Thursday, September 7, 2017

69. திருமலை புராதனச் சின்னங்கள்



2012ம் ஆண்டு. அந்த ஆண்டில் 2 வாரங்கள் எனது தமிழகப் பயணத்தில் பல இடங்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்வுகளுக்காகவும் களப்பணிகளுக்காகவும் சென்றிருந்தேன். அப்பயணத்தின் போது காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் கருத்தரங்க நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. அதனால் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதோடு காரைக்குடிக்கு அருகாமையில் உள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிந்து வைக்கவும் திட்டமிட்டிருந்தேன். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு நேரம் இருந்தால் அதன் படி வேறு சில இடங்களுக்குச் செல்வோம் என முடிவானது.

நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து  எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி.
திருமலைக்குச் செல்வதற்கு சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக வரலாற்றுச் செய்திகளைப் பேசிக் கொண்டே நாங்கள் பயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள்... தாமரை மலர்கள் நிறைந்த குளம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி இயற்கை சூழல் மனதைக் கொள்ளைக் கொள்ளும் ஒரு ஊர் தான் திருமலை.

தமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். தமிழகத்திலே தான் வரலாற்றினை சொல்லும்  எத்தனை எத்தனை இடங்கள் உள்ளன.. பார்த்து ரசித்து இப்படி படம் பிடித்துப் போட்டு கதை சொல்ல..!

திருமலைப் பகுதியில் முதலில் பாறை ஓவியங்களைப் பார்க்கப் போகின்றோம் என்பதாகத்தான் என் மனதில் பதிவாகியிருந்தது. ஆனால் அங்கு சென்று வந்த பின்னர், பாண்டியர் காலத்து மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம், ஆலயத்தின் குடைவரைக் கோயில், குகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள், முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியனின் சிலை, கோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள், பாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள், அங்கு சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள், அந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம்,  என,  அந்த ஊருக்கே சிறப்பினைச் சேர்க்கும்  பல விஷயங்கள் இருப்பதை  அங்கிருந்த சில மணி நேரங்களில்  தெரிந்து கொண்டோம்.

முதலில் குன்றின் மேல் ஏறி அங்கிருக்கும் பாறை ஓவியங்களை ஆரய்வது என்பது எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. எங்களின் இந்த களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம்.

கோயிலில் இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.  கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம்.
பாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலைப் பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாக பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.

முதலில் ஒரு பாறையைக் கண்டோம்.   வித்தியாசமான வடிவில் முழு மனித உருவத்தின்  ஓவியங்களாக அவை கீறப்பட்டுள்ளன.  தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற  மனித  வடிவம்.   இவை பண்டைய  எகிப்தில் வழிபடு கடவுளர்களாக உள்ள தெய்வ வடிவங்களை ஒத்த வகையில் உள்ளன. எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாக கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில்  இந்தத் திருமலை பாறை ஓவியங்களும் உள்ளன என்பது தான் சிறப்பு..

ஆச்சரியப்படுத்தும் ஒற்றுமை இது, அல்லவா? தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு வரலாற்றுப் புராதணச் சின்னம். ஆனால் இந்த சித்திரங்களின் தற்போதைய நிலையோ மனதை உலுக்கும் வகையில் தான் இருக்கின்றது. ஏனென்றால் அந்தச் சித்திரங்களின் மேற்பகுதியில்  அங்கு வந்து போவோர் பெயர்களையும் எண்களையும் கிறுக்கி அவற்றை சிதைத்து வைத்துள்ளனர்.   இவ்வாறு சிதைக்கும் போது இவ்வகை சித்திரங்களின் வரைகோடுகளைத் துல்லியமாக அறிவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது.  தாங்கள் பெயர்களைக் கிறுக்கி வைப்பதால் தங்களது பண்டைய வரலாற்றைத் தான் சிதைக்கின்றோம் என்ற அடிப்படை சிந்தனை இல்லாத காரணத்தால் தான் இது நிகழ்கின்றது. மக்கள் மனதில் இவற்றை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை எழ வேண்டும்!

அந்தக் குறிப்பிட்ட பாறையில்  அச்சித்திரங்களைப் பார்த்து மேலும் அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டு நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகளில்  கூட இத்தனை  அழகான வடிவங்களில் பாறைகளா,  என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில்  அமைந்த பாறைகள் உள்ளன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம்.மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடிய செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கபப்ட்டிருந்த கற்படுக்கைகள் என அனைத்தையும் அங்கே கான முடிந்தது. இவற்றை முழுமையாக வீடியோவில் பதிவாக்கினேன். அது தமிழ் மரபு அரக்கட்டளை வலைப்பக்கத்தில் ஒரு பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

சமணப் படுக்கைகள் என்பன பண்டைய காலத்தில் சமண முனிவர்களுக்கு அவர்கள் தங்குவதற்காகவும் படுத்து உரங்குவதற்காகவும் குன்றுகளில் உள்ள பாறைகளில்  சிறு பள்ளம் போல அமைத்துப் செதுக்கி உருவாக்கும் படுக்கையாகும்.

இங்கே அந்தத் தரைப்பகுதியையும் மக்கள் விட்டு வைக்கவில்லை.  அவற்றையும் கிறுக்கி சிதைத்து   சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை? நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால்  இன்றோ, நம்   கண்முன்னே,   நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்? வருந்தத்தக்க ஒன்றல்லவா ?

பாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தோம். கோயிலில் அவ்வூர் மக்கள் சிலர் அதற்குள் வந்து கூடிவிட்டனர்.   நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எதனால் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் விளக்கினோம். எங்களின் விளக்கம் கேட்டு அவர்களின் முகத்தில் மலர்ச்சி. அது  எங்கள் குழுவினருக்கும் மகிழ்ச்சியளித்தது.

பேசிக்கொண்டே எல்லோரும் கோவிலுக்குள் நுழைந்தோம். கோயிலில் முதலில் வருவோரை எதிர்கொள்வது மாவீரர் கருவபாண்டியன்   சிலைதான். இந்தக் கோயில் பாண்டியர் காலத்தது என்றாலும் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயிலின் முன்பகுதியைக் கட்டி அதனைச் சீரமைத்தவர் தான் கோயிலின் முன் சிற்பவடிவில் காட்சியளிக்கும் இந்த மாவீரர் கருவபாண்டியன். அவர் பயன்படுத்திய  ஏறக்குறைய 200 வருடம் பழமை கொண்ட ஒரு வாளை சிலையோடு இணைத்தே வைத்திருக்கின்றனர். அந்த வாளை என் கையில் கொடுத்து அதனைத் தூக்கிப் பார்க்கச் சொல்லி மகிழ்ந்தார் ஒரு முதியவர். அவர் இந்த மாவீரர் கருவபாண்டியன்  பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக் கொண்டார். முதியவர். வயது 80க்கும் மேல். ஆனால் சுறுசுறுப்பான நடை. வேகமான பேச்சு, தெளிவான குரல். வயதை மறைத்து நின்றது அவரது சுறுசுறுப்பு.

மாவீரர் கருவபாண்டியன்  சிலையைத் தாண்டி மேலே இடது புறமாக நடந்தால் குடைவரைக் கோயில் பகுதிக்குச் செல்லலாம். உள்ளே பிள்ளையார், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என வெவ்வேறு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அச்சிலைகளின் சிறப்புக்களையும் தன்மைகளையும் டாக்டர் வள்ளி அவர்கள் விளக்குவதை விழியப் பதிவாக தமிழ் மரபு அறக்கட்டளையின்   வெளியீடாக வெளியிட்டிருந்தேன்.  அந்த விழியப்பதிவுகளைப் பற்றிய செய்திகளை  இங்கே காணலாம்.  http://tamilheritagefoundation.blogspot.de/2013/01/2013.html.  குறிப்பாக இந்தக் குடைவரை கோயில் பற்றிய விழியப் பதிவினை http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_30.html என்ற வலைப்பூவில் காணலாம்.

அற்புதமான குடைவரைக் கோயில். வெளியேயிருந்து பார்க்கும் போது இப்படி ஒரு சிற்பக் களஞ்சியம் உள்ளே இருப்பதைப் பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. எத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தகைய அற்புதப் படைப்புக்கள் நாம் அறியாமல் இருந்திருக்கின்றோம் என்று வியக்க வைக்கும் கலைப்படைப்புக்கள் இவை. சிற்பங்களின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே குடைவரைக் கோயிலின்  குகைப்பகுதியிலிருந்து வெளிவந்தோம். இரண்டு பக்க சுவர் பகுதி முழுவதும் கல்வெட்டுக்கள். இவ்வளவு நீளமாக சிறப்பாக நேர்த்தியாக பாறை சுவற்றில் செதுக்கிய இந்த எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இந்தச் சுவர் முழுவதும் உள்ள எழுத்துக்கள் தமிழ் வட்டெழுத்துக்களால் ஆனவை. கல்லெழுத்துக்கலை என்பதே ஒரு அற்புதக்கலை என்பதை எழுத்துக்கள்  பொறித்த இச்சுவற்றை பார்த்தபோது ஆழமாக உணரலாம்.

அடுத்து கோயிலில் அமர்ந்து பூக்கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லைப் பார்வையிட்டோம். இந்தப் பாறையானது அமர்ந்து பூத்தொடுப்பதற்காக  என்ற நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.   இன்று மரப்பலகையில் அமர நாற்காலி செய்கின்றோம். அன்றோ அமர்ந்து வேலை செய்ய கல்லிலேயே செதுக்கியிருக்கின்றார்கள்.

எங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் அந்த யாதவர் குல மக்களுக்கும் எங்கள் நடவடிக்கைகளில் ஆர்வம் வந்திருக்கும் போல.  சற்று இளைப்பாறி விட்டு நாங்கள் புறப்பட நினைக்கையில் பக்கத்திலேயே மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கேயும் பாறை சித்திரங்கள் இருக்கின்றன என்றும் கூறி நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அந்தப் பாறையில் இருந்த சித்திரங்களைப் பார்த்து புகைப்படமாகவும் விழியப் பதிவாகவும் பதிவு செய்து கொண்டோம். இப்பதிவைhttp://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_29.html   காணலாம். வரலாற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நம் செயல்பாடுகளைப் பார்க்கும் ஏனையோருக்கும் நமது ஆர்வம் தொற்றிக் கொள்ளும் என்பதை அனுபவப் பூர்வமாக என்னால் அன்று உணர முடிந்தது.

திருமலைக்கு வந்து விட்டு அவர்கள் குலசாமிக் கோயிலைப் பார்க்காமல் செல்வது எப்படி என்று ஒரு பெரியவர் கேட்க அங்கே அருகாமையில் இருந்த அவர்களின் குலதெய்வமான மடையக் கருப்பு சாமி கோயிலுக்கும் வாகனத்திலேயே புறப்பட்டோம். கோயிலின் முன் பக்கமே மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. வேலி போட்டது போல பெரிய அரசமரம் ஒன்றினைச் சுற்றி அருவாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான அருவாள்கள். பக்கத்தில் ஒரு சிறிய கோயில். கோவிலின் உள்ளேயும் அருவாள்கள்.இங்கு வருபவர்கள் தங்கள் நேர்த்திக்கடனைத் தீர்க்க கோயிலில் அருவாள் அல்லது மணி வாங்கி இப்படி வைப்பது வழக்கம் என்று தெரிந்து கொண்டேன். கோயில் சிறப்புக்களை விளக்கும் மண்ணின் குரல் வெளியீட்டில் விரிவாக இக்கோயிலைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம். (மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை மடையக்கருப்பு சாமி)

நாங்கள் பதிவு செய்து கொண்டிருக்கும் போதே எங்களோடு வந்து இணைந்து கொண்டவர்கள் எங்களுக்காக இளநீர் வாங்கி வந்து கொடுத்து அருந்த வைத்தனர். இதுதானே தமிழரின் விருந்துபசரிப்பு. திருமலையில் நாங்கள் பார்த்த ரசித்து பதிந்த காட்சிகள் மனதை நிறைந்தது. இளநீர் வயிற்றுப் பசியை நிறைத்தது.  அவர்களுடன் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சற்று நேரத்தில்  விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

இப்படி எத்தனை எத்தனை கிராமங்கள் நம் பாரம்பரிய புராதனச் சின்னங்களை நமக்காக வைத்துக் கொண்டு காத்திருக்கின்றன. அவற்றை அறிவது முக்கியம். அவற்றை பாதுகாப்பது நம் கடமை. தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுச் சின்னங்கள் பாதுகாப்புப் பணிகள் என்றும் தொடரும்!

No comments:

Post a Comment