் இணைந்தே பயணம் செய்தோம்.

தென்னாப்பிரிக்கத் தோழி கோகியும் அவர் கணவர் திரு.சின்னப்பனும் திங்கள் கிழமை, அதாவது புனித வெள்ளி முடிந்த வாரத்தின் முதல் திங்கள்கிழமை, அருகாமையில் இருக்கும் புற்று மாரியம்மன் ஆலயத்தில் விசேசம் இருப்பதாகவும் அங்கு வந்து பார்க்க விருப்பம் இருக்கின்றதா என்றும் கேட்டனர். வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஆலயம் சென்று பார்த்து விட்டு வரலாமே என்று எனக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியது. மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலும் சென்று வரலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். திரு.சின்னப்பன் அவர்களின் மகள் சிவானியும் ஒரு கார் வைத்திருக்கின்றார்.ஆக எங்களை இவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து கோயிலுக்குத் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்று விட்டனர். நாட்டியப்பள்ளி வைத்து நடத்தி வரும் சிவானி ஒரு வக்கீலாகவும் படித்து பட்டம் பெறும் நிலையில் இருக்கின்றார்.

கோயிலை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே கோயில் கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. ஆலயத்தின் வாசல் முழுக்க வாகனங்கள் நிறைந்து இருந்தமையால் வாகனத்தை நிறுத்துவதில் சற்றே சிரமம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க தமிழர்கள் ஆலயத்தில் நிறைந்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக அது அமைந்திருந்தது.

மாரியம்மன் ஆலயம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருந்ததால் அம்மன் சிலை எவ்வகையில் இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. காமாட்சியம்மன் அல்லது துர்கை வடிவில் அம்மன் சிலை இருக்குமோ? அல்லது மலேசியாவில் இருக்கும் மாரியம்மன் வடிவில் இங்கு மூலஸ்தான தெய்வ வடிவம் இருக்குமோ என மனதில் கேள்விகள் ஓட உள்ளே சென்று பார்க்க மனதில் ஆவல் அதிகரித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆலயத்திற்கு வெளிப்பகுதி வழியாகச் சுற்றிக் கொண்டு வந்து ஆலயத்தின் நேர் வாசல் பகுதியை அடைந்தோம்.

நடுப்பகுதியில் இருப்பது பிரதான ஆலயம். அதற்கு இடப்புறமும் வலப்புறமும் மேலும் ஒரு மாரியம்மன் ஆலயமும் ஒரு விநாயகர் ஆலயமும் இருக்கின்றன. மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் முன் வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிசயத்தில் மலைக்க வைத்தது.கற்பகிரகம் மூலஸ்தானம் என இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரமாண்டமான மணல் புற்று நேராக நிமிர்ந்து நிற்க அதன் மேல் மாலைகள் குவிந்து கிடக்க மையப்பகுதியில் வெள்ளியால் ஆன அம்மன் வடிவத்து முகம் மட்டும் வைத்தார்போன்ற ஒரு அமைப்பு அங்கே கண்முன்னே காட்சியளித்தது. நான் எதிர்பாராத ஒரு காட்சி அது. ஆச்சரியத்திலும் அக்காட்சியின் அழகிலும் மெய்மறந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இக்கோயிலில் வழிபாடு செய்து வைக்க என்று தனியாக குருக்கள் இல்லை. பொதுமக்களே கோயில் வழிபாட்டினை முழுமையாகச் செய்கின்றனர். ஆண் பெண் என்ற பேதமின்றி தூபம் காட்டுதல், மங்கல நீர்வழங்குதல் என்பது போன்ற பணிகளைப் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்கின்றனர்.

டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றது. நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

புற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டுப் பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படிச் செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போலச் செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மணி அவர்களுக்குப் புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனைப் பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.

இந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காகக் காரியங்கள் நடைபெறுகின்றன.

இங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்துப் பழகிய விநாயகர் சிலையிலிருந்து மாறுபட்ட வடிவில் அமைந்திருக்கின்றது. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்றார். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புறம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.

இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்குப் பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஆர்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கிப் பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன.

தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி முழுமையான ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இந்திய நாட்டிற்கும் அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கின்றது. ஆயினும் இன்று உலக மக்களால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது கரும்புத்தோட்டங்களில் பணிபுரிய வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளே. 1860 முதல் ஆரம்பித்த இந்த நிகழ்வு படிப்படியாக தென்னிந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் ஆப்பிரிக்கா புலம்பெயர காரணமாகியது. அதிலும் குறிப்பிடத்தக்க முக்கிய வரலாற்று விஷயமாக நாம் கருத வேண்டிய ஒன்றாக அமைவது, ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதலில் டர்பன் வந்தடைந்தவர்கள் அப்போதைய மதராஸிலிருந்து வந்த 342 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தாம்.

இன்றைய நிலையில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலையான ஓரிடத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். அரசுப் பணிகளிலும் நாடாளுமன்றத்திலும் இடம் வகிக்கும் நிலையையும் சிலர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த மண்ணில் காலூன்றி விட்டமையைக் காட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. ஆங்காங்கே இருக்கும் இந்து சமய ஆலயங்கள் இத்தமிழ் மக்கள் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்குகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மறவாமல் வழி வழியாக தமது இளம் தலைமுறையினருக்கும் வழங்குவதில் காட்டும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆயினும் மனதை உறுத்தும் ஒரு விசயம் இல்லாமலில்லை.

தென்னாப்பிரிக்கத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே தமிழ் மொழியை ஓரளவேனும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனையோர் ஒரு சில வார்த்தை பேசுபவர்களாகவும் பெரும்பாலோர் தமிழ் மொழியின் தொடர்பு அற்ற வகையிலும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கின்றது. தமிழ் மொழியில் பயிற்சி பெற வேண்டும், பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இவர்கள் மனதில் ஆழ வேரூன்றி இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயினும் எவ்வகையான முயற்சிகள் இவர்களுக்குப் பலனளிக்கும் என்பது தான் மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. அர்த்தம் புரியாமலேயே தமிழ்ப்பாடல்களைப் பிழையின்றி பாடக்கூடியவர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமா பாடல்கள் தமிழை இவர்கள் மத்தியில் வழக்கில் தக்க வைக்க உதவுகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.

எளிமையான முறையில் தமிழ் மொழி சொல்லித்தரக்கூடிய வழிமுறைகளைக் கையாளவேண்டியது அவசியமாகின்றது. இன்னிலையில், பேச்சுத்திறனை வளர்க்கும் வகையிலான தமிழ் மொழி பாடத்தினை திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் உதவ வேண்டியது தான் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு நாம் செயலாற்ற வேண்டிய அதி முக்கிய, அதி அவசர தேவை என நான் கருதுகின்றேன். ​

Wednesday, June 7, 2017

59. சேர்மன் மாணிக்கவாசகம் அரசு நடுநிலைப்பள்ளி



தேவகோட்டையில் உள்ள சேவுகன் அன்ணாமலை கல்லூரியில் 2015ம் ஆண்டு ஒரு கருத்தரங்கத்தில் பேச என்னை அழைத்திருந்தார்கள். காலை தொடங்கி மதியம் வரை என அந்தக் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. நிகழ்ச்சியின் போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது பள்ளியில் உள்ள மாணவர்களையும் நான் வந்து சந்தித்து அவர்களுடன் உரையாடி விட்டுச் செல்ல வேண்டும் என ஒரு அன்பர் என்னிடம் வந்து கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பைத் தட்டிக் கழிக்க எனக்கு மனம் வரவில்லை. அது தேவகோட்டை நகரிலேயே உள்ள ஒர் அரசு பள்ளி. அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு  வருவோமே என என் உள்மனம் ஒப்புதல் அளிக்க, சரி எனச் சொல்லி கல்லூரி ஏற்பாடு செய்திருந்த காரிலேயே அங்கு சென்று சேர்ந்தேன்.

வயதில் மூத்த மாணவர்களிடம் பேசுவதென்றால் சற்று எளிது. விரைவில் புரிந்து கொள்வார்கள். தைரியமாகக் கேள்வி கேட்பார்கள்.  தயக்கமோ பயமோ விருந்தினர் மீது இருக்காது. ஆனால் வயதில் குறைந்த பள்ளிச் சிறார்கள் பொருமையாக உட்கார்ந்து நாம் பேசுவதைக் கேட்பார்களா.. அவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய செய்திகள் மனதில் சென்று சேருமா..  என்பன போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்க நாங்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் அப்பள்ளியைச் சென்றடைந்தது.

இந்தப்  பள்ளியின் பெயர் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உயர் நிலைப்பள்ளி. என்னை வரவேற்று அழைத்துச் சென்ரவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம்.   நான் உள்ளே வரும் முன் வாசலில் என் பெயர் எழுதி அறிவிப்புப் போடப்பட்டருந்ததைப் பார்த்தேன். அந்த குறுகிய நேரத்திற்குள் நான் வருவது அறிவிக்கப்பட்டு ஆசிரியர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மிக எளிமையான பள்ளிக்கூடம். பழமையான கட்டிடம். பள்ளிக்கூடத்தின் எல்லா பகுதியும் மிகத் தூய்மையாகக் காட்சியளித்தது. என்னோடு என் உடன் வந்திருந்த தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களையும், அங்கிருந்த ஆசிரியர்களும் ஏனையோரும் முகமலர்ச்சியுடன் வந்து வரவேற்று அழைத்துச் சென்று அமர வைத்தனர். குறுகிய நேர அறிமுகத்துக்குப் பின்னர் நான் பேச ஆறம்பித்தேன். என்னுடைய இளைமை காலத்தில் மலேசியாவில் எனது பள்ளி அனுபவங்களை சிறிது விவரித்து விட்டு ஜெர்மனியில் எனது தொழில், நாட்டு நிலவரம், இயற்கை சூழல் என ஏறக்குறைய இருபது நிமிடங்கள் பேசி அமர்ந்தேன். தலைமை ஆசிரியர் மாணவர்கள் இப்போது உங்களிடம் கேள்வி கேட்பார்கள் எனச் சொல்ல, எவ்வகை கேள்விகளை இச்சிறார்கள் கேட்கப்போகின்றார்கள் என்ற ஆர்வம் எனக்கு மிகுந்தது.

அடுத்த ஒரு மணி நேரம் அங்கு அமர்ந்திருந்த ஏறக்குறைய ஐம்பது மாணவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஒரு கேள்வி என விடாது கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டனர். நான் அவர்களுக்குக் கூறிய செய்திகளைக் கவனம் சிதறாது கிரகித்துக்  கொண்டு நான் சொன்ன செய்திகளோடு மேலும் அது சார்ந்தவகையிலான சில கேள்விகளையும் கேட்டனர். மாணவர்களின் சுறுசுறுப்பும் , விசயங்களை உடனுக்குடன் உள்வாங்கி யோசித்து அது பற்றிய வேறு கோணத்திலான விசயங்களை கேட்டு அறிதலில் இருந்த நாட்டமும் என்னை வியப்படைய வைத்தது. மாணவர்களின் புறத்தோற்றம்  அவர்களில் பொரும்பாலோர் வறுமை கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள் என்பதைக் காட்டியது. ஆனால் அவர்களுக்குள்ளேயிருக்கும் உத்வேகமும் சுறுசுறுப்பும் அளப்பறியது என்பதை நான் உணர்ந்தேன்.

அன்று அப்பள்ளியில் நான் நினைத்ததற்கும் மேலாக கூடுதலாக நேரம் செலவிட்டு விட்டு பின்னர் திரும்பிச் சென்றேன். 2015ம் ஆண்டு தமிழகப் பயணத்தில் தேவகோட்டைக்கு வந்த பின்னர் நான் சென்னைக்கும் செஞ்சிக்கும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. எதிர்பாராத விதமாக மீண்டும் காரைக்குடிக்கு வரவேண்டிய ஒரு வாய்ப்பு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் வந்தது. அதற்காக காரைக்குடிக்குச் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் தேவகோட்டையில் நான் சந்தித்த சேர்மன்  மாணிக்க வாசகம் பள்ளியின் அந்த சுறுசுறுப்பும் அறிவுத்தாகமும் நிறைந்த குழந்தைகளின் முகம் என் மணக்கண்னில் வந்து போய்க்கொண்டிருந்தது. பக்கத்தில் தானே இருக்கின்றோம். அந்தப் பள்ளிக்குச் சென்று வருவோம் என நினைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கத்தைத் தொலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவருக்கும் மகிழ்ச்சி. நான் நிச்சயம் வரவேண்டும் என அவரும் அழைக்க, ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.

இரண்டாம் முறை சென்றபோதும் அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன்`. இவ்வளவு கெட்டிக்கார மாணவர்களாகிய உங்களுக்குப் பரிசு கொடுப்பது அவசியம் எனச் சொல்லி, எனது அடுத்த தமிழக வருகையின் போது அப்பள்ளி மாணாக்கர்களுக்கு ஒரு கணினியை அன்பளிப்பாக அளிக்கின்றேன் எனச் சொல்லி விடைபெற்று வந்தேன்.

சென்ற ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்த போது இப்பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாடி ஒரு புதிய கணினியை வாங்கி பள்ளிக்குப் பரிசளித்தேன். மாணவர்களின் உற்சாகத்தை முகத்தில் பார்த்தபோது எல்லையில்லா ஆனந்தம் எனக்கு ஏற்பட்டது.

அவர்களிடம் அக்கணினியைப் பரிசளித்தபோது ஒரு செய்தியைக் குறிப்பிட்டு சொன்னேன். அதாவது, தேவகோட்டை, அதன் சுற்று வட்டார சூழலை மட்டும் அறிந்திருக்கும் உங்களுக்கு கணினியும் இணையத் தொடர்பும் உலகின் ஏனைய பாகங்களையும் மக்களையும் காட்டும் ஒரு ஜன்னலாக அமையும். வறுமை என்றுமே உங்கள் அறிவின் விரிவாக்கத்திற்கும் விசாலப்படுத்துதலுக்கும் தடையை ஏற்படுத்தி விடக்கூடாது. கல்வி கற்கவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் என்றுமே நீங்கள் தயங்கக்கூடாது. மன உறுதியுடன் கல்வியைக் கற்றுக் கொண்டு வாழ்வில் மிகப்பெரிய சாதனைச் செய்ய வேண்டும் என்ற கனவும் என்றும் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தைக் கல்விதான் வடிவமைக்கும், என்று நான் கூறிய செய்தியை மாணவர்கள் இன்முகத்துடன் கேட்டு கல்வியில் கவனம் வைத்து முன்னேற்றம் காண்போம் என உறுதி கூறினர். இந்த நாள் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை என்னுள் ஏற்படுத்திய நாள்.

இந்தப் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகைச்சூடி வருகின்றனர். இந்த மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் ஒரு தன்னலமற்ற ஒரு பண்பாளர், சேவையாளர். அவர்தான் அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சொக்கலிங்கம். இவரது ஆலோசனையிலும் வழிகாட்டுதலிலும் இவருக்குத் தோள்கொடுத்துப் பயணிக்கும் இப்பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியரும்  நற்சேவையாளர்கள். இவர்களது அளப்பறிய சேவையே இந்தப் பள்ளியின் பெயர் அடிக்கடி செய்தித்தாட்களில் வருவதற்குக் காரணமாக இருக்கின்றது என்று சொல்வது மிகைக்கூற்றல்ல. மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கினோம், எனச் செயல்படும் எத்தனையோ ஆசிரியர்களுக்கிடையே இத்தகைய ஆசிரியர் பெருந்தகைகள் மாணிக்கங்களாக மிளிர்கின்றார்கள். இவர்களது சேவை எளிய குழந்தைகளும் கல்வி எனும் ஏணிப்படியில் ஏறி தனது வாழ்க்கைப் பயணத்தில் உயர்ந்த இடத்தை பெறுவதற்கு அடிப்படையை வகுத்துக்கொடுக்கும் ஆதாரத்தளங்களாக அமைந்திருக்கின்றன.

தானத்திலேயே சிறந்த தானம் கல்வி தானம் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பையும் பொது உலக வாய்ப்பையும் சிறப்புடன் அமைத்துக் கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் போற்றிப்பாராட்டத்தக்கவர்கள்.