Sunday, April 15, 2018

87. தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல்




எனது தொடர்ச்சியான தேடலில் நான் பல ஆய்வாளர்களைச் சந்திக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்துடன் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள். பலர் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ச்சியாக தம்மை ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுபவர்கள். அப்படி ஒருவர் தான் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பணியில் இருக்கும் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள். 

தமிழகத்தின் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். ஆரம்பக்கல்வி முதல் தமிழ் வழி பள்ளியில் படித்தவர். தமிழிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வினை எழுதி மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பின்னர் அரசு அதிகாரியாக இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர். 

திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தின் பேஸ்புக் வழி எனக்கு நட்பு ஏற்பட்டது. வரலாற்று ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சிந்து சமவெளி ஆய்வுகள் குறித்து அவர் மேற்கொண்டு வரும் மிக ஆழமான ஆய்வுகளின் சிறு செய்தித் துளிகளை அவ்வப்போது என்னுடன் அவர்  பகிர்ந்து கொள்வதுண்டு. இது எனக்குள் தமிழ் மொழிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான ஆய்வினைப் பற்றி தமிழகத்தில் மிக விரிவாக திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் விரிவுரைகள் ஆற்றி, இந்த ஆய்வினைத் தமிழக மக்களும் உலக அளவில் ஆய்வாளர்களும் அறிந்து கொள்ள எமது தமிழ் மரபு அறக்கட்டளை வழி நடவடிக்கைகள் மேற்கொள்ள நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. 


மலேசியத் தமிழராய்ப் பிறந்து உள்நாட்டில் ஏனைய சக சீன, மலாய் மக்களால் கலிங்கா, கெலிங்கா என அடையாளப்படுத்தப்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் எனக்குக் கலிங்க நாடான ஒடிஷாவிற்குச் சென்று வர திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களது அறிமுகமும் நட்பும் கூடுதல் ஊக்கத்தை அளித்தது. அதன் விளைவாக அண்மையில் ஒரு குறுகிய கால பயணம் மேற்கொண்டு ஒடிஷாவின் புவனேஷ்வர் மற்றும் பூரி பகுதிகளில் களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றுத் தகவல்கள் பல சேகரித்து வந்தேன். இடையில் கிடைத்த நேரத்தில் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் நேரில் சந்தித்து சீரிய தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. 


தெற்காசிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் ஏனைய இனத்தோரால் கலிங்கர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவதை ஒரு பொருளாக எடுத்துக் கொண்டு அதனை ஆய்வு செய்து ஒரு கட்டுரையாகவே இவர் படைத்திருக்கின்றார் என்ற செய்தி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. The new lights on the Kalinga in Indonesia என்ற தலைப்பில் அமைந்த இந்த ஆய்வுக்கட்டுரை International Linguistics and Dravidian Linguistics Journal ஆய்வேட்டில் வெளிவந்தது. 

தமிழர்கள், தமிழகம், தமிழக அரசியல் என வரும் போது மூவேந்தர்களை முன்வைத்தே தமிழக எல்லையினை விவரிக்கும் போக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை நாம் மறுக்கவியலாது. மூவேந்தர், முக்கொடி, மூன்று அரசியல் சின்னங்கள், மூன்று பேரரசுகள் என்ற விரிவாக்கப்பட்ட ஆளுமைகளை உள்ளடக்கியதாகவே தமிழகம் அடையாளப்படுத்தப்படுகிறது. சோழர்கள் எனும் போது தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், பூம்புகார், உறையூர், என்ற ஊர்களையும், பாண்டியர்களை அடையாளப்படுத்தும் போது மதுரையையும், சேரர்களை அடையாளப்படுத்தும் போது வஞ்சி, தொண்டி போன்ற ஊர்களையும் நாம் குறிப்பிடுகின்றோம். சங்க இலக்கியங்களிலோ சேர சோழ பாண்டிய மூவேந்தரது பங்களிப்புக்கள் நிறைந்திருக்கின்றன. மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் சங்கத் தமிழ்ப்பாடல்கள் அவர்கள் தமிழால் இணைந்திருந்தமையை உறுதிப் படுத்தும் சான்றுகளாக நம் முன்னே இருக்கின்றன. மூவேந்தர்கள் நில எல்லையின் அடிப்படையில் பிரிந்திருந்தாலும், அவர்கள் தத்தம்  நாடுகளைப் பிரித்து ஆண்டிருந்தாலும், தமிழால் இணைந்திருந்தனர் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. இதனைச் சான்று பகரும் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் நமக்கு இன்று ஆதாரங்களாகக் கிடைக்கின்றன. 


இன்று கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என மாநில வாரியாக எல்லைகள் அரசியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது. நெடுங்காலமாக, நம் இலக்கியச்சான்றோர் பலர் தமிழகத்தின் எல்லையைத் குறிப்பிடும் போது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை” என அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தின் எல்லை என்பது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை தானா” என திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நம் சிந்தனைக்குச் சவாலாக ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகின்றார். தனது தொடர்ச்சியான பல்வேறு ஆய்வுகளின் வழி தமிழகத்தின் எல்லை மிகப் பெரிது என்பதையும், அது இன்று நாம் அடையாளப்படுத்தும் சிந்து சமவெளிப்பகுதி, இமயம் என மிக விரிந்ததொரு பகுதி என்றும் தன் கருத்தினை முன் வைக்கின்றார். 


ஒடிஷாவில் நான் இருந்த ஐந்து நாட்களில் ஒடிஷா மக்களுக்கும் வாழ்வியலுக்கும் அதிலும் குறிப்பாக ஒடிஷாவின் ஆதிக்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைக் கூறுகள் இருப்பதை நான் என் களப்பணியின் போது மக்களை அவதானித்தும் உரையாடியும் அறிந்து கொண்டேன். ஒடிஷா மட்டுமல்ல.. இன்றைய இந்தியாவின் எல்லை, அதனையும் தாண்டி சிந்து சமவெளி வரை திராவிட பண்பாடும் நாகரிகமும் வாழ்வியலும் தான் நிறைந்திருந்தன எனத் தனது பல ஆய்வுகளின் வழி தொடர்ந்து கட்டுரைகளை எழுதிப் பதிப்பித்து வருகின்ற திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். இவரது ஆய்வுகள் இன்றைய கல்வியாளர்களையும் ஆய்வாளர்களையும் எட்ட வேண்டும். 




1988 முதல் இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தனது பணியின் காரணமாகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளைகளில் பழங்குடி மக்களிடம் உரையாடும் வாய்ப்பு இவருக்கு அதிகமாகவே கிடைத்திருக்கின்றது. இந்தப் பயணங்களும் கள ஆய்வுகளும் இவரது திராவிட மொழி தொடர்பான ஆய்விற்கு தரவுகளைத் தருகின்ற அருமையான வாய்ப்பாகவும் அமைந்து விட்டது ஒரு அதிசயமான நிகழ்வுதான். 


தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஒரியா மொழி மட்டுமல்லாது கோயா போன்ற திராவிட மொழிகளையும் இன்னும் சில பழங்குடி மக்களின் மொழிகளையும் இவர் கற்றுள்ளார் என்பதனை இவரோடு உரையாடும் போது நான் அறிந்து வியந்தேன். 

தமிழகத்தில் கூட இன்று சங்க இலக்கியம் கூறும் வாய்வியலைக் காண முடிவதில்லை. வளர்ந்து வரும் அதி வேகமான நாகரிக மாற்றங்கள், சமூக அரசியல் பிரச்சனைகள் ஆகியன, இன்று சங்கம் காட்டும் வாழ்வியல் நிலையிலிருந்து தமிழ் மக்கள் நீண்ட தொலைவில் வந்து விட்டதைக் காட்டுகிறது. தமிழகத்தின் பழங்குடி மக்களின் வாழ்வியலும் கூட சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்திற்கும் தேவைக்கும் தீனி போடும் வகையில் தான் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தன் பணிக்காகப் பயணிக்கும் போது அங்கு தான் காண்கின்ற பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகள் தனக்குச் சங்க கால வாழ்க்கையை தன் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாகக் கூறுகின்றார் இவர். ஒரு தமிழ் இலக்கிய மாணவரான தனக்கு, இப்பழங்குடியின மக்களைக் காணும் போது, தொல்காப்பிய பொருளதிகாரம் சுட்டும் அகத்திணையியல் சூத்திரம் தன் கண் முன்னே தென்படுவதும், திடீரென்று குறுந்தொகையில் நற்றிணையில் வருகின்ற செய்யுள் கூறும் காட்சி கண்முன்னே காட்டப்படுவதையும் தாம் உணர்ந்ததாகக் கூறுகின்றார். சங்ககாலத்தை விவரிக்கும் சங்கப்பாடல்களில் சொல்லப்படுகின்ற குறிஞ்சித் திணை வாழ்க்கை என்பதை இன்று தான் இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்திலும், ஒடிஷாவின் கந்தமால், கோராப்பூட் பகுதிகளில் வாழும் டோங்ரியா, கோண்டு பழங்குடி மக்கள் வாழ்வில் உறைந்து கிடப்பதைக் கண்டு அவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இவர். தன் கண்களின் முன்னே சங்க கால வாழ்வியலை இன்று நிகழ்கால வாழ்வியலாகக் காண்கின்றோமே என வியந்ததன் விளைவே இவரது மிகத் தீவிரமான ஆய்விற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன என்பதை அவரோடு உரையாடும் போதே அறிந்து கொள்ள முடிந்தது. 


இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். அதில் 1990களின் இறுதிகளில் இம்மாநிலத்தின் சிந்துவாரா பகுதிகளில் இன்று நம் தமிழகத்தில் உள்ள மதுரையிலிருந்து கேரளாவின் இடுக்கி செல்லும் பகுதியில் உள்ள தேனீ, கம்பம், தேக்கடி, குமிளி, போன்ற ஊர்களில் இருக்கின்ற ஊர்ப்பெயர்கள் அப்படியே மாற்றங்களின்றி மத்திய பிரதேசத்தின் சிந்துவாரா பகுதியில் இருக்கின்றன என்பது வியப்பல்லவா? இப்பகுதிகளில் திராவிடப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்பது இந்த ஊர்ப்பெயர் ஒற்றுமைக்கும் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் இருக்கும் தொடர்பினை காட்டுவதாக அமைகின்றது என்பதை மறுக்கவியலாது.


”தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல் தமிழக அரசியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது” என்ற உறுதியான கருத்துடன் செயல்படுகின்றார் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள். இக்கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகின்றேன்.

இந்தியாவின் பரந்த நிலப்பகுதிகளில் தமிழர் சான்றுகள் நிறைந்திருக்கின்றன. கல்வெட்டுக்களும் ஓலைச்சுவடி ஆய்வுகள் மட்டுமே தமிழர்களின் வாழ்வியலை நிர்ணயித்து விடக்கூடிய முழுமையான சான்றாதாரங்கள் அல்ல. பழங்குடி மக்களின் வாழ்வியல் கூறுகளை ஆராய்வதும், இந்தியா, பாக்கிஸ்தான், வங்கம், ஆப்கானிஸ்தான், போன்ற எல்லை நாடுகளிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்து விரிந்த ஆய்வினைத் தொடர்வதின் வழியே தான் தமிழ்க்குடியின் வரலாற்றுச் செய்திகளை நாம் நிலை நிறுத்த முடியும். தமிழர்கள் காலம் காலமாகத் திரைகடலோடி திரவியம் தேடியவர்கள். தமிழர்களின் வாழ்க்கை என்பது கூலிகளாகவும், அடிமைகளாகவும் வந்தவர்கள் என்று எழுதப்படக்கூடாது. தமிழர்கள் வீரர்களாக, வணிகர்களாக, புதிய நாடுகளைத் தேடி அங்கே தம் ஆளுமைகளைச் செலுத்தும் தைரியம் மிக்கவர்களாக, தமது தத்துவக் கோட்பாடுகளையும் சமய நம்பிக்கைகளையும் புதிய நிலங்களில் வேறூன்றியவர்களாக அறியப்பட வேண்டியவர்கள். இதனைக் கருத்தில் கொண்டு நம் ஆய்வுகள் மிக விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 


திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., சிந்து வெளி கண்டுபிடிப்புக்கள் தொடர்பாகச் செய்து வரும் ஆய்வுகள் தமிழர் தொன்மங்களை நாம் அறியச் செய்யும் சீறியதொரு முயற்சி. வரலாற்று ஆய்வு மட்டுமே என்று தன் பார்வையை குறுக்கிக்கொள்ளாமல் தம்மை ஒரு இலக்கியவாதியாகவும் இவர் அமைத்துக் கொண்டுள்ளார் என்பது இவருக்கிருக்கும் கூடுதல் சிறப்பு. ஒடிஷாவின் மிக உயர்ந்த அரசுப் பதவி, சிந்துசமவெளி ஆய்வுகள், பழங்குடி மக்கள் ஆய்வுகள் மற்றும் ஊர்ப்பெயர் ஆய்வு, என்பதோடு சங்கத்தமிழை ரசித்தும் திருக்குறளை சிந்தித்தும் கவிதைகளை படைத்து வருகின்றார் இவர். பன்முகத்தன்மை கொண்ட இந்த ஆளுமையுடன் நான் செலவிட்ட சில மணி நேரங்கள் எனது ஆய்வுக்கு விருந்தாக அமைந்தன. இந்த ஆய்வுத் தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து வெளியிடுவோம். அவற்றைப் பார்த்தும் கேட்டும், வாசித்தும் தமிழ் ஆய்வுலகம் பயன்பெற வேண்டும் என்பதே எமது அவா! 







Thursday, April 5, 2018

86. பூரி ஜெகநாத்




ஒடிஷா இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் ஒன்று. வங்கக்கடலை எல்லையாகவும் மேற்கு வங்கத்தையும், ஜார்கந்த், சட்டீஷ்கர், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களையும் எல்லையாகக் கொண்ட மாநிலம். முதலாம் ராஜேந்திரச் சோழனின் திருப்பதி கல்வெட்டில் ”ஒட்ட விசயா” எனப் பெயர் குறிப்புள்ளது. இன்று ஒடிஷா என அறியப்படும் இந்த மாநிலம் கலிங்கம் என வரலாற்றுப் பெயர்கொண்டு திகழ்ந்த ஒரு நிலப்பகுதியாகும். இன்றும் ”கலிங்கா” என்ற பெயருடன் பல நினைவுச் சின்னங்களும், அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் செயல்பட்டு வருவதை பரவலாகக் காண முடிகின்றது.

மௌரியப் பேரரசை ஆட்சி செய்த அசோக மாமன்னன், தனது ஆட்சிக் காலத்தின் 8ம் ஆண்டில் கலிங்கத்தை நோக்கிப் படையெடுத்தான். இது நிகழ்ந்தது கி.மு.261ம் ஆண்டில். இந்த கலிங்கப் போர் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இப்போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்தார்கள் என்றும் ஒன்றரை லட்சம் பேர் சிறைக்கைதிகளாக சித்ரவதைக்குள்ளாயினர் என்றும் கல்வெட்டுச் சான்றுகள் சொல்கின்றன. அதே வேளை இந்தப் போர் அசோகமன்னனை போரை கைவிட்டு, பௌத்த மதம் தழுவி, இன பௌத்த அறத்தை இந்தியா முழுமைக்கும் மற்றும் இலங்கை, ஏனையை கிழக்காசிய, தூரக் கிழக்காசிய நாடுகளுக்கும் பரவச் செய்த அரசியல் முன்னெடுப்பை நிகழ்த்திய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

நெடு நாட்களாக ஒடிஷா சென்று வரவும், அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி ஆராய்ந்து வரவும் எனக்கு ஆழ்ந்த விருப்பம் இருந்தது. எனது இனிய நண்பர் திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்கள் ஒடிஷா அரசில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர். அவரது உதவியுடன் நான்கு நாட்கள் ஒடிஷாவின் பல வரலாற்றுப் பகுதிகளுக்குச் சென்று பதிவுகளைச் செய்து வந்தேன். அப்படிச் சென்ற பகுதிகளில் வைணவப் பாரம்பரியத்தின் கூறுகள் கொண்டதாக அடையாளப்படுத்தப்படும் ஸ்ரீ ஜெகநாத் கோயிலுக்குச் சென்று வந்தேன். புவனேஸ்வர் நகரிலிருந்து ஏறக்குறைய 1 மணி நேர கார் பயணம் அது. இக்கோயிலுக்குள் கைப்பேசி புகைப்பட கருவிகள் ஏதும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

சாதாரண நாளில் ஒரு நாளுக்கு முப்பதாயிரம் பேர் வந்து செல்லும் ஒரு கோயில் இது. நினைக்கவே மலைப்பாக இருந்தது. நான் உள்ளே செல்ல எனக்கு ஒரு சுற்றுலாத்துறை அதிகாரியும், பெண் போலிஸ் அதிகாரியும் உடன் வந்ததால் எல்லா முக்கியப் பகுதிகளையும் பார்த்து சுவாமி வழிபாடும் செய்து வர முடிந்தது.

உள்ளே நுழைந்ததுமே இக்கோயில், அதன் சுற்றுச்சூழல் அனைத்துமே ஒரு எல்லைக்குள் வைத்து ஒப்பிடப்பட முடியாத ஒரு தனி உலகம் என்று புரிந்தது. இக்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். சிறிய கோயில்களாக பல நிறைந்திருக்கின்றன, ஒவ்வொன்றிலும் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆங்காங்கே சன்னிதிகளில் சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன. நாகர் தெய்வ வழிபாடு, பெண்தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்களிலான சன்னிதிகள் நிறைந்திருக்கின்றன. இவை பூர்வகுடி மக்களின் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் கூறுகளாக உள்ளன.

முதலில் வருவது பெரிய மடப்பள்ளி. இங்கு ஒடிஷாவில் இயல்பாக விளையும் காய்கறிகள் மட்டுமே சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மடப்பள்ளியைச் சுற்றி வருவதே ஒரு கண்காட்சி போலத்தான் இருக்கின்றது. பரங்கிக்காய், மரவள்ளிக்கிழங்கு போன்றவை அதிகம் காணப்பட்டன. உருளைக்கிழங்கு தக்காளி ஆகியவை பயன்படுத்தப்படுவதில்லை. விறகுகளை அடுக்கி அறைக்குள் பெரிய பெரிய அண்டாக்களில் பல அடுக்கு பாத்திரங்களில் சமையல் நடைபெறுகின்றது. தண்ணீரை அங்குள்ள குளத்திலிருந்து ஊழியர்கள் கொண்டு வந்து ஒரு பிரத்தியேக வழி அமைத்து அதன் வழி கொட்டி பாதை அமைத்து அனுப்புகின்றனர்.

அங்கு மண்பாண்டங்களில் சமையல் தயாரிப்புக்கள் செய்யப்படுகின்றன. ஒரு நாள் பயன்படுத்திய மண்பாண்டம் மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அன்றே சமையல் முடிந்ததும் மண்பானைகள் உடைக்கப்படுகின்றன. தினம் தினம் ஆயிரக்கணக்கான மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோயிலுக்கென்றே பிரத்தியேகமாக மண்பாண்டம் செய்ய ஒரு அருகாமை கிராமத்தில் தொழில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பது வியப்பளிக்கின்றது.

இக்கோயில் வளாகத்தில் முதலில் ஒரு புத்த விகாரை இருந்து பின் அது பெர்ஷிய மன்னனின் படையெடுப்பின் போது அம்மன்னனின் படையால் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் புத்த விகாரைக்குள் புத்தரின் பல் படிமத்தின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டதாகவும், புத்த விகாரைக்கு ஏற்பட்ட சிதைவு பாதிப்பினை ஏற்படுத்தும் என பயந்த பூர்வகுடி மக்கள் அவர்கள் வழிபாட்டில் உள்ள ”நீல் மாதவ்” என்ற கடவுளை இங்கு வழிபாட்டிற்காகப் பிரதிட்டை செய்திருக்கின்றனர். சிறிய கோயிலாக இது இன்றும் வழிபாட்டில் இருக்கின்றது. பழங்குடி இன மக்களின் இக்கடவுள் கருப்பு நிறத்திலான கடவுள். இந்த கடவுள் உருவத்தின் இருதயப் பகுதியில் முன்பிருந்த புத்த விகாரையில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் உடல் படிமத்தின் பல்லின் ஒரு பகுதி உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இக்கடவுளின் மறு தயாரிப்பு நிகழ்த்தப்பட்டு அந்தப் படிமம் இருதயப் பகுதியில் வைக்கப்பட்டு வழிபாடு தொடர்கின்றது. 12ம் ஆண்டில் மாற்றப்படும் இந்தத் தெய்வச் சிலையின் உருவம் கோயில் வளாகத்தின் ஒரு புறத்தில் உள்ள கல்லறைப்பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் புதைக்கப்படுகின்றது. அதன் எதிர்புரம் இருக்கும் கட்டிடத்தில் புதிய தெய்வ வடிவம் தயாரிக்கப்படுகின்றது. மிக நுணுக்கமான இந்த அமைப்பு வேறு எங்கும் நான் கேட்டிராத, கண்டிராத, அறிந்திராத ஒரு வழிபாட்டு முறை. மர வழிபாடு என்பது மிகப் பழமையான ஒரு வழிபாட்டுக் கூறு. நீல் மாதவ் தெய்வம் வேப்ப மரத்தினால் செய்யப்படுகின்றது என்பது இண்டஹ் மர வழிபாட்டுக் கூறுகள் தொடர்வதைக் காட்டுகின்றன.

இப்போதிருக்கும் ஜெகநாதர் ஆலயத்தை அமைத்தவர் கலிங்கமன்னன் இந்திரதியும்மன். இவர் அமைத்த கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ ஜெகநாதர் (கருப்பு வர்ணத்தில்) அவரோடு அவரது சகோதரி சுபத்திரா(மஞ்சள் நிறத்தில்), அவரது சகோதரர் பாலபத்திரன் (வெள்ளை நிறத்தில்) என வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் அமைத்திருக்கின்றார். மூலஸ்தானத்தில் உள்ள மூன்று தெய்வங்களின் வடிவங்களும் வேப்ப மரத்தினால் உருவாக்கப்படுகின்றன. சிறப்பான தகுதிகள் பெற்ற மரங்களே இத்தெய்வ வடிவங்களைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. மரத்தினால் சுவாமி வடிவம் அமைக்கப்படுவதால் இது அபிஷேகம் செய்யப்படாத மூலவர் வடிவமாக அமைகின்றது. சுவாமிக்குப் பண்டிகை காலச் சூழலைப் பொறுத்து உடை அலங்காரங்களைச் செய்கின்றனர்.

இன்றிருக்கும் கோயில் 11ம் நூற்றாண்டு தொடங்கி கட்டப்பட்டதாகும். கங்கா பேரரசின் கலிங்க மன்னர்கள் கட்டிய கட்டுமானப் பணி இது. வைணவர்களால் ஸ்ரீ ஜெகநாதர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக, 9வது அவதாரமாக இக்கோயிலில் காட்டப்படுகின்றார். விஷ்ணுவின் அதே 9வது அவதாரமாகப் புத்தரும் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பது விந்தை. புத்தரின் படிமம் ஒன்று இங்குத் தொடர்ச்சியாக மாதுகாக்கபப்ட்டு வருவதால் இந்த நம்பிக்கை இருக்கலாம் என்று கருதத் தோன்றுகின்றது.

இக்கோயிலில் மகாலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஜெகநாதர் கோயிலில் நிகழ்த்தப்படும் அனைத்துச் சடங்குகளும் மகாலட்சுமி சன்னிதியில் அனுமதி பெற்றே நடத்தப்படுகின்றது.

ஸ்ரீ ஜெகநாதரும்,சுபத்திரா, பாலபத்திரன் ஆகிய மூவரும் இருக்கும் பிரகாரம் தான் இக்கோயிலின் மையப்புள்ளி. இங்கு எறும்பு ஊர்வது போல மக்கள் நெரிசல் அலை மோதுகின்றது. ஒரு சில விநாடிகள் தான் முதலில் சாமி தரிசனம் கிடைக்கின்றது. பின்னர் தூரச் சென்று நின்று இறைவடிவங்களைக் காண முடிகின்றது. கோயில் முழுக்க உள்ளே புடைப்புச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. முன்னர் வர்ணப்பூச்சுக்கள் இல்லை. ஆனால் இப்போது சுவர் முழுக்க வர்ணச்சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. வைஷ்ணவ தசாவதாரக் கதைகளைச் சித்திரமாகவும் சிற்பங்களாகவும் உருவாக்கியிருக்கின்றனர். இது பிரம்மாண்டக் காட்சியாக இருக்கின்றது.

மனிதர்கள் சாப்பிடுவது போலவே சுவாமிக்கும் அதி காலை உணவு, காலை 10 மணிக்கு ஒரு உணவு, மதிய உணவு, இடையில் மீண்டும் ஒரு உணவு, மாலை உணவு இரவு உணவு என ஆறு வேளை வெவ்வேறு வகையான உணவு (நைவேத்தியம்) சுவாமிக்கு இங்குத் தயாரிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு 9,12, அல்லது 19ம் ஆண்டில் குருமார்கள் குறித்துக் கொடுக்கும் நாளில் கருவறையில் உள்ள மூன்று தெய்வ வடிவங்களின் புதிய வடிவத்திற்கான உருவாக்கம் பெரும் நிகழ்வு நடைபெறுகின்றது, இதனை ”நபக்கலேபரா” என அழைக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்ப மரத்தில் புதிய சாமியின் உருவங்கள் தயாரிக்கப்பட்டு அவை பிரகாரத்தில் வைக்கப்படுகின்றன. இப்போது இருக்கும் இந்த மூன்று தெய்வ வடிவங்களும் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வேப்ப மரத்தினாலான வடிவங்களாகும். புதிய வடிவங்கள் தயாரிக்கப்பட்டு பழைய வடிவங்கள் கல்லறை தோட்டத்தில் தக்க சடங்குகளுடன் புதைக்கப்படுகின்றன.

மூலவர் வடிவங்கள் மூன்றும் ஏறக்குறைய இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பூரி ஜெகநாதர், பௌத்தம்-பழங்குடி இன தெய்வம்-வைணவம் ஆகிய மூன்று வழிபாட்டு அம்சங்களையும் உள்ளடக்கிய வழிபாடு. இந்த ஆலயம் உலகின் வேறெங்கும் இல்லாத, தனித்துவமிக்க ஒரு வழிபாட்டு மையம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!