Wednesday, November 30, 2016

39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்




தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை இன்றும் நமக்கு காட்டுவனவாக அமைந்திருக்கும் கோயில்கள் பல. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக அமைந்திருப்பவை மகாபலிபுரத்து குடைவரைக் கோயில்களும் காஞ்சிபுரத்து ஸ்ரீ கைலாசநாதர் கோயிலும். இது மட்டுமன்றி விழுப்புரம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகியவற்றுடன் பனைமலை தாளபுரீஸ்வரர் ஆலயமும் பல்லவ மன்னர்களின் கோயிற்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவை.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப்புராதனச் சிறப்பு மிக்க இடங்களின் பதிவுகளைச் செய்யத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுயினர் சென்றிருந்தோம். அந்தப் பட்டியலில் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தின் பெயரையும் இணைத்திருந்தேன். இந்தக் கோயில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கோவில்களும் கலைகளும் நீர் மேலாண்மையும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்ச்சியுர்றமைக்குச் சான்றாகத் திகழ்பவை.


செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்றது "பனைமலை". இது விவசாய நிலப்பகுதி நிறைந்த ஊர் என்றாலும் பாறைக்குன்றுகள் நிறைந்த ஒரு பகுதி. இங்குள்ள மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்று பெரிய ஏரி அமைந்துள்ளது. இது இரண்டாம் நரசிம்மன் அல்லது ராசசிம்மன் என அழைக்கப்படும் பல்லவ மன்னனால் அமைக்கப்பட்டது. இந்தக் கற்பாறை மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே இன்றும் காட்சியளிக்கின்றது பனைமலை.


வயல்பகுதியைக் கடந்து ஏரிப்பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் பெரிய பாரைக்குன்று இருக்கும்பகுதியில் கற்பாறைமலைமேல் அமைந்திருப்பதுதான் தாளகிரீஸ்வரர் ஆலயம். இது பல்லவர் கால கட்டுமானக் கலைக்குச் சிறப்பைப் சேர்க்கும் ஆலயங்களின் வரிசையில் தனி இடம் பெறும் ஒரு கோயில். ஆலயத்திற்குச் செல்லுமுன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் முதலில் நமக்குத் தெரிவது ஒரு பிள்ளையார் கோயில். பாறையை முற்றிலுமாக குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இது. ஆயினும் முன்பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களும் உள்ளன இதன் உள்ளே பெரிய பிள்ளையார் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் பாறைசுவற்றில் மூஞ்சுறு வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து தொடங்கி மேல் நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். செங்குத்தான மலையில் ஏறுவதற்குப் பாறைகளையே படிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு சுரங்கப்பாதையின் வாயில் பகுதி தெரிகின்றது. இச்சுரங்கப்பாதை மேலே இருக்கும் கோயில்வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை தற்சமயம் புதர்கள் மண்டிக்கிடப்பதால் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றது.

படிகளைக் கடந்து செல்லும் போது பாறைகளுக்கிடையே குடைந்து சுனைகள் இருப்பதைக் காண முடிகின்றது. பெரிய குளங்களும் பாறைகளுக்கு இடையில் இருக்கின்றன. நீர் தேங்கி இருக்கும் குளங்களில் அல்லியும் தாமரைச்செடிகளும் நிறைந்திருக்கின்றன.

இந்தக் கோயிலை முதலில் பார்ப்பவர்கள் இது வெவ்வேறு காலத்து கட்டுமானங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கும் நிலையைக் காணலாம். இந்தக் கோயிலில் உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் ஏனைய இடங்களில் பல்லவர்களுக்குப் பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் கோயில் கட்டுமானப் பகுதியில் சீரமைப்பிற்காக மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். ஆங்காங்கே ஆலயத்தில் சுதைப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பல இடங்கள் உடைந்த நிலையில் இருக்கின்றன . இக்காரணங்களினால் மாறுபட்ட கட்டிட அமைப்புக்களை இடைக்கிடையே இருப்பதைக் காண முடிகின்றது.


கோவிலைச் சுற்றியும் எல்லாப் பகுதிகளிலும் ராஜசிம்ம பல்லவனுடைய காலத்து நிகழ்வுகளைக் கூறும் நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம். இவற்றில் பல நன்கு வாசிக்கக் கூடிய வகையிலேயே இருக்கின்றன. இன்றும் வாசிக்கக்கூடிய வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கருவறையின் தெற்குப் பக்க படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தத் தமிழ்க் கல்வெட்டுகள் பிற்காலத்தைவை.


தமிழகத்தின் காஞ்சிபுரம் அதன் கோயில்களுக்குப் புகழ்பெற்ற ஒரு நகரம். இங்குள்ள காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் ராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில். பல்லவ மன்னர்கள் இசை, நடனம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் எனக் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.


இந்தக் கோயிலின் விமானத்தின் உட்புறமோ, கருவறையிலோ இன்று ஓவியங்கள் எவையும் முழுமையாகக் காண முடியவில்லை. எனினும், விமானத்தைச் சுற்றி வரும் போது, கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஒரு சன்னிதியில் மட்டும் உள்ள ஓவியம் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தச் சன்னிதி உயரமாக ஏறக்குறையத் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியின் உள்ளே சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்கள்.

ஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகின்றன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது. சன்னிதிக்கு உள்ளே மறைவாக இந்த ஓவியம் இருப்பதால் தான் இன்றளவும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் முற்றிலும் சிதைவுறாமல் தப்பியுள்ளது எனக் கூறலாம். உமையம்மை தனது ஒரு காலை சிறிய மேடை மேல் நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி ஒயிலாக நின்ற கோலத்தில் இந்த ஓவியத்தில் காட்சி தருகின்றார். தெய்வீக எழில் நிறைந்த இந்த ஓவியம் இந்திய ஓவியக் கலைக்குச் சிறப்பைச் சேர்ப்பது.

இந்த ஆலயத்தின் வாயில் பகுதியிலிருந்து நோக்கினால் சிவலிங்க வடிவத்தை உமை பார்ப்பது போல் இக்காட்சி தோன்றும். இதே சன்னிதியின் மேற்பரப்பில் ஓவியங்கள் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளன.

மலைப்பகுதியிலிருந்து கீழிரங்கும் பகுதியில் கீழே நாட்டார் வழிபாட்டுத் தெய்வ வடிவங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர். சப்த கண்ணிகளின் உருவங்கள் கற்களால் அமைக்கப்பட்ட வகையில் காட்சியளிக்கின்றன. இதன் அருகில் உள்ள ஒரு குகையில் துர்க்கை அம்மனின் கருங்கற்சிலை ஒன்றும் உள்ளது.

இந்தக் கோயிலையும் அதன் சூழலையும், பல்லவ மன்னன் ராசசிம்மப்பல்லவன் உருவாக்கிய இந்த ஆலயத்தில் இருக்கும் உமை அம்மை ஓவியத்தைப் பற்றியும் விளக்கும் விழியப் பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப் பிரிவில் காணலாம்.

பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய புராதனச் சின்னம். தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் கோயிலாக இக்கோயில் உள்ளது. ஆயினும், இங்குள்ள ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

Thursday, November 24, 2016

38. தஞ்சை பெரிய கோயில்



மலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் அனைவரது சுற்றுலா தலங்களுக்கான பட்டியலிலும் தவறாது இடம்பெறும் ஒரு இடம் என்னவென்றால் அது நிச்சயமாகத் தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற பெரிய கோயில் தான். அதனை ஏன் பெரிய கோயில் என அழைக்கின்றோம?  இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா? என்றால் சுற்றளவிலும் பரப்பளவிலும் பெரிய விரிவான ஏனைய கோயில்கள் இருந்தாலும், தென் இந்தியாவில் இருக்கும் மிக உயர்ந்த கோயில் விமானப்பகுதியைக் கொண்ட கோயில் இது என்பதால் இந்தக் கோயிலுக்குப் பெரிய கோயில் என்ற ஒரு தனிச்சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. 

90ம் ஆண்டுகளில் ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் இணைந்து ஏனைய சில மலேசிய நண்பர்களும் என இக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது கோயில் கருவறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்று மலர் தூவி வழிபடச் செய்தார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நான்கு முறைகள் நான் இந்தப் பெரிய கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அதில் ஒருமுறை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பிரத்தியேகப் பதிவைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றிருந்தேன். நண்பர் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் என்னை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்குத் தொலைப்பேசி வாயிலாக அறிமுகப்படுத்தி வைக்கக், கோயிலுக்கு நான் சென்றதுமே என்னை இன்முகத்துடன் வரவேற்று தஞ்சை பெரிய கோயில் பற்றிப் பல வரலாற்றுத் தகவல்களை அவர் கூறினார். அவை ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கல்வெட்டு ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு ராஜராஜேச்சுவரம், தஞ்சாவூர் எனக் குறிப்பிடத்தக்க நூற்களின் ஆசிரியர் என்ற சிறப்புக்களைக் கொண்டவர். இன்றும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர் இவர். 

இந்தக் கோயிலுக்கு பிரஹதீவரம், என்ற பெயருடன் இராஜராஜேச்வரம் என்ற பெயர்களும் உண்டு. 

ஆரம்பத்தில் எந்த மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது அறியப்படாமலேயே இருந்தது. 1886ம் ஆண்டில் அக்கால ஆங்கிலேய அரசு திரு.ஹூல்ஸ் என்ற ஜெர்மானிய ஆய்வறிஞரைத் தமிழகத்தில் கல்வெட்டாய்வாளராக நியமித்தது. இவர் பெரிய கோயிலின் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக்கோயிலைக் கட்டிய அரசன் முதலாம் இராசராசனே என அறிவித்தார். பின்னர் 1892ல் திரு.வெங்கையா பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுக்கள் என்னும் நூலில் இரண்டாம் தொகுதியில் இடம்பெறும் முதல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள 
"பாண்டிய குலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் 
தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் "
என்னும் கல்வெட்டினால் இச்செய்தி மேலும் உறுதியானது. 

இந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களும் இக்கோயில் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் அறிகின்ற பெயர்களாக தலைமைக் கட்டடக் கலைஞனான வீரசோழன் குஞ்சரமல்லன் ராசராசப் பெருந்தச்சன், இரண்டாம் நிலை கட்டடக் கலைஞனான மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன் மற்றும் மேலும் ஒரு இரண்டாம் நிலைப்பெருந்தச்சனாகிய இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகிய பெயர்களைக் கூறலாம். 

இக்கோயிலின் ஏனைய கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களின் படி மாமன்னனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார், மகன் இராஜேந்திர சோழன், ராஜராஜனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர், சைவ ஆச்சாரியார் அல்லது தலைமை குருக்களான பவனபிடாரன், சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்ற பெயர்களும் அவர்கள் தொடர்பான செய்திகளும், இன்னும் ஏனைய பல செய்திகளும் உள்ளன. 

இராஜராஜேச்சுரத்தின் நுழை வாசலில் அமைந்திருக்கும் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகின்றது. ராஜராஜனின் காலத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில்கள் அனைத்தும் உயரங் குறைந்த கோபுரங்கள். முதன் முறையாக உயரமாக அமைக்கப்பட்ட கோயில் கோபுரம் என்றால் அது பெரிய கோயிலில் உள்ள இந்த கேரளாந்தகன் நுறைவாயில் கோபுரம் தான். கி.பி988ம் ஆண்டில் கேரள நாட்டிலுள்ள காந்தளூர்ச்சாலையை (அதாவது இன்றைய திருவனந்தபுரம் அருகில் உள்ள பகுதி ) வென்றமையால் கேரளாந்தகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். அதன் நினைவாக இந்த நுழைவாயில் கேரளாந்தகன் நுழைவாயில் எனப்பெயரிடப்பட்டது. மிக அகலமான அதிட்டானத்தின் மேல் இக்கோபுரம் எடுப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் கருங்கற் வேலைப்பாடுகளும் சுதையினால் செய்யப்பட்ட சிற்பங்களும் சேர்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் வடபகுதி முழுவதும் சதாசிவ மூர்ஹ்ட்தியின் சிற்பங்களே நிறைந்திருக்கின்றன. 

இந்த நுழைவாயிலைக் கடந்து சென்றால் அடுத்து வருவது இராசராசன் திருவாயில். இப்பகுதியில் மிகப்பெரிய உருவத்தில் கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி ஒன்று உள்ளது. இது பிற்காலத்தில், அதாவது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ராசராசன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி கோயிலினுள்ளே திருச்சுற்று மாளைகையில் வராகி அம்மன் கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 

பெரிய கோயிலின் இராசராசன் திருவாயில் முழுவதும் பல சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. சிற்பத்தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புராணக் கதையை விளக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாக திரிபுரத்தை சிவபெருமான் தகனம் செய்து பின் அந்த அசுரர்களுக்குக் காட்சி அளித்தமையைக் காட்டுவதாக உள்ளது. இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் இருக்கும் துவாரபாலகர் வடிவம் தான் உலகிலேயே மிகப் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள். இப்பகுதியிலேயே சண்டீசர் கதைத் தொகுப்பாக ஒரு சிற்பத் தொகுதி ஒன்று உள்ளது. அதில் விசாரசர்மன் (சண்டீசர்) மழுவால் தன் தந்தையின் காலை வெட்டும் காட்சியும் பசுக்கூட்டமும் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவர திருக்கலியாணக் காட்சிகள் சிற்பத்தொகுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கடுத்தார்போல, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைத் தழுவுவது போன்ற காட்சி சிற்பத்தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் தொடர்ச்சியாக வள்ளியை மணமுடிக்கும் முருகன் கதையை விளக்கும் சிற்பத் தொகுப்பு அமைந்துள்ளது. இப்படி வரிசையாகப் பல புராணக்கதைகளைச் சிற்பங்களாக வடித்ஹ்டு அமைத்துக் கொடுத்திருக்கின்றனர் இக்கோயிலைக் கட்டிய சிற்பிகள். சிற்பக்கலைக்கூடமாக இது இன்று நம் கண்முன்னே திகழ்கின்றது. 

தஞ்சைப் பெரியகோயிலின் விமானப்பகுதியே சதாசிவ லிங்கமாக வடிக்கப்பெற்றது. இதனைக் காட்ட மாமன்னன் இராஜராஜன் சதாசிவ வடிவத்தின் ஐந்து திரு உருவங்களையும் தனித்தனியே வடித்து அதற்கேற்ற திக்குகளில் பிரதிட்டை செய்து வழிபாடு செய்துள்ளான். பல மைல் தூரத்திலிருந்து பார்க்கும் போதே சதாசிவலிங்கமாகக் காட்சியளிக்கும் பெரிய கோயில் ஸ்ரீவிமானத்தை நன்கு காணலாம். 

சிற்பங்கள் மட்டுமே இக்கோயிலில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். கலாரசிகனான ராஜராஜன் இக்கோயிலின் கருவறை இரு சுற்றுச் சுவர்களுக்கு இடையே உள்ள சாந்தாரம் எனும் சுற்றுக்கூடத்தில் ஓவியங்களை தீட்டச் செய்துள்ளான். இந்த ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 

இக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் நுண்ணிய கட்டுமானச் சிறப்பைக் கொண்டவை. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது உலக அளவில் தமிழர் கட்டுமானக் கலையின் சிறப்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்ததொரு வாழும் ஆவணமாகத் திகழ்கின்றது. இந்தத் தகவல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப்பிரிவில் உள்ளன. இக்கோயிலைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் உள்ள முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது இராஜராஜேச்சுவரம் என்ற நூலையும் தரவிறக்கி வாசிக்கலாம். 

Wednesday, November 16, 2016

37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு



நமது இருப்பிடத்தின் முகவரியைத் தரவேண்டுமென்றால் எந்த நாட்டில் எந்த நகரத்தில் வசிக்கின்றோம் என்பதைக் கட்டாயம் நாம் தெரிவித்துத்தான் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நகருக்கும் அவை தோன்றிய காலம், அதன் வரலாறு பற்றி பொதுவாக நாம் யோசிப்பதில்லை. நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள ஏறக்குறைய அனைவருமே முக்கியத்துவம் காட்டுவதில்லை, ஒரு சில வரலாற்றுப் பிரியர்களைத்தவிர. இன்றைக்கு நாம் வசிக்கும் நகரங்கள் பன்னெடுங்காலமாக அதே பெயரில் அதே அமைப்பில் அதே அளவில் இருந்ததில்லை. நகரங்களின் பெயர்களும் காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வந்துள்ளன, அளவில் கூடியும் குறைந்தும் மாற்றம் கண்டிருக்கின்றன. ஒரு சில நகரங்கள் பலபல பெயர்களில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வதும் அறிந்து கொள்வது என்பதுவும் வரலாற்றுத்துறையில் அடங்குவதுதான்.

நமக்கு இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உலகின் மிகப்பழமையானதும் மக்கள் வாழ்ந்த நகரங்களாகவும் அறியப்படும் நகரங்களின் வரிசையில் பாலஸ்தீன நாட்டின் ஜெரிக்கோ, லெபனான் நாட்டின் பிப்லோஸ் மற்றும் பெய்ருட், சிரியாவின் அலெப்பொ மற்றும் டமாஸ்கஸ், ஆப்கானிஸ்தானின் பால்க், ஈராக்கின் கிர்க்குக் மற்றும் அர்பில், துருக்கியின் காஸியாந்தெப் மற்றும் கோப்பெக்லி தீப், பல்கேரியாவின் ப்ளோவ்டிவ், எகிப்தின் ஃபையூன், ஈரானின் சூசா, கிரேக்கத்தின் ஏதன்ஸ் மற்றும் தீப்ஸ், ஸ்பெயினின் காடிஸ், இந்தியாவின் வாரனாசி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழகத்தில் நாம் பொதுவாக அறிந்திருக்கும் நகரங்கள் சிலவற்றுள் திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி , காரைக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல், திண்டிவணம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என சில நகர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் சென்னை என நாம் அறிந்த ஊரின் அன்றைய பெயர் மதராசபட்டினம். இந்த நகரின் வரலாற்றினை எழுதியவர் கடலோடி என அழைக்கப்படும் திரு.நரசய்யா அவர்கள். இவரது ஆய்வில் இந்த நூலைப்போன்றே ஆலவாய் என்ற மற்றொரு நூலும், ஏனைய பல புனைகதைகளும், கட்டுரை நூல்களும் கடித இலக்கிய நூல் ஒன்றும் வெளிவந்துள்ளன. திரு.நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக இருந்து நமது வரலாற்று ஆய்வுப்பணிகளில் தம்மை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைத்துக் கொண்டவர்.

"மதராசப்பட்டினம் - ஒரு நகரத்தின் கதை 1600-1947" என்ற தலைப்பில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் சாந்தோம் அல்லது கோரமண்டலம் எனப்படும் பகுதியைப்பற்றிய அறிமுகமும் வரலாறும், மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் வருகை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நிர்மாணிப்பு சீரமைப்பு அவை பற்றிய ஆவணங்கள், அக்கால வழக்கில் இருந்த நீதிமுறைகள் மற்றும் நீதிபதிகளும் அன்று முக்கியப் பிரச்சனையாக தலைதூக்கிய வலங்கை இடங்கை பிரச்சனைகள் மற்றும் கிறிஸ்துவ மத சம்பந்தமான பிரச்சனைகள் பற்றியும் மதராசில் துபாஷிகள், தொலைப்பேசி பயன்பாடு, பொது போக்குவரத்துப் பயன்பாடு போன்ற தகவல்களும் மதராசப்பட்டினத்தில் நிகழ்ந்த அடிமை வியாபாரமும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் நடத்திய வர்த்தகச் செய்திகளும், மதராசப்பட்டிணத்திற்குப் பெருமை சேர்த்த பெரியோர் மற்றும் பெண் ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்து கல்வி முறை அமைப்பு, மதராசப்பட்டினத்தின் மாநகராட்சி முறை, மதராச பட்டினத்துக் கோயில்கள் மற்றும் ஏனைய சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள், மதராசப்பட்டினத்து சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என பதின்மூன்று அத்தியாயங்களில் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக இந்த நூலைத் திரு.நரசய்யா படைத்திருக்கின்றார்.

இந்த நூலை தாம் எழுத நேர்ந்தமையைப் பற்றியும் இதன் சிறப்புக்களை அவர் விவரிக்கும் பிரத்தியேக ஒலிப்பதிவு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் வரலாற்றுப்பக்கத்தில் உள்ள மதராசப்பட்டினம் என்ற தலைப்பிலான பக்கத்தில் உள்ளது. இந்தப் பேட்டியை தொலைப்பேசி வழியாக  2008ம் ஆண்டில் நன பதிவு செய்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். இந்தப் பேட்டிகளைக் கேட்பதன் வழி திரு.நரசய்யா தம் குரலிலேயே மதராச பட்டினம் தொடர்பான கருத்துக்களை வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதைக் கேட்கலாம்.

மயிலாப்பூர் இன்று கபாலீசுவரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி கோயிலுக்காகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்கின்றது. இதன் அருகில் இருக்கும் சாந்தோம் பகுதி இன்று சாந்தோம் தேவாலயத்தின் புகழைச்சொல்வதாக அமைந்திருக்கின்றது. 16 ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா தலைமையிலான குழு கேப்ரியல் என்ற கப்பலில் பயணித்து இந்தியா வந்தமையைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த முதல் பயணத்தின் பின் மீண்டும் தொடர்ந்த கடற்பயணங்களில் படிப்படியாக வர்த்தக நோக்கத்துடனும் பின்னர் மதம் பரப்பும் நோக்கத்துடனும் போர்த்துக்கீசியர்கள் வருகை என்பது தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்தது. சாந்தோம் பகுதியில் 1522க்கு முன்னர் போர்த்துக்கீசியர்கள் தமது ஆட்சியை நிறுவவில்லை என்ற போதிலும் சாந்தோமிற்கு அருகில் இருக்கும் லஸ் சர்ச் எனப்படும் தேவாலயம் 1516ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே உள்ள சாசனக் கல்லில் உள்ள தகவலின் படி அறிந்து கொள்ள முடிகின்றது.

சாந்தோமைப்பற்றி குறிப்பிடும் போது செயிண்ட் தோமஸ் பாதிரியாரைப்பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியமாகின்றது. ஏசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்கள் பலவாறாகப் பிரிந்து பல தேசங்கள் சென்றதாகவும் அவர்களின் வழி வந்த ஒருவர் இந்தியா வந்து அதிலும் சாந்தோம் என அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்ததாகவும், செயிண்ட் தோமஸ் எனும் அவரது பெயரே சாந்தோம் என மாற்றம் கண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் தாம் என்றாலும் இவை குறிப்பிடப்படவேண்டியனவே என்பதை மறுப்பதற்கில்லை. வரலாற்று ஆவணங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய போர்ச்சுக்கல் மன்னனான இரண்டாம் பிலிப்பின் வேண்டுகோளின்படி, போப் அவர்களால் 1606ம் ஆண்டில் நிறுவப்பட்டதுதான் டயோசிஸ் ஆஃப் சாந்தோம். பின்னர் இப்பகுதிக்குள் மயிலாப்பூரும் இணைந்தது. இந்த டயோசிஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் இருந்த பழைய சர்ச்சுக்களும் இந்து சமயக் கோவில்களும் சமண சமயக் கோயில்களும் இடிக்கப்பட்டன. இங்கு புதையுண்ட பகுதிகளைத் தோண்டியபோது சமணர்களின் நேமிநாதர் ஆலயத்தின் எச்சங்கள் இங்கே கிடைத்தன என்றும் இவை அருங்காட்சியகத்தில் தற்சமயம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அறிகின்றோம். இன்று சாந்தோமில் இருக்கும் கதீட்ரல் 1896ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.

போர்த்துக்கீசியரின் ஆளுகைக்கு ஏறக்குறைய வந்திருந்த சாந்தோம் பகுதி, பின்னர் ஆங்கிலேயர் வசம் கைமாறியது. வணிகர்களாக மதராசபட்டினம் வந்த ஆங்கிலேயர்கள் முன்னர் இங்கே வணிகம் செய்து கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களை விரட்டி விட்டு தமது ஆளுமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டனர். எந்தப் போருமின்றி வணிக முயற்சிகளினால் சிறிது சிறிதாக முன்னேறி மதராசபட்டினத்தைப் படிப்படியாக தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள்.

1600ம் ஆண்டின் இறுதி நாளில் தான் இங்கிலாந்தில் கிழக்கிந்திய கும்பினி உருவாக்கப்பட்டது. 1608ம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் சூரத்தில் கால் பதித்து மன்னர் ஜஹாங்கீரின் ஆசீர்வாதத்தைப் பெற்று தங்கள் வணிகத்தை படிப்படியாக விரிவாக்கினர். பின்னர் தமது திகாரத்தை நிலை நாட்டத்தொடங்கினர். வணிகத்திற்காக தனியே வந்தவர்கள் பின்னாளில் குடும்பத்துடன் வந்து குடியேறவும் தொடங்கினர். அப்படி வந்த ஆங்கிலேயர்களுக்கு முதலில் அவர்களை ஈர்த்தது மதராசபட்டினம் தான்.

கிழக்கிந்திய கம்பெனிகள் அடிமைகளை வாங்குவது விற்பது என்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன. அடிமைகள் வேறு நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாக வணிகப்பொருட்களாக அனுப்பப்பட்டனர். இந்த நூலில்  உல்ள குறிப்புக்களின் படி மதராசப்பட்டினத்தில் இந்த அடிமை வணிகத்திற்கு நல்ல சலுகைகள் இருந்தமையும் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு அடிமைக்கும் சுங்க வரி மதராசபட்டினத்தில் மற்ற கரையோர துறைமுகங்களைக் காட்டிலும் குறைவு என்றும் , இதனைக் கண்காணிப்பவர் ஒரு இந்தியர் என்றும், 1711ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு அடிமை பதிவுக்கும் வரி 6 ஷில்லிங் 9 பென்ஸ் என வசூலிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த வணிகத்தை நடத்தியவர்கள் முக்கியமாக டச்சுக்காரர்கள் என்றும் அவர்கள் மதராச பட்டிணத்தில் உள்ளூர் புரோக்கர்களை நியமித்து அடிமைகளைப் பிடித்து மதராஸ் துறைமுகப்பட்டினம் வழியாக அனுப்பினர் என்னு தகவல்களையும் இந்த நூலில் அறிய முடிகின்றது.

மதராசபட்டினத்தில் பஞ்ச காலத்தில் அடிமை வியாபாரம் என்பது மிக மோசமான நிலையில் இருந்தது. 1646ல் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இந்தோனிசியா சென்றிருக்கின்றது. கிடைத்த ஆவணங்களில் அவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியத் தகவல் தான்.

"இந்தச் சிறிய கப்பலில் 400க்கும் மேலான அடிமைகள் வந்தனர். பசியால் வாடிக்கொண்டிருந்த அவர்கள் நிற்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர். கப்பலிலிருந்த அந்த பலகீனர்கள் தவழ்ந்தே இறங்கினர். பாதி விலைக்குத்தான் அவர்கள் விற்கப்பட்டார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் அவர்கள் தமது நாட்டில் சாவதை விட வெளிநாட்டிலிருந்து கொண்டு அடிமைகளாக வாழ்வதே போதும் எனக் கப்பலில் வந்துள்ளார்கள்".

இப்படி மதராச பட்டினம் பற்றிய பலபல வரலாற்று நிகழ்வுகளைப் பதிந்திருக்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இந்த நூலை வழங்கி இருப்பதோடு விரிவான ஒலிப்பதிவு பேட்டிகளாகவும் பல தகவல்களை திரு.நரசய்யா வரலாற்றுப்பிரியர்களுக்காக வழங்கியுள்ளார். இந்த நூல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாட நூலாக சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு நூல் என்பதே எனது கருத்து. வரலாற்று மாணார்களுக்கு மதராசப்பட்டினத்தை பற்றிய விரிவான புரிதலை இந்த நூல் வழங்கும் என்பதோடு இதே போல ஏனைய நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாகவும் அமையும். இத்தகைய அரிய வரலாற்று முயற்சிகளைப்பற்றி விரிவாக வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்வதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக அமைகின்றது . 

Thursday, November 10, 2016

36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்



இடைவிடாத பணிகளுக்கிடையேயும் தொடர்ச்சியான பயணங்கள் தரும் களைப்பையும் மீறி என் மனதில் புதிய உற்சாகத்தைத் தரும் வகையில் எனது அண்மைய டென்மார்க் வியன் நகருக்கான பயணம் அமைந்திருந்தது. டென்மார்க்கின் வியன் நகரில் நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கலை இலக்கிய விழாவிலும் அதற்கு மறுநாள் நடைபெற்ற இயக்கத்தின் நிர்வாகக்குழு சந்திப்பிலும் கலந்து கொண்டு இன்று பில்லுண்ட் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட ப்ரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸின் வழி இல்லம் திரும்பும் போது இப்பதிவினை எழுதுகின்றேன்.

இந்த ஆண்டு மே மாதம் நான் சில நாட்கள் என் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு டென்மார்க் நகரின் தலைநகரமான கோப்பன்ஹாகனுக்குப் பயணித்திருந்தேன். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமைத்திருந்தேன். கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துச் சுவடிகளையும் ஏனைய சில ஆவணங்களையும் மின்னாக்கம் செய்வது என் நோக்கமாக இருந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் இவை. இவற்றில் முப்பத்தெட்டு ஓலைச்சுவடிக்கட்டுக்களை நான் அப்பயணத்தின் போது மின்னாக்கம் செய்து முடித்திருந்தேன்.அந்த நடவடிக்கைத் தொடர்பான தகவல்களை நான் இணையத்தில் பகிர்ந்து கொண்ட போது அதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் நண்பர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் என்பதோடு, டென்மார்க் கிளையின் பொறுப்பாளர் என்ற பொறுப்பிலும் இருப்பவர் இவர். நவம்பர் மாதம் ஒரு கலைவிழா ஒன்றினை தாம் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடையே இந்த அரிய ஓலைச்சுவடிகளைப்பற்றி நான் செய்திகள் பகிர்ந்து உரையாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முதலே எனக்குத் தெரிவித்து விட்டார். அன்புக்கட்டளை இது. அதிலும் நான் தொடர்ச்சியாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஒரு துறை, இந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழகப்பயணமும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்ப்பணிகளும், அதில் டேனிஷ் அரசின் தாக்கமும் என்பது. ஆக இதனை டென்மார்க் வாழ் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு நிறைந்த மனமகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்பதாலும் ஆர்வத்துடன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

டென்மார்க் 400க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. ஜெர்மனியின் வடபகுதியில் நீண்ட தீபகற்ப நிலப்பகுதியும்,, ஓடென்சீ என்ற தீவும் கோப்பன்ஹாகன் இருக்கும் மற்றொரு தீவும் பூகோள வரைபடத்தில் அடையாளங்களான பெரிய நிலப்பகுதிகள். இந்தப் பெரிய நிலப்பகுதிகளுக்குச் சுற்றுப்புரத்தில் பல தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.

டென்மார்க்கின் மக்கள் தொகை ஏறக்குறைய 6 மில்லியன் தான். இதில் தமிழ் மக்கள் 11,000 பேர் வாழ்கின்றனர். டென்மார்க் தமிழர்கள் ஏறக்குறைய அனைவருமே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள்தான்.தாயகமான  இலங்கையில் போர் ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு நாடு கிடைக்குமா எனத்தவித்த சில தமிழ் மக்களுக்கு டென்மார்க் நல்லதொரு புகலிடமாக அமைந்தது. தாயகத்தின் மனித உரிமை மீறல்கள் டென்மார்க்கின் குளிர் சீதோஷ்ண நிலையை மக்கள் மறந்து தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டு தொடர வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்துள்ளது. போர்க் காலத்தில் வந்தவர்கள் மட்டுமன்றி அதற்கும் முன்னரே தொழிற்துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் எனச் சிந்தித்து டென்மார்க் நோக்கி வந்து பின்னர் இந்த நாட்டின் நிலை பழகிக்போக இங்கே தங்கள் குடும்பங்களை அமைத்து டென்மார்க்கிலேயே நிரந்தரமாகக் குடியேறிய தமிழர்களும் இங்கு கணிசமாக இருக்கின்றனர்.

தாயகத்தில் பழகிய சுற்றத்தார் இல்லை; அன்றாட வாழ்வில் அங்கமாகும் உணவு, வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் பழகிய பண்பாட்டு அடையாளங்களை விட்டு புதிதாகக்குடியேறிய நிலத்திற்குச் சொந்தமான அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டு தங்கள் புதிய வாழ்க்கையை இங்கு டென்மார்க் மட்டுமல்ல, உலகின் எந்தெந்த நாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனரோ அங்கெல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது.தமிழர் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ விரும்பினாலும் புதிதாக வந்து குடியேறியுள்ள நாட்டின் சீதோஷ்ண நிலையின் தன்மைக்கேற்பவும் வாழ வேண்டிய சூழலில் இருப்பதாலும் துரித வாழ்க்கையில் பொருளாதாரம் ஈட்ட பல்வேறு வகையான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும் தாங்கள் வாழும் இடத்திற்கேற்ற குளிர்கால உடையணிந்து வாழ வேண்டிய நிலைதான் உள்ளது.  இத்தகைய சூழலில் தாயகத்தில் போர் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் காயங்களாக மனதில் மறையாத நிலையிலும் வாழ்ந்து பழகிய சூழல் கொடுத்த இயல்புத்தன்மை இழந்த நிலை புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்குமே ஒரு தீராத ஏக்கம் தான். இந்தச் சூழலுக்கு நிரந்தரத்தீர்வு என்று ஒன்று இல்லாத போதிலும் அதன் ஏக்கத்தைக்குறைக்கும் ஒரு வழியாக தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் என்பன அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்றன. இப்படித் தமிழ் மக்கள் ஒன்றுகூடும் போது தமிழர் பாரம்பரிய ஆடைகள் அணிவதும், தமிழர் கலை கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இசை, கூத்து நடனம் என மகிழ்வதும், தமிழில் பேசி மனம் மகிழ்வது என்பதுவும் வடிகாலாக அமைகின்றன.

உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளை நடத்திய கலை இலக்கிய விழா இந்தச் சூழலை மிகத் தெளிவாகக்காட்டும் கண்ணாடியாக அமைந்திருந்தது. இதில் முக்கிய அம்சங்களாக உலகின் பல நாடுகளில் சிதருண்டு கிடந்தாலும் தமிழால் இணைந்த கலை ஜாம்பவான்கள், வந்து கலந்து கொண்டதும், உலகத் தமிழருக்குத்தேவையான தகவல்கள் சொற்பொழிவுகளாக வழங்கப்பட்டமையும், புலம்பெயர் வாழ்வில் பலருக்கு அமைந்த அல்லல்களை வெளிப்படுத்தும் குறும்படம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழரின் தாயகம் எது என்ற கேள்வி இத்தகைய சூழலில் நம் முன்னே நிற்கின்றது.

புலம் பெயர்ந்து வந்துவிட்ட சூழலில் புதிய நிலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்கின்ற நாடே தாயகமாகின்றது. தமிழ்மொழி அறிவினைச் சில குழந்தைகள் பெற்றோரிடம் கற்கின்றனர். தனி நபர்களும் தமிழ்ச்சங்கங்களும் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கின்றனர். ஆயினும் கூட தமிழ்மொழியில் ஆர்வம் என்பது ஒரு சிலருக்கே ஏற்படுகின்றது என்பதோடு அதனைப் பயன்பாட்டில் கொள்வதும் குறைவாகவே உள்ளது என்பது நிதர்சனம்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றனர் தமிழ் நாட்டுத்தமிழர்கள் என வருந்தும் அதே வேளை, டோய்ச் கலந்த தமிழ், பிரன்சு கலந்த தமிழ், இத்தாலி கலந்த தமிழ், ஸ்பேனிஷ் கலந்த தமிழ், டேனிஷ் கலந்த தமிழ் எனத் தமிழ் மொழி பேச்சு வழக்கில் கலவையின் பிரதிபலிப்பாக ஒலிக்கும் நிலையைப் பார்க்கத்தான் செய்கின்றோம்.

இந்தச் சூழலில் தமிழ் மொழி பயன்பாடு, தமிழர் வரலாற்றில் ஆர்வம், தமிழர் மரபைக்காத்தல் என்பன எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்த வண்ணமே இருக்கின்றது.

டென்மார்க்கை பொறுத்தவரை இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இளம் வயதில் இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த குழந்தைகளும் இங்குள்ள சூழலுக்குள் தங்களை முழுதும் ஐக்கியப்படுத்திக்கொண்டு விட்டனர்.தாயகத்தைப்பிரிந்த துயரம் என்பது அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக இல்லை ஆனால் தம் பெற்றோரின் தாயகம் இலங்கை அல்லது இந்தியா என்ற சிந்தனை மட்டும் மனதில் இருக்கின்றது. தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் முழுமையான பிரஜையாக அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தம்மை உயர்த்திக் கொள்தல் என அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு  வாழ்க்கையில் வெற்றி காண வேண்டியது அவசியம். அதே வேளை தங்கள் தமிழர் மரபை மறவாத தமிழ்மக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போது அனைத்துலகத் தமிழர்களாக மாறியுள்ளனர். இவர்களது கலாச்சாரமானது தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கலாச்சாரத்தையும் பண்புகளையும் உள்வாங்கியதொரு கலாச்சாரமாக புது வடிவமெடுத்துள்ளது. இது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே.மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் மனித வாழ்க்கை. மாற்றங்கள் தரும் சவால்களும் அதன் வழி நாம் பெறும் பரிணாம வளர்ச்சியும் தான் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படிப்பார்க்கும் போது டென்மார்க்கின் இரண்டாம் தலைமுறை ஆரோக்கியமானதொரு பாதையில் நடைபோட்டுச் செல்வதை நான் காண்கின்றேன். அத்தகைய சூழலில் அவர்களுக்குத் தொடர்ச்சியாக தமிழர் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றையும், தமிழ் மொழியின் சிறப்புக்களையும் வழங்க வேண்டியது பெற்றோர் கடமை என்றாலும், உலகளாவிய சமூக இயக்கங்களின் பங்கும் இதில் முக்கியப் பங்களிக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்த வகையிலான நோக்கத்தை முன்னெடுத்துத்தான் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறவேண்டும். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இந்த இயக்கம் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அன்றாட அலுவல்களுக்கிடையேயும் தமிழ் மொழி கலை கலாச்சாரம் என நினைத்து, தாய்மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்க விழா எடுத்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக இரவு பகல் பாராது, பசி தூக்கம் பாராது, வந்திருந்த அனைத்துப் பேராளர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து சிறப்பு செய்த திரு.தர்மகுலசிங்கம்-பவானி தம்பதியரின் சேவையை வாழ்த்தி மகிழ்கின்றேன். இக்கலைவிழாவில், என்னைச் சிறப்பித்து ”தமிழ் மரபு நட்சத்திர நாயகி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர் டென்மார்க் கிளையினர். அவர்களது ஆர்வத்தைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன். 

Thursday, November 3, 2016

35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்




தமிழகத்தில் எனக்குத் தனிப்பட்ட வகையில் என் மனதைக் கவரும் சில ஊர்கள் உண்டு. அதில் காரைக்குடியும் அடங்கும்.

2012ம் ஆண்டு தான் முதன் முறையாக காரைக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதனை முடித்து சில வரலாற்றுப் பதிவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்கள் காரைக்குடியில் இந்தப் பயணத்தின் போது நான் இருந்தேன். எனது காரைக்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாளில் சில இடங்களுக்குச் சென்று வரலாற்றுப்பதிவுகள் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தப் பயணத்தின் போது முழு ஏற்பாட்டு உதவிகளையும் நண்பர் முனைவர். காளைராசன் செய்து உதவினார். அன்று மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே திரு.காளைராசன் எடுத்து வைத்திருந்தார். ஆக இரவு எட்டுக்குள் அருகாமையில் உள்ள ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாற்றுப் பதிவுகள் செய்து வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.

இருக்கின்ற நேரத்தில் எங்குச் செல்லலாம் என யோசித்த போது தகுந்த இடங்களைக் கண்டறிய வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். அருகாமையில் உள்ள சில இடங்களைப் பரிசீலித்தோம். திருப்பத்தூர் செல்லலாமா என்ற எண்ணமும் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். எங்களுடன் இப்பயணத்தில் இனைந்து கொண்ட பேரா.முனைவர்.நா.கண்ணனுக்கு அவரது சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது. பயணம் எங்குச் செல்வது என முடிவானதும் சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி. டாக்டர்.வள்ளி இப்பகுதியில் கல்வெட்டாய்வுகள் செய்தவர் என்பதனை இவ்வேளையில் குறிப்பிடுவது அவசியம்.

திருமலை என்ற ஊரின் பெயரைக் கேட்டால் பெரும்பாலோர் குழம்புவது இயல்புதான்.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருமலையோ என சிலர் நினைக்கக்கூடும்.
இன்னும் சிலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமணத்தலமோ என்றும் நினைக்கலாம். ஆனால், இந்தத் திருமலை இருப்பது காரைக்குடிக்கு ஏறக்குறைய 49 கிமீ மேற்குப்பக்கத்தில். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் பட்டி வந்து பின்னர் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய நகரங்களைக் கடந்து வந்தால் திருமலையை வந்தடையலாம். திருமலையை நாங்கள் வந்தடைவதற்குச் சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் செபயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் இது. வயல்வெளியின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு இதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள். தாமரை மலர்கள் நிறைந்த குளம். அக்குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி நகரங்களின் சாயம் ஏதும் பூசப்படாத எளிமையான கிராமம் தான் திருமலை.

தமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். இந்தத் திருமலைப்பகுதியில் இந்தப் பதிவின் போது நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவுகளாக குறிப்பிடத்தக்க விசயங்களைப் பதிந்து வந்து வெளியீடு செய்தேன். அதில்


  • பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் 
  • மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில் 
  • குகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் 
  • மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன் 
  • கோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள் 
  • பாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள் 
  • அங்குச் சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள் 
  • அந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம் 

என்பன இடம் பெற்றிருக்கின்றன.

எங்களின் இந்தக் களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)

முதலில் கோயிலுக்குள் சென்று இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம். டாக்டர்.வள்ளி கால் வலியினால் வருந்திக்கொண்டிருந்தமையினால் அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்து இணைந்து கொண்டனர். முதலில் கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இப்படித்தான் பல முறை எனது களப்பணிகளில் நிகழ்ந்துள்ளது. நான் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஆர்வத்துடன் இப்பதிவுகளைக்கவனிக்கும் சிறார்களும் இளையோரும் பெரியோரும் தாமும் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் கதைகளையும் சொல்லிக் கொண்டே வருவார்கள். சிலர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்கள். எப்படியாகினும் அன்று என்னுடன் வந்து இணைந்து கொள்வோர், ஏதாவது ஒரு வகையில் தாமும் புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை புரிந்துகொள்வர்.

பாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாகப் பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.

முதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் அதே ஆண்டு கிருஷ்ணகிரியில் பார்த்த வகையில் அமைந்த குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை பதித்த உருவங்கள் வரையப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற மனித வடிவங்கள் அவை. எகிப்தில் இரண்டு வாரக் கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்தமையால் இந்த உருவங்கள் அதே வடிவில் இருப்பதை உணர்ந்தேன். வித்தியாசம் இல்லாமல் அதே வகையிலான உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாகக் கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள் பாறைகளில் இருந்தன. ஆச்சரியப்பட்டுப் போனேன்.

பின்னர் அவற்றைப் பார்த்து அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டுமேலும் நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள் இருந்தன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம். மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடியச் செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.

சமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் அங்கு வரும் மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை? நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்? எனச் சொல்லி வருந்தினோம்

இப்படி யோசித்து பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.

அப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம். எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குரிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனைக் கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.

அவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.

நாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

நாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.

நான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தைக் காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படிவரலார்றுத் தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.
பாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் திரு.காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்!

அவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர். இதனைப் பற்றிய விபரங்களை மற்றொரு பதிவில் விளக்குகின்றேன்.