Wednesday, March 8, 2017

48. வீரவிளையாட்டு - தமிழகத்திலும் ஸ்பெயினிலும் எப்படி மாறுபடுகின்றன



வாசித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ, ஏனைய பொது ஊடகங்களில் பார்த்தோ தெரிந்து கொள்வதை விட நேரடியாகப் பெறும் அனுபவங்கள் தரும் பாதிப்பு மிக ஆழமானதாக அமைந்து விடும். இவ்வகை அனுபங்கள் பல நாட்கள், வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என மனதை விட்டு அகலாமலும் அமைந்து விடும். எனக்கு மனதைக் கவரும் ஏதாவதொரு விஷயம் ஒன்றைப் பற்றி நான் கேள்விப் பட்டால் என் மனம் அதனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். ஆவல் ஒரு புறமிருக்க அதனை நேரடியாகப் பார்த்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணம் தோன்றி ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கும். தக்க வேளை அமையும் போது இவ்விதம் அமைந்த தேடல்களை நான் சென்று பார்த்தோ, நேரடியாக உணர்ந்தோ இவ்வனுபங்களைப் பெற்று அவற்றைப் பற்றி சிந்திப்பதை வாய்ப்பமையும் போதெல்லாம் ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றேன்.

ஜல்லிக்கட்டு, காளை விரட்டு, மஞ்சி விரட்டு போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அண்மைய ஜல்லிக்கட்டுக்கான மக்கள் போராட்டம் காளை அடக்குதல் எனும் விளையாட்டு தமிழர் பாரம்பரியத்தில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பதை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்தது. என் இளம் பிராயத்து மலேசிய வாழ்வில் ஒரு முறை இவ்வகை காளை விரட்டு போட்டி ஒன்றைப் பார்த்த ஞாபகம் மனதில் நிழலாடுகின்றது. காளை மாட்டை நன்கு குளிப்பாட்டி கொம்பிற்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணி கட்டி, கொம்புகளில் பூக்களைச் சுற்றி அழைத்து வந்து பின்னர் இளைஞர்கள் அந்தக் காளை மாட்டை விரட்டிப் பிடிப்பது போன்ற வீர விளையாட்டைத் தைப்பொங்கல் காலத்தில் நிகழும் சில பாரம்பரிய நிகழ்வுகளில் பார்த்திருக்கின்றேன்.

தமிழர் வாழ்வியலில் அதிலும் விவசாயிகளின் வாழ்வில் பசுவும் காளையும் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. வீட்டு விலங்குகளான இவை குடும்பத்தாரோடு அன்னியோன்னியமாக ஒன்றித்து வாழ்வதை இன்றும் கூட கிராமங்களில் காண்கின்றோம். சிறு பெண்கள் கூடப் பெரிய காளை மாட்டினை இழுத்துக் கொண்டு செல்லும் இனிய காட்சிகள் தமிழக கிராமங்களில் இயல்பானதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட கொடூரமான காளை விரட்டும் வீர விளையாட்டினை ஸ்பெயினில் இன்றும் காண்கின்றோம்.

ஐரோப்பிய சூழலில் பால், பாலைக்கொண்டு தயாரிக்கப்படும், சீஸ், பட்டர்மில்க், தயிர் வகைகள் பயன்பாடு என்பது மிக ஏராளம். தற்கால சூழலில் ஐரோப்பிய மக்களின் அன்றாட உணவுத் தேவையில் பால், பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இல்லாத ஒரு நிலையை மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்குப் பால் மக்கள் வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. இதனால் மாடுகள் இங்கே மிகப் பிரபலமான விவசாயிகளின் வளர்ப்பு மிருகங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது.

இப்படி அடிப்படை உணவுத் தேவைக்கு ஆதாரமாக அமையும் மாடுகள் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிகழ்கின்றன. சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ரோமானியா, டென்மார்க், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சில நாடுகளிலும் ஏதாவது ஒரு வகையில் பசு மாடுகளையோ அல்லது காளை மாடுகளையோ முக்கியப்படுத்தும் ஏதாவது ஒரு திருவிழா வருஷத்தில் ஒரு முறையாவது இடம்பெறுவதுண்டு. இவ்வகைத் திருவிழாக்களின் போது பாரம்பரிய உடையணிந்து மக்கள் இத்திருவிழாக்களில் கலந்து கொள்வதும், கேளிக்கை விஷயங்கள் இடம்பெறுவதும் வாடிக்கை.

மற்ற நாடுகளிலிருந்து வித்தியாசமாக ஸ்பெயின் நாட்டில் காளை மாடுகள் சம்பந்தப்பட்ட வீர விளையாட்டினைப் பார்க்கலாம். Corrida de Torros (கொரிடா டி டோரோஸ்) என ஷ்பேனிஷ் மொழியில் அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு மிக கொடூரமான ஒரு விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இப்பாரம்பரிய விளையாட்டு ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் குறிப்பிட்ட சில நாட்களிலோ திருவிழாக்களின் போதோ நடைபெறுகின்றன.

இந்தப் பாரம்பரிய வீர விளையாட்டைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேச்சையாக நான் அறிந்திருந்த போதிலும் 2012ம் ஆண்டில் எனக்கு இந்த விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. பல மாதங்களாக ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட் நகரில் எனக்குப் பணி நிமித்தம் ஒவ்வொரு வாரமும் இருக்கின்ற சூழல் அமைந்தது. 13 -19 மே மாதம் மட்ரிட்டின் (ஸ்பெயின் தலைநகர்) சிறப்பு திருவிழா காலம். இதற்காக ஏற்பாடாகி ஒவ்வொரு நாளும் கலைவிழாக்கள், நடனம், நாடகம், பாரம்பரிய விளையாட்டு, வான வேடிக்கை எனப் பல விஷயங்கள் நடந்தன. அதில் கொரிடா டி டோரெஸ் காளை அடக்கல் போட்டியும் நிகழ்ந்தது. இது பாரம்பரிய விளையாட்டுக்களில் தலையாய ஒன்றானதாகவும் மிக உயர்வான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு விளையாட்டாகவும் ஷ்பேனிஷ் மக்களால் கருதப்படும் விளையாட்டு.கொரிடா டி டோரெஸ் நடைபெற்ற ப்லாஸா டி டொரெஸ் மண்டபம் ஸ்டேடியம் போன்ற அமைப்பில் அமைந்தது. அலுவலகப் பணி முடிந்து நிகழ்ச்சிக்கு என் ஷ்பேனிஷ் நண்பர்களுடன் சென்றிருந்தேன். 14 யூரோவிலிருந்து 1,200 யூரோ வரை டிக்கெட்கள் விற்பனைக்கு இருந்தன. அன்று இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கையிலே ஏறக்குறைய 20,000 பேர் இங்கு இவ்விளையாட்டைப் பார்க்க வந்திருந்தனர் என்பது தெரிந்தது.

இது விளையாட்டல்ல.. விபரீதம் என்பதை உள்ளே சென்று நண்பர்கள் விளக்க ஆரம்பித்ததும் தான் தெரிந்து கொண்டேன்.காளை மாட்டை அடக்கித் தள்ளுவது இந்த விளையாட்டின் நோக்கமல்ல. மாறாக அக்காளை மாட்டைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராடி கொல்வது தான் நோக்கம். ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக என வர ஒவ்வொன்றையும் அடக்கி அதைக் கொல்பவர்கள் வீரர்களாகக் கருதப்படுகின்றனர். நம் தமிழர் பாரம்பரியத்தில் உள்ள ஜல்லிக்கட்டிற்கும் இந்த விளையாட்டிற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது, பாருங்கள்!

காளை மாடு முதலில் வரும் போது அது ஓடிவரும் வேகம், அதன் தலையைத் திருப்பிப் பார்க்கும் விதம் இதனை வைத்தே இது வீரம் மிகுந்த அல்லது வீரம் குறைந்த மாடு என்று மக்கள் புரிந்து கொள்கின்றனர். வீரம் குறைந்த மாடு என்றால் ஷ்பேனிஷ் மக்கள் விசில் அடித்தும் கூக்குரலிட்டும் கேலி செய்கின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.முதலில் வரும் காளை அதனை எதிர்த்து போராட நிற்கும் 5 பேரை பார்த்து மோதத்தொடங்குகின்றது. இந்த மோதுதலின் போதே இந்தக் காளை வீரம் நிறைந்ததா, அல்லது மிகச் சாதுரியமானதா, அதன் போரிடும் தன்மை என்ன என்பதை இந்த 5 விளையாட்டாளர்களும் பார்த்து அறிந்து கொள்கின்றனர். சிறிது நேரம் இந்த மோதல் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 5ம் நிமிடத்தில் 2 பிக்காடோரஸ் (Picadores இவர்கள் இரும்புக் கவசத்தால் சுற்றிலும் கவசம் அணியப்பட்ட குதிரையில் அமர்ந்து வருபவர்கள்) மைதானத்திற்கு உள்ளே நுழைந்து காளையை அடக்க வருவர். ஒருவர் தூரத்திலேயே நின்று கொள்ள ஒருவர் மாத்திரம் இந்தப் போராட்டத்திற்கு தயாராவார்.

இதுவே இந்தக் காளையைக் கொல்லும் போராட்டத்தின் முதல் பகுதி. இதனை ஷ்பேனிஷ் மொழியில் Tercio de Varas என்று அழைக்கின்றனர். Tercio என்பதன் பொருள் இறப்பு என்பது. ஆகக் காளைமாட்டின் மீதான தாக்குதலின் முதலாம் பகுதி இது எனலாம்.
பிக்காடோரெஸ் குதிரையின் மேலமர்ந்து இடது கையில் குதிரையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள ஈட்டியால் தன்னை நோக்கித் தாக்க வரும் காளைமாட்டினை ஒரே தாக்குதலில் நடுமுதுகில் குத்தித் தாக்குவார். இந்தத் தாக்குதலைச் செய்ய மிகுந்த பலம் தேவை. இதனை எதிர்த்து காளைமாடு உடனே குதிரையை முட்டி பிக்காடோரெஸை தொடர்ந்து தாக்கும். இது மிகப் பயங்கரமான ஒரு நிலை. சுற்றிலும் இரும்புக் கவசம் போடப்பட்டும் கண்கள் மூடப்பட்டும் குதிரை இருப்பதால் அதற்குச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது. ஆனால் பிகோடோரெஸ் லாவகமாக இந்தத் தாக்குதலைச் சமாளித்து மாட்டை பலம் இழக்கச் செய்து விடுவார். இத்துடன் இவரது பணி முடிய இவர் வெளியே சென்று விடுவார். தனித்திருக்கும் காளை மாடு தன்னைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்ள முனைந்தாலும் கூட ஈட்டித் தாக்கியதால் இரத்தம் முதுகிலிருந்து வழிய அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

இரண்டாவது கட்டமாக மூன்று பண்டரிலாஸ் இக்காளையைத் தாக்க வேண்டும். இதற்கு Tercio de Banderillas என்று பெயர்.  கைகளில் மறைக்கும் துணி இல்லாமல் இரண்டு கூர்மையான ஈட்டியைத் தாங்கிக் கொண்டு ஓடிவந்து தக்க சமயத்தில் ஒருவர் பின் ஒருவராகக் காளையின் முதுகில் ஈட்டியைப் பாச்சி அதனை நோகச் செய்வர். இது காளையின் தோள் பகுதி கழுத்துப் பகுதிகளை வலிமை இழக்கச் செய்து விடும். இந்த நேரத்தில் காளை எதிர் தாக்குதல் நடத்தினால் நேருக்கு நேர் இருக்கும் பண்டரிலாஸ் நிச்சயமாகக் கொம்பில் முட்டி இறக்க நேரிடும். இது அவ்வளவு பயங்கரமான ஒரு தருணம்.

மூன்றாம் பகுதி Tercio de Muerte எனப்படுவது. இதன் பொருள் இறப்பின் மூன்றாவது பகுதி எனக் கொள்ளலாம்.இந்தப்பகுதியின் போது அக்காளையுடன் ஒரே ஒரு மெட்டடோர் (இவர் தான் தானே ஒரு காளையைக் கொல்வதாக உறுதி எடுத்துக் கொண்டு சபையை வணங்கி அவர்களின் கைதட்டல் ஆரவாரத்தை ஏற்றுக் கொண்டு போட்டியிட வருவார். காளையைக் கொல்லும் வரை இவரே ஒருவராகப் போராட வேண்டும். காளையை அடக்கச் சிவப்பு நிறத்துணியை அதன் கண்முன்னே காட்டி அழகிய நடையில் அதனை தாக்கச் செய்வார் இந்த மெட்டாடார். உண்மையில் காளைமாடு வர்ணங்களைக் கண்டு எதிர்ப்பதில்லை. மாறாக அசைவுகளே மாட்டின் எதிர்த்துத் தாக்கும் தன்மைக்குக் காரணமாகின்றன. ஆனால் இன்றும் பலர் சிவப்பு வர்ணங்களைக் கண்டால் காளை மாடு ஆத்திரம் கொண்டு தாக்கும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் மெட்டாடார் காளைமாடு இருவருமே காயங்களுக்குள்ளாவர்.

இந்த மெட்டாடார் ஏறக்குறை 10 நிமிடங்கள் வெவ்வேறு வகையில் காளையை எதிர்த்துப் போராடி, தனக்கு அடங்கச் செய்து பின்னர் தக்க சமயம் வருகையிலே ஒரு கூர்மையான நீளமான வாளால் அக்காளை மாட்டை முதுகில் குத்துவார். ஒரு அனுபவம் நிறைந்த வீரர் என்றால் முதல் தாக்குதலிலேயே அந்த வாள் முதுகில் பாய்ந்து நேராக இருதயத்தைத் தாக்கி மாட்டினை விழச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர் மிகச் சிறந்த வீரராகக் கருதப்பட்டு பார்வையாளர்களால் கூக்குரலிடப்பட்டும் விசில் அடித்தும் பாராட்டப்படுவார்.
கீழே அயர்ந்து விழும் காளை உயிரை விட ஒரு 4 குதிரைகள் பூட்டிய வண்டி மைதானத்திற்குள் நுழையும். பார்வையாளர்கள். காளையை அடக்கிய மெட்டாடோர் மிகச் சிறப்பாக போராடியிருக்கின்றார் என நினைத்தால் வெள்ளை நிறக் கைத்துண்டால் விசிறிக் கூவ நிகழ்ச்சிக்குப் பிரத்தியேகமாக வந்திருக்கும் ஆளுநர் அதனை ஏற்று அந்த மெட்டாடோரின் புகழை மேலும் பெரிதாக்க இறந்த அந்த மாட்டின் ஒரு காதையும் அதன் வாலையும் அந்த மைதானத்திலேயே வெட்டித் தர அனுமதி அளிப்பார். இது மிகப் பெரிய ஒரு சம்பிரதாயமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய பரிசு பெற்றவர்கள் மிகச் சிறந்த மெட்டாடோர்களாக மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றனர்.ஆக மொத்தம் 25 நிமிடத்திற்குள் ஒரு காளையை அடக்கிக் கொன்று விடுகின்றனர். இவ்வகையில் ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் அடக்கிக் கொல்லப்படுகின்றன. இந்த கொரிடா டி டோரோஸ் காளை மாடுகளைத் துன்புறுத்தும் ஒரு கொடூரமான விளையாட்டு என்ற அடிப்படையில் பல அமைப்புக்கள் இந்த விளையாட்டிற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஸ்பெயினிலேயே பல பகுதிகளில் இவ்விளையாட்டு நடத்தப்படுவதில்லை. உதாரணமாக கட்டலானியா பகுதிகளில் இது 2011ம் ஆண்டிலிருந்து தடைசெய்யப்பட்ட விளையாட்டாகிவிட்டது.


தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு இளைஞர்களின் வீரத்தையும் காளையின் வீரத்தையும் எடை போடுவதாகத்தான் அமைகின்றதே தவிர காளை மாட்டினை துன்புறுத்தும் ஒரு நிகழ்வல்ல. நமது வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தொடர்ந்து சிறப்பாக நடைபெறவேண்டும். தமிழர் மரபின் வீர விளையாட்டுக்களின் ஒரு அங்கம் தான் ஜல்லிக்கட்டு என்பதைப் புரிந்து ஆதரிப்போம்!. 

2 comments:

  1. நல்ல்தொரு விவரம். நானும் இதைப் பற்றிப் படித்தும் கண்டுமிருக்கின்றேன். ஜல்லிக்கட்டு மனித மிருக் உணர்வு செழிப்பைக் காட்டும். ஆனால் ஸ்பெயின் ஆட்டம் கொடுமையைத்தான் உணர்த்துகிறது. மிக நன்றாக விவரிததுள்ளமைக்கு நன்றிகள். ஆமாம் சாதாரணமாக எல்லா மிருகங்களூமே colour blind ஆனவை. ஆகையால் சிவப்பு நிறத்திற்கும் மிருக உணர்வுக்கும் சம்பந்தமில்லை. movement makes all the difference. Thanks for the kanowledgable posting Narasiah

    ReplyDelete
  2. அருமை சகோதரி.., நேரில் கண்டது போல ஒரு உணர்வு.

    ReplyDelete