Friday, October 27, 2017

74. மாயனைக் கண்டேன் - கொங்கர்புளியங்குளம்



தமிழ் நிலத்தின் ஐந்திணையைக் குறிப்பிடும் போது,

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(அகத். 5)
என்கின்றது தொல்காப்பியம். ஒவ்வொரு நிலத்திற்கும் அந்த நிலத்தின் தன்மைக்கேற்ற ஒரு கடவுள் என வகைப்படுத்தும் செய்யுள் இது. இதில் சுட்டப்படும் மாயோன் என்ற சொல்லை ஆராயும் போது கருப்பு, கரியோன் எனப் பொருள் கொள்ளலாம். முல்லை நிலத்தின் தெய்வமாக இந்த மாயோன் சுட்டப்படுகின்றான்.

மற்றொரு கோணத்தில் காணும் போது மாயன் வழிபாடு என்பது தமிழகத்தில் இன்றும் வழக்கில் இருக்கின்ற ஒரு பழமையான நாட்டுப்புற வழிபாட்டுக் கூறு என்றும் அறியலாம். பொதுவாக கிராமங்களில் உள்ல மாயன் கோயிலில் ஒரு செங்குத்தான கல்லை வைத்து அக்கல்லைக் கடவுளாக உருவகித்து மாலைகள் பூசைப் பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்படுகின்றது. மனித உருவத்தை ஒத்த கடவுள் வடிவங்கள் இங்கே இல்லை. மூலஸ்தானம் அல்லது கருவரை என குறிப்பிடப்படும் பகுதியில் இருப்பது ஒரு செங்குத்தான கல் மட்டுமே. இந்த மாயன் வழிபாட்டினை நினைக்கும் போது நம் சிந்தனையில் தென் அமெரிக்காவில் குறிப்பாக மெக்சிகோ, குவாட்டமாலா போன்ற நாடுகளில் இன்றைக்கு 4000 ஆண்டு வாக்கு எனக் கணக்கிடப்படும் மாயன் கலாச்சாரம் நினைவுக்கு வரலாம். பண்டைய மரபுகளில் இருக்கும் பல சடங்கு முறைகளில் இத்தகைய ஒற்றுமைகளை அதிகம் காணலாம். இவை ஆராயப்பட வேண்டியவை.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் நான் சில நாட்கள் மதுரையில்  இருந்தேன். மதுரை மாநகரமும் அதன் புறநகர் பகுதிகளும் தமிழர் தொல் மரபுகள் வேரூன்றி இருக்கும் தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று. மதுரையில் எந்த சிற்றூருக்குச் சென்றாலும் அங்கே ஏதாவது ஒரு தொல்மரபுச் சின்னம் நம் ஆய்வில் தென்படாமல் போகாது. அந்த அளவிற்கு மதுரை மனிதக் குலம் மிக நீண்ட காலம் வாழ்ந்த ஒரு நிலப்பகுதியாகத்தான் திகழ்ந்திருக்கின்றது. அதுமட்டுமா?

தமிழர் நாகரிகத்தினை உலகுக்குப் பறைசாற்றும் அண்மைய கீழடி அகழ்வாய்வுகள் நமக்குக் காட்டுவது இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்றைக்கு 2500 ஆண்டுகள் முன்னரான காலகட்டத்திலேயே மிக நுட்பமான அறிவு வளர்ச்சியைப் பெற்றவர்களாகவும், உயர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் கட்டுமானக் கலைகளைச் செய்தோராகவும், கலையை வளர்த்தோராகவும் உலகின் ஏனைய பகுதிகளைச் சார்ந்த வணிகர்கள் வந்து தங்கியிருந்து வணிகம் செய்து சென்ற வளம் மிக்க ஒரு பகுதியாகவும் இப்பகுதி இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

மதுரையில் நான் சென்று பார்த்து ஆராய்ந்து பதிவுகள் செய்வதற்கென்று ஒரு நீண்ட பட்டியல் அமைத்திருந்தேன். அதில் ஒன்றுதான் கொங்கர்புளியங்குளம் என்னும் சிற்றூர். மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.

இந்தக் கொங்கர்புளியங்குளம் சமண புராதனச் சின்னங்கள் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியுமாகும். ஆதலால் இங்குள்ள மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள அச்சின்னங்களைப் பதிவு செய்து வருவோம் எனத் திட்டமிட்டிருந்தேன். என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் முனைவர்.ரேணுகாதேவி, முனைவர்.பசும்பொன், சகோதரர் உதயன் ஆகியோர் வந்திருந்தனர். மூவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள். ஆக இரண்டு மோட்டார்சைக்கிள்களில் நால்வரும் பயணம் செல்வோம், அப்போதுதான் மலையடிவாரம் வரைச் செல்ல வசதியாக இருக்கும் என முடிவானது.

கொங்கற்புளியங்குளம். பண்டைய தமிழ் மக்களின் தொல் மரபுகள் தொடர்ச்சியாக இன்றும் பேணப்பட்டு வரும் ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பகுதி. இன்று காண்பதற்குப் பாறையும் புதர்களும் தானே இருக்கின்றன என நினைப்போர் உள்ளே சென்று பார்த்தால் வளமான தமிழர் தொல் பழம் மரபுகள் இன்று உயிர்ப்புடன் இங்குத் தொடர்வதை அறியலாம்.

பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். ஆங்காங்கே ஓரிரு வீடுகள். அதனைச் சுற்றிலும் சிறிய பயிர் தோட்டங்கள், ஆடுகள், கோழிகள் மாடுகள் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்பட்டது. நாங்கள் பயணம் செய்து வந்த மோட்டார் சைக்கிள்களை ஓரமாக வைத்து விட்டு பாறை இருக்கும் பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.

நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புற வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்கே இன்றும் தொடர்கின்றது. மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் கோயில் அது. கோயிலைக் காணும் போதே மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சிறிய கோயில் இருப்பதைக் கண்டேன்.

இந்த மாயன் கோயிலுக்கு வடகிழக்குப் பகுதியில் சற்று தூரத்தில் ஒரு சிறிய கொட்டகை ஒன்றினை அமைத்திருக்கின்றார்கள். இது இறந்தோரை எரிக்கும் ஒரு சுடலை. இங்கு மக்கள் இறந்தவர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பலையும் எலும்புத் துண்டுகளையும் எடுத்துச் செல்லும் மரபு இன்றும் தொடர்கின்றது. நாங்கள் சென்றிருந்த போது ஓரிரு நாட்களுக்கு முன்னர் வந்து எரியூட்டிச் சென்றதற்கான தடயங்கள் காட்சியளித்துக் கொண்டிருந்தன. அதனைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நாகமலை பாறைப்பகுதியை நோக்கி நடக்கலானோம்.

இந்தக் கோயிலுக்கு பின்னால் உள்ள பாறையில் தான் இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சமண முனிவர்கள் தங்கியிருந்து பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வியும் கலையும் செழிக்கச் செய்துள்ளனர். அவர்களின் வாழ்விடமாக இங்குள்ள குகைத்தளம் அமைந்திருந்தது. அங்கு முனிவர்கள் தங்க இடம் அமைத்துக் கொடுத்த நல்லுள்ளங்களின் பெயர்களைப் பண்டைய தமிழ் எழுத்துக்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர். இந்தச் சான்றுகளைக் கொண்டிருக்கும் இப்பாறைப்பகுதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியைப் பற்றி அறிந்தபோதே எழுந்தது. மூன்று கல்வெட்டுக்கள் தனித்தனியே உள்ளன என்றும் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் உள்ளது என்றும் அறிந்திருந்தேன். ஒரு சிறிய பாறையில் இவை அனைத்தும் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் அந்தப் பாறைப்பகுதியில் நான் கண்ட காட்சியோ பிரம்மாண்டமான ஒரு காட்சியாக என்னை வியப்பில் ஆழ்த்தியது.

முதலில் அப்பாறையின் மேல் தளத்திற்கு எப்படிச் செல்வது என் வியந்து நின்று விட்டோம். பின்னர் அங்கே தமிழகத் தொல்லியல் துறை அமைத்துள்ள இரும்புப் படிகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டோம். வழி முழுதும் முற்புதர் மண்டிக் கிடந்தது. புதரை அகற்றியவாறு அதனைக் கடந்து செல்வது பெரும் சவால்தான். செல்லும் போது முட்கள் நம் கைகளையும் கால்களையும் நன்கு பதம் பார்த்து விடும். ஆனாலும் பாறையில் ஏறி மேலே உள்ள புராதனச் சின்னங்களைக் காண நமக்கெழும் ஆர்வம் இந்த வலியையும் மறக்கச் செய்யும்.

படிகளின் மேலேறி பாறையின் மேற்பகுதிக்கு வந்த உடன் நமக்கு முதலில் தென்படுவது வரிசை வரிசையாக அங்கே பாறையின் குகைத்தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கற்படுக்கைகள் தாம். ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இங்கே உள்ளன. முனிவர்கள் அமர்ந்து தியானம் செய்யவும் படுத்து உறங்கவும் இந்தக் கற்படுக்கைகளை அமைத்திருக்கின்றனர். இந்தப் படுக்கை பகுதிக்குப் பின்னர் இருளான குகைப்பகுதி தொடங்குகின்றது. அதன் உட்பகுதியிலும் சில கற்படுக்கைகள் காணப்படுகின்றன.

இங்குள்ள குகைப்பகுதி இயற்கையான குகைத்தளமாகும். இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும் நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்தும் பெரிது பெரிதாக நன்கு வாசிக்கக்கூடிய வகையில் தொல்தமிழ் எழுத்து வடிவமான தமிழி எழுத்துக்களில் செதுக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் தமிழில் செதுக்கிய வாசகங்களை இன்று நாம் நம் கண்களால் காண்கின்றோமே என நினைக்கும் போது நம் மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை எனலாம்.

இங்கு செதுக்கப்பட்டுள்ள மூன்று கல்வெட்டுக்களுமே இப்பகுதியில் வாழ்ந்த சமண முனிவர்களுக்கு அமைக்கப்பட்ட இந்த கற்படுக்கை மற்றும் குகை அமைப்பு சீரமைப்பினை ஏற்படுத்தியோரைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் தாம். பண்டைய காலத்தில் செய்திகளைக் கல்வெட்டுக்களில் பொறிக்கும் மரபு தான் இருந்தது என்பதால் இந்த முறையைப் பயன்படுத்தி அந்த நிகழ்வை வரலாற்றில் இடம் பெறும் நிகழ்வாக மாற்றியிருக்கின்றனர். இத்தகைய கல்வெட்டுக்கள் தாம் இன்று நாம் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ளவும் தமிழின் வரி வடிவின் பரிணாம மாற்றத்தை அறிந்து கொள்ளவும் நமக்குத் துணை புரியும் தரவுகளாக அமைகின்றன.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகளுமாகும்.

இந்த முக்கியப் புராதனச் சின்னத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத சுயநலவாதிகள் இங்கே பாறை உடைப்புப் பணிகளைத் தொடங்கி சில பகுதிகளை சேதப்படுத்தி விட்டனர். ஆயினும் இது பொதுமக்களால்  தடுக்கப்பட்டு, இன்று கொங்கர்புளியங்குளம் புராதனச் சின்னங்கள் நாம் பார்த்து நம் வரலாற்றின் பழமையை நினைத்துப் பெருமைகொள்ளும் வகையில் இங்குள்ளன.

இங்கு வந்து செல்வோர் தங்கள் பெயர்களை கீறியும், கற்படுக்கைகளைச் சிதைத்தும் இச்சின்னங்களை அழிப்பது வேதனைக்குரிய விசயமாகும். இவை நம் மரபினை உலகுக்குக் காட்டும் சொத்துக்கள் என்று மனதில் உணர்ந்தால் இவற்றைச் சேதப்படுத்தும் எண்ணம் மனதில் எழாது. இதனை மனதில் கொண்டு இந்த வளம் மிக்க பகுதியை நமது பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றென உணர்ந்து பெருமை கொள்வோம்.






Thursday, October 19, 2017

73. சேலைகள்



தீபாவளி என்றாலே குடும்பத்தினருக்குச் சேலை துணிமணிகள் எடுக்க வேண்டும் எனத் துணிக்கடைகளை நோக்கிச் செல்வது நமக்குப் பழகிப்போன விஷயம்தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் எப்படி இனிப்பு பதார்த்தங்கள் நமக்கு முக்கியமோ, அதே போலத்தான் நாம் பண்டிகையைக் கொண்டாட அணிந்து மகிழக் காத்திருக்கும் புத்தாடைகளும்.   தீபாவளி பண்டிகையில் சேலை இல்லாமல் இருக்குமா?  நாம் அணியும் சேலை உருவாக்கப்படும் நெசவுத் தொழில் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போமே.

சேலைகளில் பல ரகங்கள் உண்டு. தமிழகத்தின் சில ஊர்களின் பெயர்களைச் சொன்னாலே எவ்வகைச் சேலைகள் அங்குப் பிரபலம் என்பது பலருக்கு உடன் தெரிந்து விடும். மதுரைக்கு சுங்குடி சேலை, திருப்பூருக்குக் கைத்தறி சேலை, காஞ்சிபுரம் பட்டுச் சேலை, காரைக்குடிக்கு நூல் சேலை எனக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல ஒவ்வொரு ஊரின் புகழ்பாட தனிச்சிறப்புடன் கூடிய சேலை வகைகள் விதம் விதமாக இருக்கின்றன. எத்தனையோ வகை ஆடைகள் நம் அன்றாட வாழ்வில் இடம்பிடித்திருந்தாலும் கூட சேலைகளுக்குத் தமிழர்களாகிய நம் வாழ்வில் நாம் கொடுக்கும் மதிப்பு என்பது எப்போதுமே உயர்ந்ததுதான். திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் வைபவங்கள், தமிழர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் என எல்லா நிகழ்வுகளிலும் சேலை அணிவதையே மலேசியத் தமிழ்ப் பெண்கள் பெருமை கொள்கின்றோம். 

நாம் அணிகின்ற சேலைகளில் பட்டு, நைலக்ஸ், கைத்தறி, எனப் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்திற்கும் தமிழ்ப்பெண்கள் அணிவதற்கும் சிறப்பு சேர்ப்பது கைத்தறி சேலைகள் தான். தமிழகத்தில் பல சிற்றூர்களிலும் பெறும் நகரமாகிய கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், போன்ற இடங்களிலும் கைத்தறி சேலைகளை நெசவு செய்து தயாரிக்கும் நெசவுத்தொழில் பெருமளவில் நடைபெற்று வருகின்றது. அப்படி ஒரு ஊருக்குச் சென்று நெசவுத் தொழிலின் தற்கால நிலையை அறிந்து அதனை ஒரு பதிவாக்கி கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவாக வெளியீடு செய்திருந்தோம். அதனை http://tamilheritagefoundation.blogspot.de/2017/10/2017.html என்ற பக்கத்தில் முழுமையாகக் காணலாம். 

சாயர்புரம் - இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சாயர்புரத்தில் நெசவுத்தொழில் பற்றிய ஒரு பதிவு செய்வதற்குத் தூத்துக்குடி சென்றிருந்த போது புதிய அனுபவங்கள் எனக்குக் கிட்டின. கிராமத்திற்குள் நுழையும் முன் எங்குப் பார்த்தாலும் பளிச்சென்ற செம்மண் திடல்கள். செம்மண் தரையிலே கட்டப்பட்ட வீடுகள். கிராமத்திற்குள் நுழையும் முன்னரே நெடுந்தூரத்திற்குப் பசுமையான மரங்கள் நிறைந்த காடு. கிராமத்திற்குள் நுழைந்ததும் சின்ன சின்ன வீடுகள். தூய்மையான தெருக்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன தேவாலயங்கள். வித்தியாசமான காட்சியாக இது எனக்குத் தோன்றியது. 

நான் சாயர்புரத்திற்கு வருவதற்கு முன்னர் தூத்துக்குடி  நகரத்தில் ஒரு நெசவுத்தொழிற்சாலைக்குச் சென்று அங்குப் பதிவினை முடித்து விட்டு இந்தக் கிராமத்திற்கு வந்தேன். கிராமத்திற்குள் ஒரு நெசவுத் தொழிற்சாலை இருக்கின்றது. மிகப் பாழடைந்த ஒரு கட்டமாக அது தோற்றமளிக்கின்றது. உள்ளே நெசவு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நானும் என்னை அழைத்துச் சென்ற நண்பரும் சென்று பார்த்தோம். இரண்டு தறி இயந்திரங்கள் தானே இயங்கிக்கொண்டு சேலையை உருவாக்கிக் கொண்டிருந்தன. அதனை அடுத்தார்போல மனிதர்கள் இயக்கும் கைத்தறி இயந்திரத்தில் ஒரு பெரியவர் அமர்ந்து சேலைக்குத் தறி போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று நெசவு பற்றிய சில அடிப்படைத் தகவல்களைக் கேட்டு அறிந்து பதிவு செய்து கொண்டோம். ஆண்களும் பெண்களுமாகப் பாகுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ, கைலியோ, துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 


தொழிற்சாலையில் பதிவினை முடித்து விட்டு கிராமத்திற்குள் நடக்கத்தொடங்கினோம். அவை சற்றே பெரிதான குடிசை வீடுகள் இருபக்கமும் நிறைந்த வகையில் அமைந்திருக்கும் தெரு. தெருவில் இருந்த ஒரு வீட்டிற்குள் என்னை அழைத்து வந்த நண்பர் அங்கிருந்தோரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அந்த வீட்டில் முன் பக்கத்தில் வீட்டுடன் சேர்த்தே அமைக்கப்பட்ட ஒரு தறி இயந்திரம் ஒன்று இருந்தது. 

இங்குள்ள வீடுகள் அனைத்துமே சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு தறி இயந்திரம் முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட நிலையிலேயே அமைக்கப்பட்டிருந்தன என்றும் தற்சமயம் இது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் கூட தெருவில் உள்ள பல வீடுகளில் தறி இயந்திரங்களில் உள்ளன என்ற செய்தியை அறிந்து கொண்டேன். 

அவர்கள் எனக்குத் தறி இயந்திரத்தை இயக்கிக் காட்டினர். ஒரு பெரிய நூல் கண்டினைப் பொருத்தி விடுகின்றனர். இரு கைகளாலும் இயந்திரத்தை மேலும் கீழும் இழுக்கும் அதே நேரம் கால்களால் தையல் இயந்திரத்தை ஓட்டுவது போல அசைக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது இயந்திரத்தில் நூல் இழைகள் ஒன்றோடு ஒன்று பின்னி இறுகி துணியாக வடிவம் பெறுகின்றது என்பதை நேரில் பார்த்தேன். ஒரு பெரிய கண்டினைக் கொண்டு 21 சேலைகளை நெய்து விடுகின்றனர். அதில் 20 சேலைகள் அவர்கள் விற்பனை செய்யும் அமைப்பிற்குக் கொடுத்து கூலி பெற்றுக் கொள்கின்றனர். ஒரு சேலையை அவர்களுக்கு எடுத்துக் கொள்கின்றனர். இந்த வகையில் இக்கிராமத்தில் கைத்தறி சேலை உருவாக்கம் நடைபெறுகின்றது. 

தமிழக அரசாங்கம் ஏழை மக்களுக்கு இலவச சேலை வேட்டி துண்டு கொடுப்பதனால் அதற்கான ஆர்டர்கள் இவர்களுக்கு வருவதாகவும் அதற்குத் தேவைப்படும் சேலைகளை இவர்கள் தயாரிப்பதாகவும் அறிந்து கொள்ள முடிந்தது. பதிவினை முழுதாக முடித்த பின்னர் அதே கிராமத்திலேயே அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் மாலை திருநெல்வேலி செல்லலாம் என்பது எனது திட்டமாக இருந்தது. 

அன்று இரவு அதே கிராமத்தில் நான் தங்குவதற்காக அந்தக் கிராமத்தில் முக்கியமானவர் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களின் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பதிவுகள் முடித்து அங்குச் சென்று சேர்ந்தவுடன் அப்பெரியவருடனும் அவரது மனைவியுடனும் அறிமுகம் செய்து கொண்டேன். அப்பெரியவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர்கள் வீட்டின் மாடிப்பகுதியை முழுமையாக நூலகமாக மாற்றியுள்ளனர். கணினிகளை வைத்து கிராமத்துக் குழந்தைகள் வந்து பார்த்து படித்துச் செல்ல இலவசமாக அனுமதிக்கின்றனர். அக்கிராமத்து  மக்களின் பால்  மிகுந்த அன்பும் அக்கறையும், சமூக சேவையில் ஈடுபாடும் நிறைந்த தம்பதியர் அவர்கள். 

மறு நாள் காலையில் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களது தமிழ் ஆய்வுகள் பற்றியும் அக்கிராமத்துப் பிரச்சனைகள் பற்றியும் பல விசயங்கள் பேசினோம். மேலும் சில நண்பர்களும் நான் தங்கியிருந்த அந்த வீட்டிற்கு வந்து கூடினர். நெசவுத்தொழிலை வளர்ப்பதற்காகவும் கைத்தறி பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என இவர்கள் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர். 

பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்கள் நெசவுத்தொழிலை அறிமுகம் செய்யும் ஒரு கூடம் போன்ற ஒரு கட்டடம் ஒன்றை தன் சொந்தச் செலவில் அதே ஊரில் கட்டியுள்ளார். அதில் பயிற்சி வகுப்புக்கள், தொழில் முனைவர்களுக்கான ஆலோசனைகள் போன்றவற்றை நடத்தத் திட்டம் வைத்துள்ளார். 

நெசவுத்தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற இந்த சாயர்புரத்தில் சாலைகளில் நான் சந்தித்த பெண்கள் என்னிடம் அன்புடன் பேசினர். கைத்தறி இவர்களது குலத்தொழில் என்றும், இவர்கள் வாதிரியார் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அறிந்து கொண்டேன். 

இந்தப் பகுதியில் பாதிரியார் ஜி.யூ போப் அவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. அதில் கல்வி கற்று வாழ்வில் சிறந்த முன்னேற்றம் கண்டவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எனத் தயங்காமல் கூறலாம். இன்றும் கூட சாயர்புரத்தில் இப்பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர்கள் தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்களிலும் நல்ல வருமானம் தரக்கூடிய உயர் பதவிகளிலும் பணிபுரிவதாக அங்கு நான் சந்தித்த நண்பர்கள் வழி அறிந்து கொண்டேன். இன்றைய இளைய தலைமுறையினர் நெசவுத் தொழிலை நாடி வருவதில்லை என்றும் இத்தொழில் படிப்படியாக குறைந்து வருகின்றது என்பதையும் அங்கு முடங்கிக் கிடந்த கைத்தறி இயந்திரங்களே சாட்சி கூறின. 

சாயர்புரத்தின் நெசவுத்தொழில் மட்டுமல்ல - தமிழத்தின் பல இடங்களில் நடைபெறுகின்ற நெசவுத்தொழில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதையும் இத்தொழிலை விட்டு மக்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்வதையும் காண்கின்றோம். இது காலம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் தான். ஆனால் தமிழர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற இக்கலை நலிவுற்று அழிந்து விடாமல் ஏதாவது ஒரு வகையில் இக்கலை தொடர்வதைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கின்றது. 

தூத்துக்குடியிலும் சாயர்புரத்திலும் தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகளை நேரில் பார்த்த போது அவை ஒவ்வொன்றுமே மிக அழகாக இருப்பதைக் கண்டேன். ஆனால் இப்போதெல்லாம் இக்காலத்துப் பெண்கள் கைத்தறியை விரும்புவதில்லை என்பதை மக்கள் சொல்லி கேட்கும் போது வருத்தமே மேலிடுகின்றது. தமிழர் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகிய இந்த நெசவுத்தொழிலை அது மறையாமல் வளர்க்க வேண்டுமென்றால் நாம் கைத்தறி ஆடைகளை வாங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.  கைத்தறி வளர்ச்சிக்கு நாமும் நம் பங்கினை ஆற்றுவோம்!















Thursday, October 5, 2017

72. மருங்கூர் - சங்ககால நகரம்



ஹோமோ செப்பியன் என அடையாளப்படுத்தப்படும் மனிதக்குலம் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி, பின்னர் உலகின் பல பாகங்களுக்குப் பரவியதாக ஆய்வாளர் கூறுவர். ஹோமோ செப்பியன் வகை மனிதர்களுக்கு முன்னரே நியாண்டர்தால் வகை மனிதக் குலம் இருந்தது என்பதும் அவை படிப்படியாக குறைந்து மறைந்தது, அல்லது வேறு சிறு மனிதக் குல வகையோடு அல்லது ஹோமோ செப்பியன் வகை மனித குலத்தோடு கலந்து மறைந்தது என்பதும் வரலாறு நமக்களிக்கும் செய்தி. மனிதகுலம் நெடுங்காலம் வாழும் பகுதிகளில் ஒன்றாக இன்றைய தமிழகத்தையும் குறிப்பிடத்தான் வேண்டும். மிகப் பல ஆண்டுகளுக்கு முன் இருந்தே மனித குலம் இங்கே வாழ்ந்ததற்கான தடயங்களையும் ஆதாரங்களையும் பற்றிய செய்திகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய தமிழகத்தில் விரிவாக நடத்தப்பட்ட சில அகழ்வாய்வுகள் இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரிகம் அடைந்த மனித இனக்குழுவாக இருந்தமையை உறுதி செய்யும் வகையில் உள்ளன. அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி, கொடுமணல் போன்ற நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

சங்ககாலத்தில் புகழுடன் விளங்கிய நகரங்களுள் ஒன்று மருக்கூர். சங்கப்பாடல்கள் சுட்டும் மருங்கூர் எனப்படும் நகரம் என்பது யாது என்பதும் ஒரு கேள்வியாகவே தொடருகின்றது. ஆயினும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் ஒரு சங்ககால நகரம் தான் என்பதற்கானச் சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதம் நான் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வரச் சென்றிருந்தேன். எனக்கு இப்பயணத்தில் திட்டமிடலுக்கு உதவியவர் வடலூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் பேரா.முனைவர்.சிவராமகிருஷ்ணன் அவர்கள். நான் வடலூருக்குச் செல்வது மிக இறுதி நேரத்தில் தான் முடிவாகியது. ஆக நகராண்மைக் கழக பேருந்திலேயே இரவுப் பயணம் செய்தேன். காலை 5 மணி வாக்கில் வடலூரை வந்தடைந்தேன். என்னை அந்த அதிகாலை நேரத்திலும் வரவேற்று அவ்வூரின் நாட்டமை திரு,சேகர் அவர்களது இல்லத்திலேயே நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர் வடலூர் நண்பர்கள்.

ஊர் நாட்டாமை பற்றி தமிழ்ச்சினிமா படங்களில் தான் கேள்விப்பட்டிருப்போம். நேரிலேயே ஊர் நாட்டாமையின் இல்லத்தில் தங்குவது மகிழ்ச்சியாக இருந்தது. அக்குடும்பத்தினர் என்மீது காட்டிய அன்பும் கரிசனமும் மறக்க முடியாதது. அவரது அழைப்பின் பேரில் வடலூர் இராமலிங்க வள்ளலாரின் திருச்சபைக்குச் சென்று பார்த்து வழிபட்டு வந்தேன். வடலூர் வள்ளலாரின் திருச்சபை நடவடிக்கைகளிலும் சமூஅக்ச் சேவையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் வடலூர் நாட்டாமை அவர்கள் என்பதை இந்தப் பயணத்தில் உணர்ந்தேன். ஒவ்வொரு பயணமும் எனக்குப் பல புதிய நட்பு வட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வாகவே அமைந்து விடும். அந்த வகையில் இந்த வடலூர் பயணமு எனக்குப் பல நல்ல புதிய நட்புகளை நான் அறிமுகம் செய்து கொள்ளும் பயணமாக அமைந்தது

எனது இருநாள் பயணப் பட்டியலில் இரண்டாம் நாள் நான்மருங்கூர் செல்வது உறுதியாகியிருந்தது. மருங்கூரை நாங்கள் சென்று சேர்ந்த போது காலை மணி 10 இருக்கலாம். வீடுகளே இல்லாத திறந்த வெளி. 1 ஏக்கர் நிலப்பகுதி தொல்லியல் அடையாளங்கள் நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டு முள் வேலி போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. முள்வேலி போடப்பட்டுள்ள பாதையின் வழியே நடந்து அருகே சென்று பார்வையிட்டோம். அப்பகுதியில் ஆங்காங்கே ஏறக்குறை 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவை காணப்பட்டன. சில பானை ஓடுகளில் கீறல்களும் இருந்தன.

பேரா.சிவராமகிருஷ்னன் இப்பகுதியின் சிறப்புக்கள் பற்றி விளக்குவதை நான் வீடியோ பதிவாக்கிக் கொண்டிருந்தேன். அப்பகுதி முக்கியமான சங்ககால வாழ்விடம் என்பது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. ஆயினும் இங்கு முறையான அகழ்வாய்வுப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. 2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. இங்குக் கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு.3ம் நூற்றாண்டு என்பதும், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு மேலோட்டமாகச் செய்யப்பட்ட ஆய்விலேயே இங்குக் கிடைக்கப்பெற்றன என்றும் தெரியவந்தது. சங்க காலத்து நார்ப்புர கட்டுமானத்தின் செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இன்றும் இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது என்பது போன்ற தகவல்களைப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் வழங்க, அவற்றை நான் வீடியோ பதிவாக்கிக் கொண்டிருந்தேன்

இப்பகுதியில் நாங்கள் இருப்பதைப் பார்த்த ஊர் மக்கள் சிலர் ஒருவர் பின் ஒருவராக எங்களை நோக்கி வந்து கூடிவிட்டனர். நாங்கள் நிலம் வாங்க வந்ததாக அவர்கள் நினைத்துக் கொண்டு விட்டனர் போலும். எங்களிடம் வந்து, ”இது அரசாங்க நிலம். இங்கே நிலம் விற்கமாட்டார்கள்” என எங்களுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்களைச் சமாதானம் செய்து இங்கே வரலாற்றுப் பதிவுகள் செய்ய வந்திருக்கின்றோம் என்பதை விளக்கியதும் எங்களோடு இருந்து எங்கள் பதிவாக்கத்தைப் பார்த்துக் கொண்டு நின்றனர். ஒரு வகையில் இவர்கள் கவனமாக இப்பகுதியைப் பார்த்துக் கொள்வதும் பாராட்டத்தக்கதே.

இப்பகுதியைப் பார்த்து விட்டு வெளியே நடந்து வரும் போது வரிசை வரிசையாகக் கொட்டகைகள் இருப்பதையும் அங்கே தனியாக அமர்ந்து சிலர் வேலை செய்து கொண்டிருப்பதையும் கண்டேன். தச்சர்களின் கொட்டகைகள் தான் அவை. வரிசையாகக் கைத்தொழில் செய்வோர் அங்கு தனித்தனி கொட்டகைகளை அமைத்து இரும்புக் கத்திகள், இரும்பு பாத்திரங்கள், அருவாள்மனை, வேல்கம்புகள் என தயாரித்துக் கொண்டிருந்தனர். காலத்தைக் கடந்து செல்லும் ஒரு கால இயந்திரத்தில் ஏறிக் கொண்டு சங்ககாலத்துக்கே போய்விட்டது போன்ற உணர்வு இவர்களைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்டது.

எத்தனை விதமான தொழில் திறமைக் கொண்டோர் நம் தமிழ் நிலத்தில் இருந்திருக்கின்றனர். இன்றோ பெரிய வியாபார நிறுவனங்கள் வந்து விட்டதால் அவை ஒற்றை வியாபார நிறுவனங்களை நோக்கிய தொழில் அடிப்படையை நோக்கிச் செல்வதைக் காண்கின்றோம். சிறு தொழில் செய்து வருமானம் ஈட்டுவோரின் தொழில் திறமை இவ்வகை வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாக்குதலில் தாக்குப்பிடிக்கமுடியாது படிப்படியாக குறைந்து, மறைந்து அழிந்து போவது தான் நடக்கின்றது. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல. உலகமெங்கிலும் இதே நிலைதான் இன்று கண்கூடு. இங்கு மருங்கூர் பகுதியில் வசிப்பவர்களான இவர்கள் தச்சர்கள், கம்மாளர்கள், பொற்கொல்லர்கள் என வகை வகையாகத் தொழில் ரீதியில் அடையாளப்படுத்தப்படும் தொழில் திறமைமிக்கோர் என்பதை இவர்களது குடிசைப்பட்டறைகளை வைத்தே அறிய முடிந்தது.

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த மருங்கூர் மட்டுமல்ல, இங்குள்ள பல பல சிறு கிராமங்களிலும் இது வரை ஆய்வாளர்களால் ஆராயப்படாத தகவல்கள் பல உள்ளன. அறியப்படாத தமிழகத்தை நாம் நம் தேடுதலின் வழி தொடர்ந்து ஆராயத்தான் வேண்டும்!!