Thursday, January 25, 2018

81. கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணற் சின்னங்களும்





தொல்பழமை பற்றிய தேடல் மிக சுவாரசியமானது. வரலாறு என்பதே இன்றைக்கு முன் சில காலம், அதற்குச் சில பல காலம்,  எனக் காலத்தால் பின்னோக்கிச் சென்று, அந்த ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்களைச் சேகரித்து அதனை ஆராய்வது எனக் கொள்ளலாம். இவ்வகையில் சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு வரலாற்றை எழுதும் முயற்சிகள் காலங்காலமாய் நிகழ்ந்து வருகின்றன.

தொல்லியல் சான்றுகளாய் இன்று உலகம் முழுதும் ஆய்வாளர்கள் கருத்தில் கொள்வதாகச் சிலவற்றைக் கூறலாம். உதாரணமாக, நிலத்தின் அடியில் தோண்டும் போது கிடைக்கின்ற மண்பாண்டங்கள், அவற்றின் மேல் உள்ள கீறல்கள், பல்வகை பொருட்கள், கட்டிட கட்டுமானத்தின் எச்சங்கள் என்பவற்றைக் கூறலாம். மேலும், இன்றும் நமக்குக் காட்சி தரும் வழிபடு தலங்கள், சின்னங்கள், அதில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியனவற்றையும் கூறலாம். இதேபோல, குன்றுகளிலும் மலைகளிலும் பாறைகளின் மேலோ அல்லது அடியிலோ கீறப்பட்ட ஓவியங்களையும் குறியீடுகளையும் இத்தகைய சான்றுகளாகச் சொல்லலாம். இவற்றோடு ஓலைச்சுவடிகள், பட்டுத்துணியின் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், பாப்பிரஸ் இலைகளைக்கூழாக்கி அவற்றைத் தாளாக்கி அதன் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் போன்றவற்றையும் கூட இவ்வகைச் சான்றுகளாக நாம் கொள்ளலாம்.

தமிழர் வரலாற்றை ஒரு வரியில் கூறிவிடுவது என்பது இயலாத காரியம். ஏனெனில் தமிழ்ச் சமூகம் இனக்குழுக்களால் பலவாறு தமக்குள்ளே சடங்குகள், சட்டங்கள், பண்பாட்டுக் கூறுகள், வாழ்வியல் நெறிகள், கலைகள் என வளர்ந்தவை. மிகப்பல தனித்துவக்கூறுகளை உள்ளடக்கியவை. இந்த வேறுபாடுகள் தமிழர் நாகரிகத்திற்கு வளம் சேர்ப்பவை. 

எனது ஒவ்வொரு வரலாற்றுத் தேடல் பயணத்திலும் புதுமையான செய்திகள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எனது தமிழகத்தின் மதுரைக்கான பயணமும் அமைந்தது.

மதுரை குன்றுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதி. இங்குள்ள பாறைகள் மிக உறுதியானவை. இங்கு தான் பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக குன்றுகளில் பாறைகளைத் தகர்த்து குவாரி கல் உடைப்பு பல முறை நடந்துள்ளது என்பதையும் வேதனையுடன் பதிய வேண்டியுள்ளது.

இந்தக் குன்றுகளும் இயற்கையாக அமைந்த பாறைகளும் இருக்கும் பகுதி, இன்றைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் ஒரு நிலப்பகுதியாகும். உண்மையில் சொல்லப்போனால், முழுமையான தொல்லியல் ஆய்வுகள் மதுரையில் முழுமையாக இன்று வரை நிகழ்த்தப்படவில்லை என்றே கூறவேண்டும். கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளே இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரான நாகரிக வளர்ச்சி பெற்ற ஒரு சமூகம் அப்பகுதியில் வாழ்ந்தமையை பிரதிபலிக்கின்றது. இதே போல மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் தொல்பழங்காலம் தொட்டு சங்ககாலம், சமீபத்திய காலம் வரையிலான பல ஆய்வுகளுக்கான ஆதாரங்களைத் திரட்டக்கூடிய வாய்ப்புக்கள் நிச்சயம் பெருகும்.

இப்படி மதுரையில் அமைந்திருக்கின்ற பாறைப்பகுதிகள் பொதுவாகவே மக்கள் வந்து தங்கியிருந்த வாழ்விடப் பகுதிகளாகவே இருந்திருப்பதை அறிய முடிகின்றது. மாங்குளம், அரிட்டாபட்டி, கீலவளவு, மேலவளவு, கீழ்க்குயில்குடி என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகைய ஒரு பாறை பகுதி ஒன்று கருங்காலக்குடி எனும் சிற்றூரில் இருக்கின்றது. மதுரையிலிருந்து மேற்கே ஏறக்குறைய 40கிமி தூரத்திலுள்ள ஒரு சிற்றூர் இது. எனது வரலாற்றுப் பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்தபோது இங்குள்ள புராதனச் சின்னங்களை நான் பதிவு செய்து அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக  2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியீடு செய்திருந்தேன்.

சமணத்துறவிகள் வந்து தங்கியிருந்ததாக அறியப்படும் இடங்களில் சில பொதுக்கூறுகள் உள்ளன. அத்தகைய பகுதிகளில் பாறைப்பகுதியில் தரைப்பகுதியில் படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கும். அதன் மேல்பகுதியில் உள்ள பாறையின் மேல் தமிழி (பிராமி) எழுத்துக்கள் வெட்டப்பட்டிருக்கும். மழை நீர் குகைக்குள் செல்லாதவாறு காடி என அழைக்கப்படும் விளிம்பு பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இன்று தென்படவில்லையென்றாலும் முன்னர் இங்கே பள்ளிக்கூடங்களை அமைத்து சமணத்துறவிகள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கல்வியைப் புகட்டியமை போன்ற  சமூக நடவடிக்கைகளும் இப்பகுதியில் நிகழ்ந்திருக்கும். இந்த அத்தனை கூறுகளும் உள்ள பகுதிதான் கருங்காலக்குடி.

கருங்காலக்குடிக்கு என்னுடன் தொல்லியல் அறிஞர்கள் டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.பத்மாவதி, மொழியியல் அறிஞர் டாக்டர்.ரேணுகாதேவி ஆகியோர் உடன்வந்திருந்தனர். நாங்கள் சென்ற நேரம் மதியம். வெயில் மிக அதிகமாகவே இருந்தது. வாகனத்தைத் தூரத்தில் நிறுத்தி விட்டு அப்பாறை பகுதிக்குச் சென்றோம். இப்பகுதி தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதி என்பதற்கு அடையாளமாக வாசல் பகுதியில் தகவல் குறிப்பு வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் போது முதலில் நம் கண்ணுக்குத் தென்படுவது ஒரு பாறையின் மேல் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று. முக்குடைகள் இல்லாமல் தனியே தீர்த்தங்கரர் மட்டும் உள்ளது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் கீழ் இரண்டு வரியில் ”ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த சிற்பம்” இது என வட்டெழுத்து தமிழில் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது கி.பி.9-10ம் நூற்றாண்டு வாக்கில் சமணத்திற்கு  மறுமலர்ச்சி ஊட்டிய அச்சணந்தி முனிவர் வடித்த சிற்பம். இதே போன்ற ஒரு வடிவம் அரிட்டாபட்டியிலும் இருக்கின்றது.

இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் வரிசை வரிசையாக ஏறக்குறைய முப்பது கற்படுக்கைகள் குகைப்பகுதிக்குக் கீழே செதுக்கப்பட்டுள்ளன. சிறிய தலைப்பகுதி மேடு போன்ற அமைப்புடன் ஒரு நபர் படுத்துறங்கும் வகையில் இக்கற்படுக்கைகள் அமைந்திருக்கின்றன.  இதற்கு மேல் உள்ள பாறையில் ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய சமண அறப்பள்ளியைப் பற்றிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழி எழுத்தில் எழுதப்பட்டது. இதன் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது.

இப்பாறைக்குப் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கப்பட்ட படிகள் இருக்கின்றன. அப்படிகளின் வழி ஏறி மேலே பாறை பகுதிக்குச் சென்றோம். அப்பாறை பகுதிக்குச் செல்வது, அதிலும் உச்சி வெயில் கொளுத்தும், போது பாறையில் காலணி இல்லாமலோ அல்லது போட்டுக் கொண்டோ... எப்படி செல்வதென்றாலும் சிரமம் தான். எப்படியோ ஒரு வழியாக வரிசை வரிசையாக இருந்த பாறைகளின் மேல் ஏறி ஒரு பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இங்கு தான் தொல்பழங்குடிமக்கள் வாழ்விடப்பகுதியாக இது அமைந்திருந்தபோது அவர்கள் எழுதி வைத்த பாறை குறியீடுகள் இருக்கின்றன.

இங்குள்ள பாறை குறியீடுகள் வெள்ளை நிறத்தில் பாறை மேல் கீறப்பட்டவை. இந்த வெள்ளை நிறம் என்பது சுண்ணாம்புக் கலவையும், மூலிகையும் குழைத்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தப் பொருளைக் கொண்டு பாறையில் பண்டைய மக்கள் ஓவியங்களாகவும், கோடுகளாகவும் செய்திகளைப் பதிந்து வைத்துச் சென்றுள்ளனர். இப்பகுதியில் நான் பார்த்து பதிவு செய்த குறியீடுகள்  ஏறக்குறைய 4000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் அறிஞர்களால் அடையாளப்படுத்தப்படுபவை. ஆக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குள்ள இன்று கிடைக்கின்ற முக்கியச் சான்றாக இந்தப் பாறை ஓவியங்கள் அமைகின்றன.

உலகம் முழுவதுமே பழமையான நாகரிகங்கள் இருந்த பகுதிகளில் பாறைகளின் மேல் தீட்டப்பட்ட குறியீடுகளும் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிஸர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்து அதிரம்பாக்கம், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வகை பாறை குறியீடுகளும் ஓவியங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இவை எவ்வகையில் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு ஆய்வுகள் தொடர்கின்றன என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.

கருங்காலக்குடியில் இப்பாறைகள் இருக்கும் பகுதியில் இன்று மக்கள் குடியிருப்பு இல்லை. இப்பகுதி புராதனச்சின்னம் இருக்கும் பகுதியாகப் தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுக்கப்படுகின்றது. இத்தகைய புராதனச் சின்னங்கள் தான் தமிழகத்தில் தமிழர் வரலாற்றை நாம் புரிந்து கொள்ள நமக்கிருக்கும் தரவுகள். இவற்றிற்குச் சேதம் ஏற்படாமல் அங்குச் செல்லும் நாமும் அவற்றை சேதப்படுத்தாமல் இவற்றைப் பார்த்து ரசித்து வரவேண்டும்.

மதுரையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் புராதனச் சின்னங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு பகுதி. அங்கு நம் வரலாற்றுத் தேடுதலுக்கு இன்னும் பல அதிசயங்கள் காத்திருக்கின்றன!.

Thursday, January 11, 2018

80. அரண்மனைக்காரர்களா, ஆர்மேனியர்களா..?


வணிகப்பாதைகள் உள்ள ஊர்களுக்கெல்லாம் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வணிகர்கள் வந்தார்கள். பலர் வந்து வணிகம் செய்து திரும்பினார்கள். சிலர் தாங்கள் புதிதாக வந்த ஊர்களிலேயே தங்கி விட்டனர். தங்கியவர்கள் புதிய ஊர்களில் உள்ள பண்பாடு மொழி கலை, சமயம் என அனைத்தையும் முற்றும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதில்லை. எங்கே சென்றாலும் தனது மொழி, பண்பாடு, கலை, சமயம், வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றை தாங்கள் செல்லும் புதிய நிலப்பகுதியிலும் பரவச் செய்வதைத் செய்திருக்கின்றனர்; செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் இத்தகைய முயற்சிகளைச் செயல்படுத்துவது எனச் சொல்லி விடமுடியாது. எல்லா இன மக்களும் இதனை இயல்பாகச் செய்வதைத் தான் இன்றைய வரலாறு நமக்கு வெளிச்சப்படுத்துகின்றது.

நான் பிறந்து வளர்ந்தது பினாங்கு மாநிலத்தில் தான். அங்கு ஜோர்ஜ்டவுன் பகுதில் ஆர்மேனியன் சாலை என்ற ஒரு சாலை இருக்கின்றது. சீன வணிகர்கள் நிறைந்த பகுதியாக இப்பகுதி தற்சமயம் இருக்கின்றது. இதற்கு ஏன் ஆர்மேனியன் சாலை எனப் பெயர் வைத்திருக்கின்றார்கள் என நான் முன்னர் பல முறை யோசித்ததுண்டு.

19ம் நூற்றாண்டில், அதாவது 1808ம் ஆண்டு வாக்கில் ஆர்மேனிய வணிகர்கள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு பினாங்குக்கு வந்திருக்கின்றனர். பினாங்கு ஒரு தீவு அல்லவா? இங்கே உள்ள பினாங்கு துறைமுகம் கடல் வழிப்பயணத்தின் மிக முக்கிய துறைமுகமாக பல ஆண்டுகளாகப் புகழ்பெற்ற ஒரு பகுதி. இன்றைக்கும் கூட இங்கு வந்து தங்கிச் செல்லும் கப்பல்கள் இக்கடல்பகுதியின் வணிக வளத்தை நமக்கு வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆக, பினாங்குக்கு அன்று வந்த ஆர்மேனியர்கள் பெருமளவில் வீடுகள் கட்டிக்கொண்டு பினாங்கில் தங்கிய சாலைதான் இன்று ஆர்மேனியன் சாலை என அழைக்கப்படும் பகுதி. இங்கே ஆர்மேனிய கிருத்துவ தேவாலயம் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்திருக்கின்றனர். 1937 வாக்கில் இந்தத் தேவாலயம் சிதைத்து அழிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இங்கு வந்து வாழ்ந்த  ஆர்மேனியர்கள் ஹோட்டல்கள் கட்டியிருக்கின்றனர். பினாங்கின் ஜோர்ஜ் டவுன் என்றால் E&O Hotel (The Eastern & oriental Hotel) பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கண்களைக் கவரும் கலை நயத்துடன் பினாங்கில் 1885ம் ஆண்டு ஆர்மேனியர்களான சார்க்கீஸ் சகோதரர்களால் கட்டப்பட்ட ஒரு தங்கும்விடுதிதான் இது. பள்ளி நாட்களில் E&O Hotel அருகாமை பகுதிகளில் செல்லும் போதெல்லாம் இதன் கட்டட அமைப்பை நான் மிக ரசித்துப் பார்ப்பதுண்டு. இதுதான் பினாங்கில் ஆர்மேனியர்கள் பின்னணியோடு இன்றும் தொடரும் வரலாறு.

தமிழகத்திற்கும் ஆர்மேனியர்கள் வந்திருக்கின்றார்கள். வணிகம் செய்திருக்கின்றார்கள். வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கின்றார்கள். தேவாலயம் கட்டி வழிபட்டிருக்கின்றார்கள். ஆம். அத்தகைய ஒரு தேவாலயத்திற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் சென்றிருந்தபோது சென்று பார்த்து அதன் வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அருகே ஆர்மேனியன் சாலை என்று ஒரு சாலை இருக்கின்றது. நான் ஒரு அலுவலாக அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது, சென்ற இடத்தில் கோப்புக்களைச் சரிபார்க்க நேரம் எடுக்கும் என ஒரு அதிகாரி தெரிவித்ததால் இருந்த நேரத்தில் அப்பகுதியைச் சுற்றி பார்க்கலாம் எனக் கிளம்பியபோது நண்பர் ஒருவர் அப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புடன் ஒரு புராதனச் சின்னமாகிய 18ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்று இருப்பதைப் பற்றி முன்னர் கூறியது நினைவுக்கு வந்தது. ஆக, அதனைத் தேடிச் செல்வோம் என வழியில் இருந்தோரை ஆர்மேனியன் சாலை எங்கிருக்கின்றது எனக் கேட்டு அப்பகுதிக்குச் சென்று சேர்ந்தேன்.

ஆர்மேனியன் சாலையின் இருபுறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. முதலில் என்னால் இந்தத் தேவாலயத்தை அடையாளம் காண முடியவில்லை.  தேவாலயத்தைக் காணாது சற்று தூரம் நடந்து சென்று விட்டேன். பின்னர் வழியில் சென்ற ஒருவரைக் கேட்டு மீண்டும் அதே தெருவில் நடந்து வந்து அந்தத் தேவாலயத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்று ஓரளவு சுற்றிப் பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்தேன்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆரம்பக்கால வடிவமாகிய ஜான் கம்பெனி காலத்திலேயே, தமிழகப் பகுதியில் அவர்களோடு வியாபாரம் செய்தவர்கள் ஆர்மேனியர்களும் யூதர்களும் தான் என்ற தகவல்களோடு மேலும் ஆர்மேனியர்களின் அன்றைய தமிழகச்சூழல் பற்றிய சில குறிப்பிடத்தக்கச் செய்திகளைத் தமது மதராசப்பட்டினம் நூலில் பதிந்திருக்கின்றார் கடலோடி நரசய்யா.  மெட்ராஸைப் பற்றி வரலாற்றுத் தகவல்களை வழங்கும் நல்லதொரு நூல் இது.

ஆர்மேனியர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு இன்றைக்கு 300 ஆண்டுகள் மட்டுமே என நினைத்து விடக்கூடாது. இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்கள், வாஸ்கோட காமா இந்தியா வந்து 'இந்தியாவைக் கண்டுபிடித்தேன்' என அறிவிப்பு செய்வதற்கு முன்னரே, அதாவது கி.பி. 780ல் மேற்கு கடற்கரையில் வந்திறங்கியிருக்கின்றார் 'தோமஸ் கானா'. அவர் அங்குக் 'கானா தோமா' என அறியப்பட்டிருக்கின்றார். ஆர்மேனிய மொழியில் இதற்கு தோமா பாதிரி என்று பொருள். தமிழகப் பகுதியில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த முன்னோடிகளில் இவரும் ஒருவராக அறியப்படுகின்றார்.

சரி..  உலக வரலாற்றில் ஆர்மேனியர்களைப் பற்றியும் சற்று தெரிந்து கொள்வோமே!

ஆர்மேனியா துருக்கிக்கு மேற்கே உள்ள நாடு. துருக்கியால் மிகப் பெரிய மனிதக்குல நாசத்தை அனுபவித்த ஒரு நாடு என்றும் சொல்லலாம். ஜோர்ஜியா, அஜீர்பைஜான், ஈரான் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டது. அதோடு கிருத்துவ மதம் உருவாகிய காலகட்டத்தில் கிருத்துவ மதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்டு முதன் முதலில் அறிவித்த நாடு ஆர்மேனியா. இது நிகழ்ந்தது கி.பி.4ம் நூற்றாண்டில், அதாவது கி.பி 40 தொடங்கி  பல பகுதிகளுக்குக் கிருத்துவ மதம் பரவி வந்த வேளையில் ஆர்மேனியாவை ஆண்டுவந்த மன்னன் மூன்றாம் ட்ரீடாஸ் (Tiridates III of Armenia (238–314)) நாட்டில் அதிகாரப்பூர்வ மதமாக கி.பி. 301ம் ஆண்டு பிரகடனப்படுத்தினார். அதன் பின்னர் பைஸண்டைன் ஆட்சி, அதன் பின்னர் ஒட்டோமான் பேரரசின் கீழ் வீழ்ச்சி, 20ம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் துருக்கி நிகழ்த்திய மிக மோசமான இனப்பேரழிவால் பாதிக்கப்பட்டு, பின்னர் ரஷியாவுடன் இணைந்து, பின்னர் 1991ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு தான் ஆர்மேனியா.

பண்டைய பேரரசுகள் பல தோன்றி மனித குல நாகரிகம் செழித்த பகுதிகளில் இதுவும் ஒன்று. ஆனால் மிக மோசமாகப் போர்களால் சிதைக்கப்பட்ட ஒரு நாடு என்பதுவும் உண்மையே. ஆயினும் ஆர்மேனியர்கள் உலகம் முழுவது வணிகத்தில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படும் ஒரு இனமாகவே தம்மை நிலைப்படுத்தியிருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

தமிழகத்தின் மெட்ராஸ், வணிகர்களுக்கு ஒரு சுவர்க்கபுரி அல்லவா?  வணிகத்திற்காக ஆர்மேனியர்கள் மெட்ராஸில் 1660 வாக்கில் குடியேறியிருக்கின்றனர். இதனை உறுதிப் படுத்தும் வகையில் மெட்ராஸில் உள்ள ஒரு ஆர்மேனியரின் 1663 ஆண்டு பொறிக்கப்பட்ட கல்லறை ஒன்று சின்னமலைப் பகுதியில் இருந்தது,. வணிகர்களாக வந்தவர்கள் சிலர் மெட்ராஸிலேயே தங்கி வாணிபம் செய்யத் தொடங்கினர். ஆங்கிலேய அரசுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தாதவகையில் இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருந்தபடியால் ஆங்கிலேயர்கள் இவர்கள் தங்குவதற்காக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இருக்கும் பகுதியில் ஒரு பகுதியை அன்று வழங்கினர். அங்கு தான் இன்றும் இந்தத் தேவாலயமும் இருக்கின்றது.

இந்தத் தேவாலயம் மட்டுமன்றி ஆர்மேனியர்கள் 1820ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தையும் மெட்ராஸில் கட்டியிருக்கின்றார்கள். ஜாவா ஜார்ஜ் மானுக் என்ற ஒரு செல்வந்தர் 30,000 ரூபாய்களை இந்தப் பள்ளிக்கூடத்திற்காக தானம் செய்தார்   என்று தெரிகிறது. ஆனால் மெட்ராஸிலிருந்த ஆர்மேனியர்களின் எண்ணிக்கையோ குறைவு. ஆக, படிப்படியாக மாணவர்கள் குறைந்து 1889ம் ஆண்டில் இப்பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

ஆர்மேனியர்கள் ஆரம்பித்த முதல் பத்திரிக்கையும் மெட்ராஸில் தான் தொடங்கப்பட்டது என்பதும் ஆச்சரியம் அளிக்கும் உண்மை. பாதிரியார் ஹாரோஷியன் ஷிமவோனியன் என்பவர் அஸ்டார் என்ற பெயரில் முதல் ஆர்மேனியன் சஞ்சிகையைத் தொடங்கியிருக்கின்றார். இது குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டது. பின்னர் 1796ல் நிறுத்தப்பட்டது. ஒரு அச்சகத்தை மெட்ராஸில் நிறுவி அங்கு இச்சஞ்சிகையையும் மேலும் சில நூற்களையும் ஆர்மேனிய மொழியில் அச்சடித்து விற்றிருக்கின்றனர். இதே அச்சகத்தில் பெர்சிய மொழியிலும் நூல்கள் அச்சுப்பதிப்பு செய்யப்பட்டன. பெர்சிய மொழியில் முதல் அச்சுப்பதிப்பாக்கம் நடந்த இடமும் மெட்ராஸ் தான். அக்கால கட்டத்தில் ஆர்மேனியர்கள் தொடக்கிய மூன்று அச்சகங்கள் செயல்பாட்டில் இருந்தன என்பதுவும் 19ம் நூற்றாண்டின் இறுதிக்குள் இவை செயல்பாடில்லாமல் மூடப்பட்டன என்றும் அறிய முடிகின்றது.

இன்றைய சென்னையில் ஆர்மேனியன் சாலையைக் குறிப்பிடுவோர் 'அரண்மனைச் சாலை' என்று சொல்லிச் செல்வதால் ஆர்மேனியன் என்ற சொல் வழக்குக் குறைந்து 'அரண்மணைத்தெரு' என்ற வழக்கு வந்துவிட்டது. எதற்காக அரண்மனைத் தெரு என அழைக்க வேண்டும், எனக் கேட்டால் அவர்களுக்கு அதற்கான பொருள் தெரியாது.. 'அது யாருக்குத் தெரியும்?' என கைகளை விரித்துச் சொல்லி விட்டுச் சென்று விடுவர். இப்படி காரணம் தெரியாமல் ஊர்களின் பெயரையும் சாலைகளின் பெயரையும் மாற்றி அழைப்பதும் வரலாற்றை மறையச் செய்யும் ஒரு செயல்பாடாகத்தான் காண வேண்டியுள்ளது.

மெட்ராஸில் உள்ள ஆர்மேனியன் தேவாலயத்திற்கு நான் சென்ற போது மதியம் ஏறக்குறைய இரண்டு மணி இருக்கும். கொளுத்தும் வெயில். வாசலை மறைத்திருக்கும் கடைகளைத் தாண்டி உள்ளே செல்லும் போது தேவாலயத்தின் வாசல்பகுதியில் தேவாலயம் கட்டப்பட்ட ஆண்டு 1712 என்ற குறிப்பு இருப்பதைக் காணமுடிந்தது . முழுவதும் வெள்ளை நிறத்தினாலான தேவாலயம். உள்ளே சிறிய தோட்டம் ஒன்றும் உள்ளது. வலது புரத்தில் தேவாலயம்.  மிக எளிமையான வகையில் கட்டப்பட்ட அமைப்புடன் கூடிய அழகிய தேவாலயம் இது. சுவர்களில் இப்பகுதியில் வாழ்ந்த ஆர்மேனியர்களில் முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய காட்சி என சுவரில் மாட்டி வைத்திருக்கின்றனர். இங்கே உள்ளே வந்து பார்த்தால் வெளியே உள்ள சாலைகளும் ஆர்மேனியன் சாலையின் வியாபாரிகளும் இல்லாத, இன்றைக்கு 200 ஆண்டுகள் பின்னோக்கி வந்த உணர்வினைப் பெறக்கூடிய வகையில் இந்த அமைப்பு மாறாது அழகாகப் பேணப்படுகின்றது.

மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்த இந்தச் சாலையில் இப்படி ஒரு புராதனச் சின்னமா, என என்னை வியக்க வைத்தது இந்த 300 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயம். மதிய நேரத்து வெயிலில் இப்பகுதியில் சுற்றி அலைந்து தேடி கண்டுபிடித்துப் பார்த்ததில் ஏற்பட்ட களைப்பு தீர, இந்தத் தேலாயத்திற்கு எதிர்புரம் இருக்கும் ஒரு உணவகத்தில் ஜிகிர்தண்டா வாங்கி அருந்தி என் களைப்பைப் போக்கிக் கொண்டேன்.

'சென்னையில் அப்படி என்ன இருக்கின்றது பார்ப்பதற்கு?' எனச் சொல்லும் சில நண்பர்களை நான் அறிவேன். அறியப்படாத தமிழகத்தில், அறியப்படாத மெட்ராஸ் என்ற ஒரு பகுதி இருக்கின்றது, என்பதை அறிந்து கொள்வதோடு ஆவணப்படுத்தவும் வேண்டும்.  அதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமையும்.