Thursday, December 29, 2016

​42. வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை



கரூரில் ஒரு கல்லூரியில் எனது சொற்பொழிவு நிகழ்வை முடித்து சில தினங்களுக்கு முன்னர், அதாவது 22 டிசம்பர் காலையில் தென் தமிழகத்தின் கலைவளமும் தமிழ் வளமும் பொருந்திய நெல்லைச் சீமையை வந்தடைந்தேன். அன்று காலைத்தொடங்கி நெல்லைச்சீமையில் பல சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் வரலாற்று ஆவணப்பதிவுகளுக்காக என் பயணம் அமைந்திருந்தது. இடையில் இரு நாட்கள் தூத்துகுடியில் மீனவர்கள் வாழ்க்கையையும் நெசவுத்தொழிலில் ஈடுபடும் மக்களையும் சந்தித்து சில பதிவுகளைச் செய்திருந்தேன்.

திருநெல்வேலியில் இந்த ஆண்டு எனது வரலாற்றுப்பதிவுகள் பன்முகத்தன்மைக் கொண்டவையாக அமைந்தன.
அம்பாசமுத்திரத்தில், ராஜராஜன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே மன்னன் கட்டிய திருவாளீஸ்வரம் கோயிலின் பதிவிலிருந்து எனது வரலாற்றுப் பதிவு தொடங்கியது. ராஜராஜசோழன் பெரிய கோயிலில் புதிய கட்டிட பாணியை அறிமுகப்படுத்துவதற்கு முன்னராக வழக்கில் இருந்த பராந்தக சோழனின் காலத்திய கோயில்கட்டுமானத் தோற்றத்துடன் கூடிய வகையில் அமைக்கப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலில் சில சிற்பங்களை ஓவியர் சந்துருவுடனும் டாக்டர்.பத்மாவதியுடனும் இணைந்து ஆய்வு செய்து அதனைப் பதிவாக்கினோம். இக்கோயிலின் விமானத்தில் இருக்கும் சிவன் பார்வதி சிற்பமும், அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் மற்றும் ஏனைய ஒவ்வொரு சிற்பங்களும் சிற்பக்கலை மாணவர்களுக்கு ஒரு இனிய விருந்து எனலாம். இவற்றை உருவாக்கிய சிற்பி அவ்வடிவங்களை முழுமையாக தமது மனக்கண்ணில் உருவாக்கி, தமது படைப்பின் முழு பரிமானத்தையும் உணர்ந்து பின் அவற்றை செதுக்கியிருக்கின்றார். சிற்பங்களின் ஒவ்வொரு பாகமும் இதற்குச் சான்று பகர்கின்றன.

இந்தக் கோயிலின் வெளிப்புறச்சுவற்றில் ஏராளமான வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டுக்களும் உள்ளன. வட்டெழுத்துக்குப் பரிச்சயம் பெற்ற பாண்டிய தேசத்தில் சோழமன்னன், தான் பதிந்து வைக்க நினைத்த செய்திகளை, அங்கே பரிச்சயமான வட்டெழுத்து எழுத்துரு முறையிலேயே செய்திருக்கின்றான் என்பது ஒரு சிறப்பு.

இதற்கு அடுத்தார்போல செய்யப்பட்ட பதிவு ஓவியக்கலைக்குச் சிறப்பு தரும் திருப்புடைமருதூர் ஆலயத்தில் செய்தோம். இதுவும் அம்பாசமுத்திரத்தில் அமைந்திருக்கும் ஒரு கோயில் தான். நான் இதுவரைக் கேள்விப்படாத அதிசயமாய் இந்தக் கோயில் அமைந்திருந்தது. இதற்குக் காரணம், இக்கோயிலின் முன்புற கோபுரத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கவின் மிகு சித்திரக்கூடம்தான்.இந்தச் சித்திரக்கூடம் ஐந்து தளங்களில் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும்  சுவர் ஓவியங்கள் கதை சொல்கின்றன. காவியம் படைக்கின்றன. மூலிகை செடிகளினால் உருவாக்கப்படும் வர்ணங்களைக் கொண்டே சித்திரங்களைத் தீட்டியிருக்கின்றனர் இவற்றை உருவாக்கிய ஓவியர்கள். அதுமட்டுமா? சித்திரங்கள் சுவர்களை அலங்கரிப்பது போல  சுவர்களுக்கு இடையில் மர வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் மரச்சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்படைப்பு இது. தமிழர்களின் தச்சு வேலைப்பாட்டு கலைத்திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

நெல்லைச் சீமையைச் சிறப்பித்துச் சொல்வது  என்றால் திருநெல்வேலி அல்வாவை நினைக்கும் நமக்கு நெல்லைச் சீமை ஒரு கலைப்பொக்கிஷம் என்பது தெரியாமல் தான் இருக்கின்றது.  நெல்லையின் அம்பாசமுத்திரம், மன்னார்கோயில், பாபநாசம், சேரன்மாதேவி போன்ற கிராமங்கள் எண்ணற்ற கலைச்செல்வங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றன.  வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் மட்டும் தான் இப்பகுதியில்  நிறைந்திருக்கின்றன என்பதல்ல;  பச்சை பசேலென கம்பளி விரித்தார்போல நீண்ட தொலைவிற்கு விரிந்திருக்கும் வாழைத்தோட்டங்களும் தென்னை மரங்களும், நெற்பயிர்களும் இப்பகுதியின் வளத்தை பார்ப்போருக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. தாமிரபரணியின் கொடையாக இந்தப் பசுமை கண்களையும் மனதையும் நிறைக்கின்றது.

நெல்லையின் மேற்குக்கோடியில் அமைந்திருக்கும் பாபநாசம்  கிராமத்திற்கும் நான் இந்தப் பயணத்தின் போது சென்றிருந்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மேற்பார்வையில் இயங்கும், குன்றக்குடி ஆதீனத்தின் திருவள்ளுவர் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கினை இந்த ஆண்டு 23ம் தேதி நிகழ்த்தினோம். இந்தகருத்தரங்கை முடித்து பின்னர் மதியம் இங்குள்ள மலைப்பகுதிக்குச் செல்வதும் எனது பயணத்தில் ஒரு அங்கமாக இடம் பெற்றிருந்தது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கருணாகரனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதால் காட்டுக்குள் சென்று பழங்குடி மக்களைச் சந்திக்கச் செய்ய வேண்டிய ஏற்பாட்டில் எந்த வகைப்பிரச்சனைகளோ சிரமமோ ஏற்படவில்லை. மாறாக பதிவுகள் அனைத்தும் சிறப்பாக செய்யும் வகையில் சூழலும் அமைந்திருந்தது. இங்குள்ள பழங்குடி மக்கள் காரையூர் காணி மக்கள் எனப்படுபவர்கள். இவர்களது பூர்வீகம் இன்றைய கேரளாவின் மேற்குப்பகுதி. இவர்கள் இன்று தமிழ் மொழி பேசினாலும் கூட இவர்களது சமூகத்தில் இருக்கும் வயதில் மூத்தோர் இன்றளவும் காணி மொழியும் பேசுகின்றனர். அத்தோடு மலையாளமும் தமிழும் கலந்த வகையிலான ஒரு மொழியையும் இவர்கள் பேசுகின்றனர். இவர்களது காணி மொழிக்கு எழுத்துரு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது இந்த காணிமக்கள் குடியிருப்புப்பகுதிக்கான பயணத்தின் போது  அவர்களது வாழ்வியல் கூறுகள், மொழி, உணவு வகை, தொழில், இறைவழிபாடு, இன்றைய சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற தகவல்களைக் கேட்டுப் பெற்று பதிவாக்கினோம்.

நெல்லைச்சீமையில் இஸ்லாமிய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.  இங்குதான் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் இருக்கின்றார். இவரது படைப்புக்களைப் பற்றிய பேட்டி ஒன்றினைச் செய்து விட வேண்டும் என்ற பேராவலுடன் அவரை அணுகியபோது, மிகுந்த உடல் நலப்பிரச்சனைக்கு இடையேயும் கூட தம்மால் முடிந்த அளவு தகவல்களைச் சொல்லியதோடு அவரது நாவல்களில் நான்கினை எனக்குப் பரிசாகவும் அளித்தார். இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் உண்மை மனிதர்கள் என்பதோடு கதைகளில் வரும் காட்சிகளில் இடம்பெறும் இயற்கைச்சூழலும் கூட இவரது கண்களின் பார்வைக்குள் சிக்கிய காட்சிகள் தாம் என்பது தனிச்சிறப்பு. இவர் வீட்டு வாதாங்கொட்டை மரமும் மாங்காய் மரமும் அதன் இலை, கிளை காய்களும் கூட இவரது கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை இவரது குடும்பத்தார் சொல்லக்கேட்டு வியந்தேன்.

நெல்லையில் வாழும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு.திவான் அவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பல்தரப்பட்ட தரமான நூல்களை வழங்கியிருக்கும் எழுத்தாளர், ஆய்வறிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். இவரோடு உரையாடி பேட்டி ஒன்றினை பதிவாக்கியபோது இவரது தீவிர ஆய்வு முயற்சிகள் பற்றி அறிந்து வியந்தேன். புத்தகக் குவியலாய் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூற்கள் நிறைந்த தன் வீட்டில் நூற்களுடன் ஐக்கியமாகி வாழும் இவரைப் போன்றோரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை ஆய்வுலகம் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.

நெல்லை மாவட்டத்துக்குச் சற்று வெளியே சீவலப்பேரி எனும் சிற்றூருக்கு அருகில் இருப்பது மருகால்தலை எனும்  கிராமம். இங்குத் தமிழகத்  தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படும் ஒரு தமிழி கல்வெட்டு இருக்கும் பகுதிக்குத் தமிழ் மரபு அறக்கட்டளைக் குழுவினருடன் சென்றிருந்தேன். பாறைகள் நிறைந்த ஒரு பகுதி இது. இதில் பெரிய தமிழி எழுத்துக்களில் இங்கு  கி.மு1ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இருக்கின்றது. இந்தக் கல்வெட்டினையும் அதன் கீழ் இருக்கும் கற்படுக்கைகளையும் பார்த்து பதிவுகள் செய்து கொண்டோம். இங்கே இருந்த பாகுபலியின் சிற்பம் சேதம் செய்யப்பட்டதாகவும் அது அருகாமையிலேயே பாறையின் மேல் இருக்கும் உச்சிக் கோயிலில் இருப்பதையும், அது இப்போது சாஸ்தா, அதாவது ஐயனாராக வழிபடப்படுவதையும் பற்றிய செய்திகளையும் தொகுத்துப் பதிந்து கொண்டோம்.

நெல்லைச் சீமை செல்லுமிடமெல்லாம் வரலாற்றுப்பொக்கிஷங்கள் நிறைந்ததாய் காட்சியளிக்கின்றது.  முற்றிலும் அறியப்படாத தமிழகம் தான் தற்சமயம் நாம் அறிந்த தமிழகம் என்பதும் இப்படி அறியப்படாத பல கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டியது ​ ​அவசியம்​ ​என்பதும் முக்கியமாகின்றது.

Wednesday, December 21, 2016

41. சென்னையில் வர்தா



தமிழகத்தில் கடந்த வாரம் எனக்கு அமைந்த அனுபவம் மறக்க முடியாதது.

நான் தமிழகம் வந்த நாளில், சென்னை மற்றும் சென்னைக்கு அருகாமையில் உள்ள கடலோரப்பகுதிகளில் வார்தா புயல் கடந்து செல்லும் அபாயம் இருப்பதாக அறிவிப்புக்கள் வந்த வண்ணமிருந்தன.  ஞாயிற்றுக் கிழமை அதாவது 12ம் தேதி மாலை நான் பனுவல் புத்தக நிலையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நிகழ்ந்த கல்வெட்டுப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நண்பர்கள் அன்று மாலையே கன மழை பெய்யவிருப்பதாகவும், புயல் அனேகமாக அன்று மாலையே கூட ஆரம்பிக்கலாம் என்றும் கூறி எச்சரிக்கையளித்தனர். நானும் என் உடன் வந்த நண்பர்களும் மாலை ஐந்தரை வாக்கில் அங்கிருந்து புறப்படும் போது வானிலை மேகமூட்டமாக ஆகிக்கொண்டிருந்தது. ”வேகமான புயல் தாக்குவதற்குச் சாத்தியம் இல்லை; மழை மட்டும் சில இடங்களில் சேதத்தை உண்டாக்கிவிட்டு செல்லலாம்” என என் உடன் வந்த நண்பர்கள் கூறிக் கொண்டிருந்தனர். அன்று மாலையே மழை பெய்யத்தொடங்கி விட்டது.

திங்கள்கிழமை அதிகாலை நான் பாண்டிச்சேரி செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். அங்குத் தமிழ் ஆர்வலர்கள் சிலரையும் வரலாற்று ஆர்வலர்கள் சிலரையும் சந்தித்துக் கலந்துரையாடுவது, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு எனது ஆய்வுகளுக்காகத் தகவல் சேகரிப்பது என்பன என் பட்டியலில் இருந்தன.
சென்னை துறைமுகத்தில்,  வரப்போகும் அபாயத்தை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கைக்குறியீட்டை 10க்கு உயர்த்திவிட்டனர்.  பாண்டிச்சேரியில் என் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த நண்பர், புயலின் அளவு அபாயகரமானதாக மாறிக் கொண்டிருப்பதனால்பாண்டிச்சேரிக்குச் செல்வது ஆபத்தானதாக முடியும் எனச் சொல்ல, அங்கே செல்லும் திட்டத்தை மாற்றிக் கொள்வதே சரியாக இருக்கும் என முடிவு செய்து மறுநாள் நிகழ்வுகளை மாற்றம் செய்து கொண்டேன்.

திங்கட்கிழமை காலை நான் தங்கியிருந்த திருவான்மியூர் பகுதியில் காலை ஒன்பது மணி தொடங்கி மழைப்பொழிவின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. புயல் சென்னையின் கடற்கரையோரப்பகுதியை நெருங்கத் தொடங்கியதும் படிப்படியாகக் காற்று அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அன்று மாலை வரை இதே நிலை தான். இடையில் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரத்தைப் பாதுகாப்புக் கருதி தடைசெய்து விட்டனர்.

புயலின் முதல் கட்டமானது சென்னையைக் கடந்ததாகச் செய்தி வந்து கொண்டிருந்தது. மாலை மழை பொழிவு சற்று குறைய ஆரம்பித்தவுடன் நான் வெளியில் சென்று நிலமையைப் பார்த்து அறிந்து கொள்ள விரும்பிச் சென்றேன். வெளியே காணும் இடமெல்லாம் மரக்கிளைகள் உடைந்து கிடந்தன. நான் தங்கியிருந்த பகுதி பல அடுக்குமாடி வீடுகள் நிறைந்த பகுதியாக இருந்தமையால் இடைக்கிடையே இருந்த மரங்களின் கிளைகள் எல்லா பக்கங்களிலும் உடைந்து விழுந்து கிடந்தன. வாகனங்களின் மேல் விழுந்து கிடந்த கிளைகளை மக்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் சாலைகளில் உடைந்து விழுந்து கிடந்த மரங்களை வெட்டி சாலை ஓரங்களில் தள்ளி வைத்து வாகனங்கள் செல்வதற்கு வழி செய்து கொண்டிருந்தனர். இப்படி மக்கள் வெளியே வந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு,  தங்களால் முடிந்த வகையில் சாலைகளை பயன்படுத்தும் வகையில் காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அன்று மாலை மீண்டும் புயல் காற்று தொடங்கியது. அன்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் என்னால் எந்த நடவடிக்கைகளையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை நினைத்து சென்னையில் இருப்பதை விட மதுரைக்குச் சென்றால் அங்கே தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிகளைத் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே தொடங்கி விடலாம் என முடிவு செய்து கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

மதுரையில் நான் தொடர்பு கொண்ட நண்பர்கள் எனக்கு மறுநாள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வைகை துரித ரயில் வண்டியில் எனக்கு மதியம் ஒன்றரைக்கானப் பயண டிக்கட்டை பதிவு செய்து தகவல் தெரிவித்தனர். பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்து விட்டதில் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது.

மறுநாள் காலை ஏழு மணிக்குப் பின்னர் தொலைபேசி இணைப்புக்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டமையால் என்னால் யாரையும் தொலைபேசி வழி தொடர்பு கொள்ள இயலவில்லை. எனக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களைப் புதிய பணமாக மாற்றித் தருவதாகச்சொல்லியிருந்த நண்பரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.  இன்று நிச்சயம் நாம் சீக்கிரம் புறப்பட்டால் தான் ரயில் நிலையம் செல்ல முடியும் என யோசித்து காலை 11 மணி வாக்கில் நான் புறப்பட்டு விட்டேன். தொலைபேசியிலோ அல்லது வெளியில் சென்று டாக்சியை அழைக்கவோ இயலாத சூழல் என்பதால் ஒரு ஆட்டோவை நிறுத்தி அவரிடம் பேசி 400 ரூபாய்க்கு சம்மதிக்க வைத்து அதில் புறப்பட்டு விட்டேன்.

திருவான்மியூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சாலைகளின் இரு புறங்களிலும் சாலையெங்கும் மரங்கள் விழுந்து வேறோடு பிடுங்கப்பட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல கடைகள்,  விழுந்த மரங்களால் சேதமடைந்து போயிருப்பதையும் வழியெங்கும் பார்த்துக் கொண்டே சென்றேன்.

இந்தப் புயலால் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது என்பதை நேரில் நான் காண முடிந்தது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் புயல் ஏற்படுத்திய பலத்த காற்றினால் வேறொடு பிடுங்கி வீழ்ந்து விட்டன. மற்ற மாவட்டங்களில் ஏறக்குறைய மூன்று லட்சம் மரங்கள் நாசமாகின. மரங்கள் மட்டுமன்றி இந்தப் புயலின் போது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புயல் ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு சென்னையில் மின்சாரத்தடை ஏற்பட்டதோடு தொலைப்பேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலாத இக்கட்டான சூழல் உருவானது என்பதும் இந்தப் புயல் விட்டுச் சென்ற பெரும் பாதிப்பு எனலாம்.

நான் எழும்பூர் நிலையம் வந்தடைந்த போது எனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஒன்றரை மணிக்குப் புறப்படுவதாக இருந்த ரயில் வண்டிப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வர, தகவல் மையத்திற்குச் சென்று கேட்க, அனேகமாக அடுத்த இரு நாட்களுக்கு ரயில் பயணம் சந்தேகம் தான் என்ற தகவலே கிடைத்தது. இந்தச் சூழலில் பேருந்திலே மதுரைக்குச் செல்வதுதான் உதவும் என முடிவெடுத்து பேருந்து நிலையம் சென்று டிக்கட்டைப் பெற்று பின் பேருந்து புறப்பட ஆரம்பித்த பின்னர் தான் எனக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. அதுவரை என மனதில் மதுரைக்குச் செல்வது சாத்தியப்படுமா என்ற ஐயமே அதிகமாக இருந்தது.

இந்தச் சூழலை மேலும் சிரமமாக்குவதாகத் தமிழகத்தில் பணப்பிரச்சனை அமைந்தது. ஏற்கனவே நான் வந்திறங்கிய முதல் நாள்  அன்றே வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் நான் சிரமப்பட நேர்ந்தது. அது மட்டுமல்லாது புயலுக்கு முன்னரே கூட வங்கி அட்டைகள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் ஒரு சில இடங்கலில் கணினி கோளாறினால் பயன்படுத்த முடியாத சூழலும் அமைந்தது.  சென்னையிலும் புயலினால் பாதிக்கபப்ட்ட இடங்களிலும் இந்தப் பணம் தொடர்பான பிரச்சனையானது, மேலும் நிலமையை மோசமாக்குவதாகவே அமைந்தது.

வீடுகள் சேதப்பட்டோர் முதல் பொதுவாகவே மக்கள் அனைவரும்  அவசர தேவைக்கு பணத்தினை வங்கிகளிலிருந்து எடுக்க முடியாது திண்டாடிப்போயினர்.  ஏறக்குறைய ஒரு வாரமாகிவிட்ட சூழலில் சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்கள் இன்னமும் முற்றிலுமாக சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.  இந்த இயற்கை பேரிடரின் போது உடைந்து விழுந்த மரங்களை அப்புரப்படுத்தி சாலையைத் தூய்மைப்படுத்திய நகராண்மைக்கழகத் தொழிலாளர்களின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளை முடித்து பாரதியார் பல்கலைக்கழக நிகழ்வில் உரையாற்ற கோயமுத்தூர் வந்திருக்கின்றேன். எனது முதற்கட்டப்பணிகளை முடித்து இன்னும் ஒன்றரை வாரத்தில் சென்னை திரும்பும் போது நிலைமை ஓரளவு சீர்பட்டிருக்கும் என நம்புகின்றேன்.

Wednesday, December 14, 2016

40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை




நீர் வளமும் நில வளமும் மிக்க செழிப்பான ஒரு நாடு தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள், மக்கள் வாழ்விற்கு ஆதாரம் விவசாயம் என்பதை நன்குணர்ந்து நாட்டு மக்கள் நலம் வாழ நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தைப் பராமரித்தனர். தமிழகத்தின் பல சிற்றூர்களுக்கும்  கடந்த சில ஆண்டுகளாக நான் பயணம் செய்து அதன் பல பரிமாணங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். என்னை வியப்பில் ஆழ்த்தும் இயற்கை அம்சங்களில் இங்கு பல ஊர்களில் காணக்கூடிய ஏரிகளும் குளங்களும் அடங்கும். அப்படிப் பல தென்படினும்,  பல ஏரிகள் தூர் வாரப்படாமல் சேதப்பட்டுப்போய் கிடப்பதும், பல ஏரிகளில் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டு ஏரிகள் காணாமல் போன அவலங்களும் நடந்திருப்பது இயற்கைக்கு மனிதர்களால்  ஏற்பட்டிருக்கும் ஒரு பேரழிவு.   2015ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பிற்குப் பின்னரும் கூட,  ஏரிகளும் ஏனைய நீர்வளங்களும்  முறையாக  பாதுகாக்கப்படாத  ஒரு சூழல் தொடர்கின்றதே என்பது இயற்கை அழிக்கப்படுவதையும் அதனால் எழும் கடும் சேதங்களையும், அரசும் நில அமைப்பைப் பாதுகாக்கும் அமைப்புக்களும் இன்னும் உணரவில்லையே என்பதை  காட்டுவதாக இருக்கின்றது.  இந்தச்சூழலில், இயற்கையின் ஒரு அங்கமான நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என குரலெழுப்பும் பல தன்னார்வலர்களின் குரல்களோ, பொது மக்களின் வேண்டுதல்களோ பாதுகாப்பினை முறைப்படுத்தும் பங்கினை ஆற்றும் முக்கியமான அரசு அமைப்புக்களுக்குச் சென்றடைவதில்லை என்பதனையும் காண்கின்றோம்.

நீர்வளங்கள் எனப்படுவனவற்றுள் ஏரிகள், குளங்கள் போல ஆறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல நாடுகளில் மனித நாகரிகம் செழித்து வளர்ந்த பகுதிகளாக ஆற்றங்கரைப்பகுதிகளே அடையாளம் காட்டப்படுகின்றன.  தமிழகத்தின் காவிரி, வைகை, தாமிரபரணி போல முக்கியம் வாய்ந்த ஒரு ஆறு பாலாறு. தொண்டைமண்டலப்பகுதியில் கிளைத்து ஓடும் ஆறு இது. இதற்கு    கொசத்தலையாறு , கொற்றலையாறு என்றும் பெயர்கள் உண்டு. இதற்கு குறத்தியாறு என்றும் ஒரு பெயர் இருக்கின்றது என்ற செய்தியை அந்த ஆற்றின் வழி வழி நாட்டார் கதைகளை மையமாகக் கொண்டு இந்த ஆற்றிற்கு ஒரு காப்பியத்தை வடித்திருக்கும் எழுத்தாளர் கௌதம சன்னாவின் நூலின் வழி நான் அறிந்து கொண்டேன்.

இந்த  நாவலை வாசிக்கத் தொடங்கியபோது  முதலில் என்னை திகைக்க வைத்தது இந்த நாவலின் மொழி நடை. அன்றாட இயல்பான மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையில் இது படைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை எடுத்து வாசிக்கும் முன் வாசகர் தம்மை அதனுள் பிரவேசிக்கத் தயார் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். நூலின் வரிகள் ஒவ்வொன்றும் வாசிப்போரைத் தனி ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய தன்மை படைத்தவை. நூலை அதன் மொழி நடையில் வாசித்துக் கொண்டு, அதன் கதை மாந்தர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினால், அது அழைத்துச் செல்லும் உலகங்களில், அது சொல்லும் எல்லா அனுபவங்களையும் நேரில் உணரும் வகையில், நாவலின் ஒவ்வொரு பக்கமும் நிகழ்வின் காட்சிகளைப் படம் பிடித்தார் போல அமைத்திருக்கின்றார் இதன் ஆசிரியர். பிரமிக்க வைக்கும் ஒரு எழுத்து நடை இது.

அரசகுல வரலாற்றை சிலர் எழுதுகின்றனர். வீரமிக்கச்செயல் புரிந்தோரின் வரலாற்றைச் சிலர் நாவலாக வடிக்கின்றனர். சாமானிய மனிதர்களைப் பற்றி ஒரு சிலரே எழுதுகின்றனர்.  மனிதர்களை மையப்படுத்திய உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில்  இயற்கையைப் பொருளாகக் கொண்டு, அதனையே கதையின் மையப்புள்ளியாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு காப்பியமாகத் திகழ்கின்றது குறத்தியாறு நாவல். முன்னர் பாலாறு என அழைக்கப்பட்ட ஆறு இன்று கொற்றலை அல்லது கொசத்தலை ஆறு என மக்கள் வழக்கில் அமைந்துவிட்டது. இந்த ஆறு உருவாகி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கலாம். இந்த ஆற்றிற்க்கு என அமைந்த தொண்மக் கதைகள் பல இருந்திருக்கின்றன; அவற்றுள் சில மறைந்திருக்கலாம். இந்தக் கதைகள் அனைத்தும் இந்த மண்ணுக்கே உரியவை. இதன்  நுணுக்கமான நிகழ்வுகளுக்கு  கற்பனைகளையும் உட்புகுத்தி புதிய பரிமாணத்தை வழங்குவதாக அமைகின்றது இந்த நாவல்.   இந்தத் தொண்மக்கதைகள் வழியாக இந்த ஆற்றிற்குக் குறத்தியாறு என்று ஒரு பெயரும் இருந்தது என அறியமுடிகின்றது.

தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ  கோயில்கள். அவற்றின் வரலாறுகள் வேறுபடுபவை.  கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்கு அவர்களின் புராணத்தைப் பாடும் கதைகளும் இணைந்தே பிறக்கின்றன. இவை நாட்டார் கதைகள் என அறியப்படுபவை. இந்த நாட்டார் கதைகள் பெரும்பாலும் வாய்மொழிச் செய்திகளாக வருபவை. இவை பலகாலங்களாக அந்த நிலப்பகுதியின் வரலாற்று அம்சங்களை உள்வாங்கி சிலவற்றை இணைத்துக் கொண்டும், சிலவற்றை உதறிவிட்டும், விரிந்தும் சுருங்கவும் கூடிய தன்மை படைத்தவை.

தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகம் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு கிராமமும், ஊரும்  தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக்  கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும்   அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த  கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.

குறத்தியாறு,  ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு  காப்பியம். இதன் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையும், சொல்வளமும் இதற்கு காப்பிய இலக்கிய வகைக்கான அங்கீகாரத்தை வழங்கும் எனக்கருதுகின்றேன்.   இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. இதில் வரும் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை அறிய முயல்வது என்பது ஒரு வகை ஆய்வாக அமையும் என்றாலும்  இக்கதை விட்டுச் செல்லும் செய்திகளை ஆராய்வது சுவாரசியமான ஆய்வாக அமைகின்றது.  அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள் என்பதை அறிந்த போது இந்தப் பகுதிக்கு ஒரு வரலாற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு எழ இதனை நாவலாசிரியர் திரு,கௌதம சன்னாவிடம் தெரிவித்த போது அதற்கு ஆவன செய்து நான் இந்த ஆற்றையும் இந்த நாவலின் நாயகியான குறத்தி இன்று வழிபடப்படுகின்ற  கோயிலையும் பார்த்து வர ஏற்பாடுகள் செய்திருந்தார். இன்று  அங்காளபரமேஸ்வரி  என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர் என்பதை இந்த நேரடி வரலாற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டு, அத்தகவல்களையும் இந்த அம்மனைச் சுற்றி நிகழும் பூசைகள் சடங்குகள் ஆகியனவற்றைப் பற்றியும் ஒரு விழியப்பதிவாக வெளியிட்டேன்.

சாமிகள்  உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு  கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில்  ஒவ்வொரு கிராமங்களிலும் பல  சடங்குகள் நிறைந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழகத்தை விட்டு மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தங்கள் கிராமத்து கடவுளர்களைத் தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளுக்குக் கொண்டு வந்து கோயில்கள் கட்டி வழிபாடு செய்வதை இன்றும் மலேசியா முழுவதும் பார்க்கின்றோம். முனியாண்டி சாமி, வீரபத்திரன், காளியம்மன், பேச்சியம்மன், சுடலை மாடன் போன்ற தெய்வங்கள் இப்படி தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தெய்வங்களே. தாயகத்தில் தங்கள் இறை உணர்வு சார்ந்த நம்பிக்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் அதே தெய்வங்களே புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடும் தெய்வங்களாக மலேசிய,சிங்கை மண்ணில் இடம்பெறுகின்றார்கள்.

குறத்தியாற்றின் வரலாற்றினை நோக்கும் போது,  வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள் என்பதைக் காண்கின்றோம். நான் எனது களப்பனிக்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த போது கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள், பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவின் போது எனக்கு விளக்கமளித்தார்கள். அவற்றை ஒரு குறும்படமாகத் தயாரித்துத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தேன். கிராமங்களில் தொன்மக்கதைகள் கதைகளாகவே இருந்து படிப்படியாக மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விடாமல், மாற்று உருவம் பெற்று வேறொருவகையில் நீளும் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கோயில் அமைந்திருப்பதை இந்தப் பதிவிற்கான ஆய்வில் நான் அறிந்தேன். இப்படி ஏராளமான சம்பவங்கள் நாம் இருக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சொந்தமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் பதிகின்றோமா? ஆவணப்படுத்துகின்றோமா? அவற்றிற்கான ஒரு விளக்கத்தினைத் தரும் ஆய்வுகளை முன்னெடுக்கின்றோமா என்னும் கேள்விகள் முக்கியமானவை.

குறத்தியாறு நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு.  ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வணங்கப்பட்டு வரும்   நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா. மலேசியத் தமிழ் எழுத்துலகில் இத்தகைய நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனக் கருதுகின்றேன். மக்களின் வாய்மொழிச் செய்திகளின் தகவல் களஞ்சியங்கள் இலக்கிய அங்கீகாரம் வழங்கப்படாமல், பதிவு செய்து  ஆராயப்படாமலேயே போய்விடுவதால் ஏற்படக்கூடிய இழப்பு என்பது வரலாற்றுப் பார்வையில் மிகப்பெரிது.  மக்கள் வாழ்வியல் செய்திகளை அந்த நிலத்தின் நாட்டார் கதைகளுடன் இணைத்து வழங்கும்  இத்தகைய தரமான படைப்புக்களை மலேசிய வாசகர்கள்  அறிந்து கொள்வதன் வழி நாவல் அல்லது காப்பியப்படைப்புக்களை இக்கால சூழலில் மாற்றுக்கோணத்தில் உருவாக்கும் உத்திகளை பரிச்சயம் செய்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் கிட்டும்.  இந்த நாவலின் எழுத்து நடை கவிதை நயத்துடன் கூடிய இலக்கிய வகையாக அமைந்திருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களின் தரம் உயர்வாக அமைய வேண்டியதும் வாசகர்கள் தங்கள் வாசிப்புத்திறத்தினை உயர்த்திக் கொள்வதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத்  தேவையே!